உலகம்

வடகொரியா மேலும் ஒரு ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டல்

Published On 2023-01-01 05:04 GMT   |   Update On 2023-01-01 10:53 GMT
  • உலக நாடுகள் எதிர்ப்பை மீறி வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி அச்சுறுத்தி வருகிறது.
  • கடந்த ஆண்டு மட்டும் 70-க்கும் மேற்பட்ட ஏவுகணை சோதனை நடத்தியது.

சியோல்:

அமெரிக்காவும், தென் கொரியாவும் இணைந்து ஆண்டுதோறும் மேற் கொண்டு வரும் கூட்டு ராணுவ பயிற்சி தங்கள் மீது படையெடுப்பதற்கான ஒத்திகை என்று வடகொரியா கூறி வருகிறது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் உலக நாடுகள் எதிர்ப்பை மீறி வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி அச்சுறுத்தி வருகிறது.

கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் வகை ஏவுகணைகளை வட கொரியா சோதனை செய்ய ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்துள்ள போதிலும் அந்த சோதனைகளை அந்நாடு தொடர்ந்து செய்து வருகிறது.

கடந்த ஆண்டு மட்டும் 70-க்கும் மேற்பட்ட ஏவுகணை சோதனை நடத்தியது. இதன் தொடர்ச்சியாக அந்நாடு நேற்று வடகொரியா தலைநகர் பியோங்கி யாங்குக்கு தெற்கே உள்ள தீவில் இருந்து 3 ஏவுகணைகளை கிழக்குநோக்கி வீசியது.

இந்த ஏவுகணைகள் கொரியா தீவகற்பத்துக்கும். ஜப்பானுக்கும் இடையே உள்ள கடல் பகுதியில் விழுந்தது. இந்த சூழ்நிலையில் புத்தாண்டு தினமான இன்றும் வடகொரியா மேலும் ஒரு ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டி உள்ளது.

இன்று அதிகாலை உள்ளூர் நேரப்படி 2. 50 மணி அளவில் பியோங்கி யாங்கில் இருந்து கிழக்கு கடல் பகுதியை நோக்கி குறுகிய தூர பாலிடிக்ஸ் ஏவுகணையை வீசி சோதனை நடத்தியதாக தென்கொரியா கூட்டு படையினர் தெரிவித்து உள்ளனர். இந்த ஏவுகணை 400 கிலோமீட்டர் தூரத்துக்கு சீறிப்பாய்ந்து சென்று கடலில் விழுந்ததாக தென் கொரியா கூறி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் வடகொரியா 4 ஏவுகணை சோதனை நடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த சோதனைக்கு பின் நடைபெற்ற முக்கிய ஆலோசனை கூட்டத்தில் வட கொரியா அதிபர் கிம் ஜாங்அன் கலந்து கொண்டார். இந்த கூட்டத்துக்கு பிறகு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அணு ஆயுத உற்பத்தியை வேகமாக வடகொரியா அதிகரிக்க உள்ளது. அமெரிக்கா மற்றும் பிற பகைமை நாடுகளின் ஆபத்தான போக்குக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வடகொரியாவின் நலனை பாதுகாக்கும் நோக்கிலும் நாட்டில் ராணுவ பலம் இரு மடங்கு ஆக்கப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News