உலகம் (World)

மண் காப்போம் இயக்கத்திற்கு ஆதரவாக புர்ஜ் கலிஃபாவில் லேசர் ஷோ

Published On 2022-07-09 06:19 GMT   |   Update On 2022-07-09 06:19 GMT
  • சென்னை ரெயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மின் விளக்குகள் ஒளிரவிடப்பட்டன
  • மண் காப்போம் இயக்கத்திற்கு ஆதரவு அளித்துள்ள அனைத்து மக்களுக்கும் சத்குரு நன்றி தெரிவித்தார்

உலகின் மிக உயரமான கட்டிடமாக விளங்கும் துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபாவில் மண் காப்போம் இயக்கத்திற்கு ஆதரவாகவும், மண் அழிவை தடுக்க உலகின் கவனத்தை ஈர்க்கவும் சிறப்பு லேசர் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

2 நிமிட லேசர் ஷோவில் மண் அழிவு குறித்தும் அதை உடனே சரி செய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும் சத்குரு பேசியுள்ள செய்தி மற்றும் அவருடைய 100 நாள் மோட்டார் சைக்கிள் பயண காட்சிகள், மண் காப்போம் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள சர்வதேச தலைவர்கள், விஞ்ஞானிகள், பிரபலங்களின் காணொளிகளும் ஒளிபரப்பப்பட்டன.

இது தொடர்பான நிகழ்ச்சியில் சத்குரு அவர்கள் ஆன்லைன் வாயிலாக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், "மண் வளத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் ஐக்கிய அரபு அமீரகத்தின் தொலைநோக்கும் பார்வையும், செயல்களும் பாராட்டுக்குரியதாக உள்ளது. மண் காப்போம் இயக்கத்திற்கு ஆதரவு அளித்துள்ள அனைத்து மக்களுக்கும் நன்றிகள்.

சவாலான மோட்டர் சைக்கிள் பயணம் முடிந்துவிட்டது. ஆனால், உண்மையில் கடினமான வேலை இப்போது தான் தொடங்கியுள்ளது. மண் வளத்தை மீட்டெடுக்கும் கொள்கைகள் எவ்வளவு வேகமாக நாம் நடைமுறைப்படுத்த போகிறோம் என்பது தான் இப்போதைய முக்கிய சவால்.

மண் காப்போம் இயக்கம் உலகம் முழுவதும் 'மண்' குறித்த பார்வையை மாற்றியுள்ளது. இவ்வியக்கத்தின் தாக்கத்தால் மக்களும், அரசாங்கங்களும் மண் வளத்தை மீட்டெடுக்கும் கொள்கைகளை உருவாக்குவது குறித்து கலந்துரையாடல் நிகழ்த்த தொடங்கியுள்ளன. இத்திட்டங்களுக்கான நிதிகளும் ஒதுக்கப்பட தொடங்கியுள்ளன. இருப்பினும், அந்த சட்டங்கள் களத்தில் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும் வரை நம்முடைய பணி நிறைவு பெற போவதில்லை" என்றார்.

Actyv.ai நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் உலக சி.இ.ஓ திரு. ரகு சுப்பிரமணியன் மற்றும் 1Digi Investment Management நிறுவனம் இந்நிகழ்ச்சியை நடத்த நன்கொடை வழங்கியது. இது குறித்து திரு. ரகு சுப்பிரமணியன் கூறுகையில், "சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் நிர்வாகம் ஆகிய மூன்றும் எங்கள் வர்த்தகத்தின் முக்கிய அம்சங்கள். சத்குரு தலைமையிலான மண் காப்போம் இயக்கத்துடன் இணைந்து செயலாற்றுவதில் Actyv.ai நிறுவனம் பெருமை கொள்கிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திருமதி. மரியம் பிண்ட் முகமது அல்ஹெரி பேசுகையில், "எங்களுடைய அரசு மண் காப்போம் இயக்கத்திற்கு முழு ஆதரவு அளித்துள்ளது. இவ்வியக்கத்துடன் இணைந்து நாங்கள் செய்ய உள்ள பணிகள் எதிர்கால சந்ததியினருக்காக மதிப்புமிக்க மண்ணை பாதுகாக்கும் பணியின் தொடர்ச்சியாக இருக்கும்" என்றார்.

புர்ஜ் கலிஃபா மட்டுமின்றி, நயாகரா நீர் வீழ்ச்சி, ஜெனிவாவில் உள்ள ஜெட் டியோ, தி மோண்ட்ரியல் ஒலிம்பிக் மைதானம், டொரோண்டோ டிவி டவர், மும்பை மாநகராட்சி கட்டிடம், சென்னை மற்றும் ஹூப்ளி ரயில் நிலையங்கள் என 50-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் காப்போம் இயக்கத்திற்கு ஆதரவாக மின் விளக்குகள் ஒளிரவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச சுற்றுச்சூழல் இயக்கமான மண் காப்போம் இயக்கத்திற்கு இதுவரை 74 நாடுகளும், ஐ.நா அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இவ்வியக்கம் கடந்த 3 மாதங்களில் 390 கோடி மக்களை சென்றடைந்துள்ளது. மேலும், 8 இந்திய மாநிலங்கள் இவ்வியக்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டுள்ளன.

Tags:    

Similar News