search icon
என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • மீண்டும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் காவிரி குண்டாறு வைகை இணைப்பு திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
    • அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற செய்து வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.விற்கு மரண அடி கொடுக்க வேண்டும்.

    விராலிமலை:

    தமிழக முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி காரில் திருச்சி வந்தார். அவருக்கு புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை செக்போஸ்ட் அருகே முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    செண்டை மேளம் முழங்க கரகாட்டம் தப்பாட்டம் மற்றும் நாட்டிய குதிரைகளின் ஆட்டத்தோடு எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பூரண கும்ப மரியாதை அளித்து முருகன் கோவில் நினைவாக வேல் மற்றும் சாக்லேட் மாலை அணிவித்து வரவேற்றார்.

    அப்போது அங்கு கூடியிருந்த மக்களை பார்த்ததும் எடப்பாடி பழனிசாமி காரை விட்டு இறங்கி அங்கே அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஏறி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கொடுத்த பணிகளை சிறப்பாக செய்து முடிக்க கூடியவர். கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் திறம்பட செயல்பட்டு தமிழகத்தில் விலைமதிப்பற்ற உயிர்களைக் காக்க உறுதுணையாக இருந்தவர் விஜயபாஸ்கர்.


    அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் விராலிமலை உள்ளடக்கிய புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளின் 50 ஆண்டுகால கனவு திட்டமான காவிரி குண்டாறு இணைப்பு திட்டம் நிறைவேற்றப்பட்டது. தி.மு.க. அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அந்தத் திட்டத்தை கிடப்பில் போட்டு விட்டது. முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வருகிற தேர்தலில் மக்கள் பதிலடி கொடுப்பார்கள்.

    மீண்டும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் காவிரி குண்டாறு வைகை இணைப்பு திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும். அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட அம்மா மினி கிளினிக், அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கான மடிக்கணினி வழங்கும் திட்டம், தாலிக்கு தங்கம், இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை தி.மு.க. அரசு நிறுத்திவிட்டது.

    இதற்கெல்லாம் வருகிற தேர்தலில் விடிவு பிறக்கும். தீய சக்தியான தி.மு.க.வை மக்கள் விரட்டியடிப்பார்கள். அதற்கு எடுத்துக்காட்டாக இந்த கூட்டமும் மக்கள் முகத்தில் தெரியும் பிரகாசமும் அமைந்துள்ளது. விராலிமலை சட்டப்பேரவை தொகுதி உள்ளடங்கியுள்ள கரூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளரை அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற செய்து வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.விற்கு மரண அடி கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், விராலிமலை மேற்கு ஒன்றிய செயலாளர் பழனியாண்டி, மாவட்ட கவுன்சிலர் சிவசாமி, ஒன்றிய செயலாளர்கள் நாகராஜன்(தெற்கு), ராஜேந்திரன்(வடக்கு), திருமூர்த்தி(கிழக்கு) உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • தேர் 4 ரத வீதிகளில் வலம் வந்து நிலையை அடைந்தது.
    • தி.மு.க. மத்திய ஒன்றிய செயலாளர் அய்யப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    விராலிமலை:

    விராலிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது.

    விராலிமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணியசுவாமி கோயில் உள்ளது. இங்கு மலைமேல் முருகன் வள்ளி-தெய்வானையுடன் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இங்கு வருடம் தோறும் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமர்சியாக நடத்தப்படுவது வழக்கம்.

    அதன்படி இந்த வருடம் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கடந்த 16-ந்தேதியன்று சுப்ரமணிய சுவாமி கோவிலில் கொடியேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து தினமும் காலை மற்றும் இரவு என இரு வேலைகளிலும் மஞ்சம், பத்மமயில், கேடயம், மயில், பூதம், நாகம், சிம்மம், வெள்ளிகுதிரை உள்ளிட்ட வாகனங்களில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி சுவாமியின் திருவீதி உலா நடைபெற்றது.


    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது. தேரை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். தேர் 4 ரத வீதிகளில் வலம் வந்து நிலையை அடைந்தது.

    நிகழ்ச்சியில் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் பழனியப்பன், முன்னாள் ஆவின் சேர்மன் பழனியாண்டி, அ.தி.மு.க. மாவட்ட கவுன்சிலர் சிவசாமி, முன்னாள் யூனியன் சேர்மன் மணி, தி.மு.க. மத்திய ஒன்றிய செயலாளர் அய்யப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். அதனை தொடர்ந்து 25-ந் தேதி இரவு தெப்ப உற்சவம் நடக்கிறது. 26-ந் தேதி விடையாற்றியுடன் தைப்பூச திருவிழா நிறைவடைகிறது தேரோட்டம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்துடன் இணைந்து மண்டக படிதாரர்கள், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

    • உதவி கலெக்டர் தெய்வநாயகி முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
    • பொதுக்குழு உறுப்பினர் பழனியப்பன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சத்தியசீலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    விராலிமலை:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள மண்டையூரில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இதில் 650 காளைகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் மற்றும் திரளான பார்வையாளர்கள் பங்கேற்றனர்.

    இங்கு காலை 8 மணிக்கு போட்டி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது.

