உலகம் (World)

டிரம்ப்-ஐ சுடுவதற்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளுக்கு தடை - ஜோ பைடன் வலியுறுத்தல்

Published On 2024-07-17 03:01 GMT   |   Update On 2024-07-17 03:01 GMT
  • வேட்பாளர்கள் தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர்.
  • டொனால்டு டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் ஆகியோரும் களத்தில் உள்ளனர்.

அதிபர் தேர்தலை ஒட்டி அந்நாட்டு தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. இரு வேட்பாளர்களும் தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

இதில் டிரம்ப் நூலிழையில் உயிர்தப்பினார். இந்த சம்பவம் உலக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்திய நபர், அதே இடத்தில் வைத்து சுட்டு வீழ்த்தப்பட்டார். இந்த சம்பவம் குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், முன்னாள் அதிபர் மீது துப்பாக்கி சூடு நடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட AR-15 ரக துப்பாக்கிகளுக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட வேண்டும் என்று அதிபர் பைடன் தெரிவித்துள்ளார்.

லாஸ் வேகாசில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அதிபர் பைடன், "போரில் பயன்படுத்தக்கூடிய இது போன்ற ஆயுதங்களை அமெரிக்க வீதிகளில் இருந்து அகற்ற என்னுடன் இணையுங்கள். டொனால்டு டிரம்ப்-ஐ சுடுவதற்கு AR-15 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டது. இவற்றின் பயன்பாட்டை சட்டவிரோதமாக்க வேண்டும்," என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News