search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருச்செந்தூர் கோவிலில் நாளை மாசித்திருவிழா கொடியேற்றம்
    X

    திருச்செந்தூர் கோவிலில் நாளை மாசித்திருவிழா கொடியேற்றம்

    • விழா நாளை தொடங்கி 12 நாட்கள் நடைபெறுகிறது.
    • மார்ச் 6-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் மாசித்திருவிழா நாளை (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 12 நாட்கள் நடைபெறுகிறது.

    முதல் நாள் திருவிழாவான நாளை அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. அதிகாலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் கும்ப லக்னத்தில் கொடியேற்றம் நடக்கிறது.

    மாலை 4.30 மணிக்கு மேல் அப்பர் சுவாமிகள் தங்க சப்பரத்தில் எழுந்த ருளி உழவாரப்பணி செய்து கோவில் சேர்தல் நடக்கிறது. இரவு 7மணிக்கு மேல் ஸ்ரீ பெலிநாயகர் அஸ்திரதேவனுடன் தந்தப் பல்லக்கில் கோவிலில் இருந்து புறப்பட்டு ஒன்பது சந்திகளில் உலாவந்து கோவில் சேர்தல் நடக்கிறது.

    5-ம் திருவிழாவான மார்ச் 1-ந் தேதி(புதன்கிழமை) அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. அன்றைய தினம் மேல கோவிலில் இரவு 7.30 மணிக்கு மேல் குட வருவாயில் தீபாராதனை நடைபெற்று சுவாமியும், அம்பாளும் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளில் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடக்கிறது.

    2-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு சுவாமி கோ ரதத்தில் எழுந்தருளி வீதியுலா நடக்கிறது. இரவு 8மணிக்கு சுவாமி வெள்ளி தேரிலும் அம்மன் இந்திர விமானத்திலும் எழுந்தருளி வீதியுலா நடக்கிறது.

    7-ம் திருவிழாவான 3-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.

    அன்று அதிகாலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் கும்ப லக்னத்தில் சண்முகபெருமான் உருகு சட்ட சேவையும், காலை 9 மணி அளவில் சுவாமி சண்முகர் வெற்றிவேல் சப்பரத்தில் எழுந்தருளி பிள்ளையன் கட்டளை மண்டபம் சேர்தல், அங்கு சுவாமிக்கு அபிசேகம் அலங்கார தீபாராதனை நடக்கிறது. அன்று மாலை 4.30 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் சிவப்பு சாத்திக் கோலத்தில் எழுந்தருளி 8 ரத வீதிகளிலும் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடக்கிறது.

    8-ம் திருவிழாவான 4-ந் தேதி (சனிக்கிழமை) பகல் 11.30 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் வள்ளி தெய்வானையுடன் பச்சை சாத்தி சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடக்கிறது.

    9-ந் திருவிழாவான 5-ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) சண்முகர் சேர்க்கையை பொறுத்து பூஜை காலங்கள் நடைபெறும். இரவு 10 மணிக்கு தேர் கடாட்சம் நடக்கிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருவிழாவான 6-ந்தேதி (திங்கட்கிழமை) தேரோட்டம் நடக்கிறது. அன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

    அன்று காலை 7 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் தேரோட்டம் நடக்கிறது.

    11-ம் திருவிழாவான 7-ந்தேதி (செவ்வாய் கிழமை) அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து மற்ற கால பூஜை நடக்கிறது. அன்று மாலை 4.30 மணிக்கு சுவாமி அம்பாள் யாதவர் மண்டகப்படி வந்து அங்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனைக்கு பின் இரவு 7மணிக்கு மேல் நெல்லை நகரத்தார் மண்டகப்படி சேர்த்தல், அங்கு 10.30 மணிக்கு மேல் தெப்ப உற்சவம் நடக்கிறது.

    12-ந் திருவிழாவான 8-ந்தேதி மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் எட்டு வீதிகளில் உலா வந்து வடக்கு ரத வீதியில் உள்ள 14 ஊர் செங்குந்த முதலியார் மண்டபம் சேர்தல், அங்கு இரவு 9 மணிக்கு சுவாமி அம்பாள் மலர் கேடய சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து கோவில் சேர்தல் நடைபெற்று விழா நிறைவுபெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடு களை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், கோவில் இணை ஆணையர் கார்த்திக் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×