உலகம்

உக்ரைன் வெளியுறவு மந்திரியை நியமனம் செய்தார் அதிபர் ஜெலன்ஸ்கி

Published On 2024-09-05 14:57 GMT   |   Update On 2024-09-05 14:57 GMT
  • அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என அதிபர் ஜெலன்ஸ்கி கடந்த வாரம் தெரிவித்தார்.
  • நீதித்துறை உள்பட 4 முக்கிய மந்திரிகள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

கீவ்:

ரஷியா உக்ரைன் மீது படையெடுத்து இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இன்னும் சண்டை முடிவுக்கு வரவில்லை. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதம் வழங்கி வருவதால் ரஷியாவின் தாக்குதலை எதிர்கொண்டு வருகிறது.

ரஷியாவில் உள்ள குர்ஸ்க் மாகாணத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தைப் பிடித்துவைத்து, ரஷியாவின் திட்டத்தை முறியடிக்க உக்ரைன் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையே, அதிபர் ஜெலன்ஸ்கி தலைமையிலான அமைச்சரவையில் இருந்து 4 முக்கிய மந்திரிகள் ராஜினாமா செய்துள்ளனர்.

ஐரோப்பிய விவகாரங்களுக்கான துணை பிரதமர் ஒல்கா ஸ்டெபானிஷினா, தொழில்துறை மூலோபாய மந்திரி ஒலெக்சாண்ட்ர் கமிஷின், நீதித்துறை மந்திரி டெனிஸ் மலியுஸ்கா, சுற்றுச்சூழல் துறை மந்திரி ருஸ்லான் ஸ்ரிலெட்ஸ் ஆகிய 4 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

அமைச்சரவை மாற்றம் இருக்கும் என கடந்த வாரம் குறிப்பிட்டிருந்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, பாராளுமன்றத்திற்கான அந்தக் கட்சியின் தலைவர், தற்போது இருக்கும் மந்திரிகளில் பாதிக்கும் மேற்பட்டோர் மாற்றப்படுவார்கள் எனவும் குறிப்பிட்டார்.

மேலும், உக்ரைன் வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபா தனது பதவியை நேற்று திடீரென ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், உக்ரைனுக்கான புதிய வெளியுறவு மந்திரியாக ஆண்ட்ரி சைபிஹாவை நியமனம் செய்து அதிபர் ஜெலன்ஸ்கி உத்தரவிட்டார்.

ரஷியாவுக்கு எதிராக போர் நடந்து வரும் நிலையில், வெளியுறவு மந்திரி உள்ளிட்ட மந்திரிகள் ராஜினாமா செய்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News