உலகம்

போலியோ முகாம் தொடங்கும் முன் காசாவை தாக்கிய இஸ்ரேல் - ஒரே நாளில் 49 பேர் பலி

Published On 2024-09-01 10:26 GMT   |   Update On 2024-09-01 10:26 GMT
  • இன்று [செப்டம்பர் 1] முதல் 3 நாட்களுக்கு தினமும் 8 மணி நேர போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே உடன்பாடு எட்டப்பட்டது.
  • நசீரத் பகுதியில் நடந்த வான்வழித் தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் 9 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்

பாலஸ்தீன நகரங்களின்மீது கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 40,000 திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமே ஆவர். தொடர் போரால் காசா நகரம் முழுவதுமாக உருக்குலைந்துள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்களும் சுகாதார சேவைகளும் கிடைக்காமல் தோற்று பரவல் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் காசாவில் உள்ள 6.4 லட்சம் குழந்தைகளுக்கு உலக சுகாதார அமைப்பு போலியோ சொட்டு முகாம் நடத்த முன்வந்தது. இதனை முன்னிட்டு இன்று [செப்டம்பர் 1] முதல் 3 நாட்களுக்கு  தினமும் 8 மணி நேர போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே உடன்பாடு எட்டப்பட்டது. ஆனாலும் நேற்றைய தினமே பல இடங்களில் மாதிரி முகாம்கள் நடத்தப்பட்டன.

 

அந்த வகையில், நேற்றைய தினம் நாசர் மருத்துவமனை வார்டுகளில் அடையாள முகாம் நடத்தி, சில குழந்தைகளுக்கு மருத்துவ அதிகாரிகள் போலியோ சொட்டு மருந்து வழங்கினர். இந்நிலையில், நேற்றய தினம் காசாவில் இஸ்ரேல் படையினர் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ மற்றும் சமூக நலப் பணியாளர்கள் சொட்டு மருந்து முகாம்களுக்கு தயாரான நிலையில், காசா பகுதியில் அமைந்த அகதிகள் முகாம்களில் ஒன்றான நசீரத் பகுதியில் நடந்த வான்வழித் தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் 9 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் காசாவில் நேற்று அடுத்தடுத்து தொடர்ந்து நடந்த தொடர் தாக்குதல்களில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனால் ஒரே நாளிலில் பலி எண்ணிக்கை 49 ஆக உயர்ந்தது.

Tags:    

Similar News