search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் அருகே பனியன் குடோன்-நூல் தயாரிக்கும் ஆலையில்  தீ விபத்து
    X

    திருப்பூர் அருகே பனியன் குடோன்-நூல் தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

    • பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர்.
    • பொக்லைன் எந்திரங்கள் மூலம் எரிந்து சேதமடைந்த பனியன் துணிகளை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் அடுத்துள்ள பல்லடத்தை சேர்ந்தவர் கார்த்திக். இவர் மங்கலம் பூமலூரில் கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து பழைய பனியன் துணிகள் சேகரிக்கும் குடோன் வைத்துள்ளார். இவரது குடோனுக்கு அருகில் இப்ராஹிம் என்பவர் பழைய பஞ்சுக்கழிவுகளை மறுசுழற்சி செய்து நூல் தயாரிக்கும் ஆலை நடத்தி வருகிறார்.

    இந்தநிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் நூல் தயாரிக்கும் ஆலையில் இருந்து கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் தீ மளமளவென கொளுந்து விட்டு எரிய தொடங்கியது. மேலும் ஜன்னல் வழியாக அருகில் இருந்த பனியன் துணி குடோனுக்கும் பரவி பற்றி எரிந்தது.

    இதையடுத்து அங்கு பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. பின்னர் இது குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு தீயணைப்பு நிலைய வீரர்கள் 5 மணி நேரமாக தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இந்த தீ விபத்தில் குடோனில் வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான பனியன் துணி கழிவுகள் மற்றும் பனியன் ரோல்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளது.

    இதனிடையே பனியன் வேஸ்ட் குடோனில் தீயை அணைத்து கொண்டிருக்கும் போது மேற்கூரை முழுவதுமாக இடிந்து விழுந்ததால் தீயினை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு துறை வீரர்கள் மிகவும் போராடினர். கூடுதல் தண்ணீர் லாரிகள் வரவழைக்கப்பட்டு தீயை அணைத்தனர்.

    பொக்லைன் எந்திரங்கள் மூலம் எரிந்து சேதமடைந்த பனியன் துணிகளை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் தீ விபத்தில் தப்பிய பனியன் ரோல்களை அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் அப்புறப்படுத்தி வருகின்றனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து மங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×