
அமைச்சர் பதவியில் தொடர விரும்புகிறாரா செந்தில் பாலாஜி?- பதில் அளிக்க உச்சநீதிமன்றம் 10 நாள் அவகாசம்
- அமைச்சராக தொடர விருப்பமா? இல்லையா? என்பதை தெரிவிக்க வேண்டும் என பதில் அளிக்க செந்தில் பாலாஜி தரப்புக்கு உத்தரவு.
- 10 நாள் அவகாசம் கொடுத்த நீதிமன்றம் இதற்கு மேல் வழங்கப்படாது என கண்டிப்பு.
பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக்கோரி வித்யா குமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ஜாமினை ரத்து செய்யக்கோரிய மனுவிற்கு பதில் மனு தாக்கல் செய்யக்கோரி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும், அமைச்சராக தொடர விருப்பமா? இல்லையா? என கேள்வி எழுப்பியிருந்தது. இது தொடர்பாக பதில் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்தியிருந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பதில் மனு தாக்கல் செய்யக்கோரி முறையாக நோட்டீஸ் ஏதும் கிடைக்கப்பெறவில்லை. மேலும் அவகாசம் தேவை என செந்தில் பாலாஜி தரப்பில் வாதிப்பட்டது.
இதற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்ததது. இந்த வழக்கு பல நாட்களாக நடைபெற்று வருகிறது. செந்தில் பாலாஜிக்கு அமைச்சராக தொடர விருப்பமா? இல்லையா? என்பதை தெரிவிக்க வேண்டும்.
அவகாசம் கேட்பது நியாயமற்ற முறையாக இருந்தாலும் கூட, இன்னும் 10 நாட்களில் பதில் அளிக்க வேண்டும். மேற்கொண்டு கால அவகாசம் வழங்கப்படாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்தது.
போக்குவரத்துத்துறையில் வேலைக்கு லஞ்சம் பெற்றதாக கூறப்படும் வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு (2024) செப்டம்பர் 26-ந்தேதி ஜாமின் வழங்கியது.
இந்த ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என சென்னையை சேர்ந்த வித்யா குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, ஏ.ஜி.மாசி அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
கடந்த 12-ந்தேதி நடந்த விசாரணையின்போது, அமைச்சராக தொடர விருப்பமா? என செந்தில் பாலாஜியிடம் கேட்டுத் தெரிவிக்க வேண்டும் என அவர் தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.