search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சோழவரம் அருகே பயங்கரம்: ஊராட்சி துணைத்தலைவர், அண்ணனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு- ஒருவர் பலி
    X

    சோழவரம் அருகே பயங்கரம்: ஊராட்சி துணைத்தலைவர், அண்ணனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு- ஒருவர் பலி

    • சோழவரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றனர்.
    • அசம்பாவிதத்தை தடுக்க நெடுவரம்பாக்கம் கிராமத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    பொன்னேரி:

    சோழவரம் அருகே உள்ள நெடுவரம்பாக்கத்தை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது30). தனியார் பள்ளி யில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    இவரது தம்பி இளங்கோ வன். இவர் நெடுவரம் பாக்கம் ஊராட்சி துணைத் தலைவராக உள்ளார். அண்ணன்-தம்பி இருவருக்கும் திருமணமாகி தனித்தனியாக குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள்.

    அதே பகுதியில் உள்ள வாலிபர்கள் சிலருக்கு இடையே நேற்று மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட னர்.

    இந்த மோதல் தொடர்பாக ஒரு தரப்பினருக்கு ஆதரவாக ஊராட்சி துணைத்தலைவர் இளங்கோவன், அவரது அண்ணன் லட்சுமணன் ஆகியோர் நேற்று இரவு சோழவரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றனர்.

    பின்னர் அண்ணன்-தம்பி இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.

    நெடுவரம்பாக்கம் காலனி அருகே வயல்வெளி பகுதியில் வந்து கொண்டு இருந்தபோது கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மர்ம கும்பல் வழிமறித்தனர்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த லட்சுமணனும், இளங்கோவனும் தப்பி ஓட முயன்றனர். ஆனால் அவர்களை சுற்றி வளைத்து மர்ம கும்பல் சரமாரியாக வெட்டினர். இதில் தலை, கழுத்தில் பலத்த வெட்டுக் காயம் அடைந்த லட்சுமணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    கொலை வெறி கும்பலிடம் இருந்து தப்பிக்க இளங்கோவன் ஓட்டம் பிடித்தார். ஆனால் அவரையும் ஓட, ஓட விரட்டி வெட்டினர். இதில் இளங்கோவனின் இரண்டு கைகளும் துண்டாகி தொங்கியது. மேலும் கழுத்து, தலையிலும் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது.

    இதற்கிடையே அலறல் சத்தம் கேட்டு கிராமமக்கள் திரண்டு வந்ததும் கொலை கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து சோழவரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உயிருக்கு போராடிய ஊராட்சி துணைத்தலைவர் இளங்கோவனை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலியான அவரது அண்ணன் லட்சுமணன் உடல் பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது.

    கொலையாளிகள் யார்? என்று உடனடியாக தெரியவில்லை. கொலையாளிகளை படிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அங்கு பதட்டமான சூழல் நிலவுகிறது. இதனால் அசம்பாவிதத்தை தடுக்க நெடுவரம்பாக்கம் கிராமத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    கொலையுண்ட லட்சுமணனுக்கு பவித்ரா என்ற மனைவியும் 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். கணவர் கொலையுண்டது பற்றி அறிந்ததும் பவித்ரா கதறி துடித்தது காண்போரை கலங்க வைத்தது.

    நெடுவரம்பாக்கம் காலனியில் உள்ள அம்பேத்கர் சிலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடைக்கப்பட்டது. இது தொடர்பாக சிலரை போலீசார் கைது செய்து இருந்தனர். இது தொடர்பாக இருதரப்பினருக்கு இடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்தாக தெரிகிறது.

    போலீசில் காட்டிக் கொடுத்துவிட்டதாக ஒரு தரப்பினரை எதிர்தரப்பினர் குற்றம்சாட்டி தகராறில் ஈடுபட்டு வந்து உள்ளனர்.

    இதன் தொடர்ச்சியாக நேற்றும் இருதரப்பினருக்கும் இடையே அடிதடி மோதல் ஏற்பட்டது. இது குறித்து போலீசில் புகார் தெரிவித்து விட்டு வந்து போதுதான் ஊராட்சி துணைத்தலைவர் இளங்கோவன், அவரது அண்ணன் லட்சுமணன் ஆகியோரை மர்ம கும்பல் வழிமறித்து வெட்டினர். இதில் லட்சுமணன் இறந்து போனார்.

    புகார் தெரிவித்ததும் சில போலீசார் நெடுவரம்பாக்கம் கிராமத்துக்கு வந்து விசாரித்து உள்ளனர். கொலை நடந்த போது போலீசார் அந்த கிராமத்தில் இருந்ததாக தெரிகிறது.

    ஆனால் புகார் தெரிவிக்க சென்ற அண்ணன்-தம்பி இருவரும் தாமதமாக மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டு இருந்தனர். இதனை நோட்ட மிட்ட மர்ம கும்பல் ஒருவரை வெட்டி கொலை செய்துவிட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×