உலகம் (World)

பொருளாதார மந்த நிலையிலும் ராணுவ பட்ஜெட்டை 7.2 சதவீதம் உயர்த்திய சீனா

Published On 2024-03-06 12:55 GMT   |   Update On 2024-03-06 12:55 GMT
  • சீனாவின் ராணுவ பட்ஜெட் இந்தியாவை விட 3 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது
  • கிழக்கு லடாக் (eastern Ladakh) பகுதி சச்சரவு 4 வருடங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது

வல்லரசு நாடுகளில் ஒன்றான இந்தியாவின் அண்டை நாடான சீனா, பொருளாதார சூழல் நலிவடைந்துள்ள நிலையிலும் வருடாந்திர ராணுவ பட்ஜெட்டை 7.2% அதிகரித்துள்ளது.

தற்போது அமெரிக்காவிற்கு அடுத்து மிக பெரிய தொகையை ராணுவத்திற்கு செலவிடும் நாடாக சீனா உள்ளது.

இதனால், சீனாவின் ராணுவ பட்ஜெட் தொகை $230 பில்லியனுக்கும் மேல் அதிகரித்துள்ளது. இந்த தொகை இந்தியாவின் ராணுவ பட்ஜெட் தொகையை விட 3 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவின் ராணுவ தரைப்படையில் 20 லட்சம் வீரர்கள் உள்ளனர்.

தைவானை தனது நாடாக கூறி வரும் சீனாவிற்கு எதிராக அமெரிக்கா களம் இறங்கியுள்ளது. இப்பின்னணியில், ராணுவ பட்ஜெட்டில் இந்த ஒதுக்கீடு பார்க்கப்படுகிறது.

இந்திய கடல் (Indian Ocean) பகுதியில் ராணுவ மற்றும் அணு ஆயுத கட்டமைப்பை அதிகரிக்கும் நோக்கில் சீனா எடுத்திருக்கும் இந்த முடிவை இந்தியா கவனத்தில் கொள்ள வேண்டும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே கிழக்கு லடாக் (eastern Ladakh) பகுதியில் ஏற்பட்ட சச்சரவு தொடங்கி 4 வருடங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது.


இந்தியாவின் ராணுவ பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ரூ.6.2 லட்சம் கோடி தொகையில் 28 சதவீதம் மட்டுமே ராணுவத்தை நவீனப்படுத்த செலவிடப்பட உள்ளது. மீதமுள்ள தொகையில் பெரும்பகுதி ஊதியம் மற்றும் பென்சன் தொகைக்காகவே செலவிடப்படுகிறது.

கொரோனாவிற்கு பிந்தைய காலகட்டத்தில் சீன பொருளாதாரம் பிற நாடுகளை போல் வளர்ச்சி அடையாமல் மந்தமடைய தொடங்கியது. அதிகரிக்கும் விலைவாசி உயர்வால் அந்நாட்டில் இள வயது ஆண்கள் மற்றும் பெண்கள் திருமணம் செய்து கொள்வதை தவிர்த்து வருகின்றனர். மேலும், தம்பதியர் குழந்தை பெற்று கொள்வதற்கு தயங்கி வருகின்றனர்.

இந்த நெருக்கடிக்கு இடையிலும் சீனா ராணுவ பலத்தை அதிகரிக்க எடுக்கும் முயற்சிகளை கை விடவில்லை.

Tags:    

Similar News