உலகம் (World)

அமெரிக்காவில் அணுசக்தி ஏவுதளம் மீது பறந்த சீன உளவு பலூன்- பென்டகன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

Published On 2023-02-03 05:10 GMT   |   Update On 2023-02-03 08:26 GMT
  • அமெரிக்க ரேடார்களின் பார்வையில் மொன்டானா ஏவுதளத்தின் மேல் பகுதியில் ஒரு மர்ம பலூன் பறப்பதை கண்டுபிடித்தனர்.
  • அமெரிக்க அணு ஆயுத ஏவுதளம் மீது பறந்த சீன உளவு பலூன், 3 பேருந்துகளின் அளவுக்கு பெரிதாக இருந்தது.

வாஷிங்டன்:

அமெரிக்காவின் மொன்டானா பகுதியில் அணுசக்தி ஏவுதளம் உள்ளது.

இந்த பகுதி முழுவதும் ராணுவத்தின் முழு கண்காணிப்பில் இருக்கும். இந்த நிலையில் அமெரிக்க ரேடார்களின் பார்வையில் மொன்டானா ஏவுதளத்தின் மேல் பகுதியில் ஒரு மர்ம பலூன் பறப்பதை கண்டுபிடித்தனர்.

உடனடியாக இந்த தகவல் ராணுவ உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அதிர்ச்சி அடைந்த அவர்கள் அந்த பலூன் எங்கிருந்து வந்தது? எந்த நாட்டை சேர்ந்தது என்பது பற்றி ஆய்வு செய்தனர். இதில் அந்த பலூன் சீன நாட்டின் தயாரிப்பு என கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக அந்த மர்ம பலூனை சுட்டு வீழ்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அணுசக்தி ஏவுதளம் மீது பறக்கும்போது பலூனை சுட்டு வீழ்த்தினால் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால் அந்த முயற்சியை அமெரிக்க ராணுவம் கைவிட்டது.

இது தொடர்பாக பென்டகன் செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் பாட் ரைடர் கூறியதாவது:-

அமெரிக்க அணு ஆயுத ஏவுதளம் மீது பறந்த சீன உளவு பலூன், 3 பேருந்துகளின் அளவுக்கு பெரிதாக இருந்தது. அதனுள் என்னென்ன இருந்தது என்பதை கண்டுபிடிக்க முயற்சி மேற்கொண்டுள்ளோம்.

இந்த பலூன் வணிக ரீதியான பலூன் போல தெரியவில்லை. அதற்கான பாதையிலும் அந்த பலூன் பறக்க வில்லை. அதனை சுட்டு வீழ்த்தினால் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால் அதனை செய்ய நாங்கள் முன்வரவில்லை. என்றாலும் அணு ஆயுத ஏவு தளத்தில் இருந்து எந்த தகவலையும் அறிந்த கொள்ள முடியாத அளவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, என்றார்.

Tags:    

Similar News