    அதைத் தொடர்ந்து உதவி கலெக்டர் தெய்வநாயகி முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    மேலும் தொடக்க விழாவுக்கு தி.முக மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் தொண்டர்கள் தனித்தனியாக திரண்டு இருந்தனர்.

    அப்போது வி.ஐ.பி. களில் முதல் ஆளாக தொகுதி எம்.எல்.ஏ.வும் முன்னாள் அமைச்சருமான டாக்டர் விஜயபாஸ்கர் வருகை தந்தார். உடனே போட்டிகள் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

    அப்போது தி.மு.க. தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியது.

    அமைச்சர் வந்த பின்னர் தான் போட்டி தொடங்க வேண்டும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால் அ.தி.மு.க.வினர் தொகுதி எம்எல்ஏ விஜயபாஸ்கர் தான் ஆகவே அவர் போட்டியை தொடங்கி வைக்கலாம் என்றனர்.

    இதனால் விழா மேடையில் திமுக மற்றும் அதிமுக தொண்டர்களுக்கு இடையே வாக்குவாதம் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

    பின்னர் அதைத் தொடர்ந்து உதவி கலெக்டர் தெய்வநாயகி போட்டியை தொடங்கி வைத்தார்.

    1¼ மணி நேரம் தாமதமாக போட்டி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் பழனியப்பன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சத்தியசீலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மெய்யநாதன், எம்.எல்.ஏ.முத்துராஜா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
    • ஜல்லிக்கட்டு போட்டியில் 800 காளைகள், 250 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை அடுத்த வடமலாப்பூரில் பிடாரி அம்மன் மற்றும் கருப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடந்தோறும் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிகட்டு நடத்தப்படுவது வழக்கம். இந்த ஜல்லிகட்டு போட்டியினை ராஜவயல், வடமலாப்பூர் குருக்களையாப்பட்டி ஆகிய 3 கிராமத்து நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து நடத்துவர்.

    இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான அனுமதியும் அரசிடம் பெறப்பட்டது. மேலும் புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, தஞ்சை உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்போர், காளை அடக்கும் வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தொடர்ந்து இதற்கான பெயர் பதிவும் தொடங்கி நடைபெற்றது. இன்று அதிகாலை முதல் கொண்டு வரப்பட்ட காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை, காளை பிடிப்பவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.

    ஜல்லிக்கட்டு தொடங்குவதற்கு முன்பாக வடமலாப்பூரில் பிடாரி அம்மன் மற்றும் கருப்பர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. அதன் பின்னர் கோவில் ஜல்லிகட்டு காளைகளுக்கு கற்பூரம் ஏற்றி மரியாதை செய்யப்பட்டது. பின்னர் ஜல்லிகட்டு போட்டி தொடங்கியது.

    தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கொடியசைத்து ஜல்லிகட்டை தொடங்கி வைத்தார். அவருடன் புதுக்கோட்டை எம்.எல்.ஏ. முத்துராஜா, தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    முதலில் ஊர் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக வாடி வாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டது.

    இவ்வாறு முன்பதிவு செய்யப்பட்ட 800 காளைகள் வாடி வாசலில் இருந்து சீறிப்பாய்ந்தன. தனித்தனியாக குழுக்களாக பிரிக்கப்பட்ட 250 காளையர்கள் களத்தில் காளைகளை அடக்க களமாடினார்கள். ஜல்லிகட்டு போட்டியை காணவந்த பொதுமக்கள் இதனை கண்டு மெய் சிலிர்த்து கைத்தட்டி, விசில் அடித்து தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

    காளைகளை பிடிக்கும் போது காயம் பட்ட வீரர்கள் உடனடியாக அங்கு அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மருத்துவ முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

    சிறப்பாக களத்தில் சீறிப்பாய்ந்த காளைகளுக்கும், எதற்கும் அஞ்சாமல் காளைகளை அடக்கிய மாடு பிடி வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

    இந்த ஜல்லிகட்டு போட்டி நடைபெறுவதையொட்டி அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    • ஜல்லிக்கட்டு போல பல்வேறு சுற்றுக்களாக இந்த போட்டிகள் நடந்தது.
    • நூற்றுக்கணக்கான தேங்காய்களுடன் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    தமிழர் திருநாளான பொங்கல் வந்துவிட்டாலே கிராமங்கள் களை கட்ட தொடங்கிவிடும். 3 நாட்கள் கொண்டாடப்படும் பொங்கல் விழாவில் பல்வேறு நூதன போட்டிகள் நடத்தி கிராம மக்கள் அசத்துவது வழக்கம்.

    மாடுகளை பிடிக்கும் வீர விளயாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது போல தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் ஏதாவது வித்தியாசமான போட்டிகளை நடத்தி வருகின்றனர்.

    அந்த வகையில் திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் பொங்கல் விழாவில் நடைபெற்ற பல்வேறு நூதன போட்டிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.

    புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர், வேம்பங்குடி, மேற்பனைக்காடு, திருவாப்பாடி, மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் பைங்கால், சாணாகரை, பேராவூரணி, தென்னங்குடி, வலப்பிரமன்காடு, செருவாவிடுதி, களத்தூர் மற்றும் பல கிராமங்களில் தேங்காய்களால் மோதிக் கொள்ளும் வித்தியாசமான போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

    எதிர் எதிர் திசையில் இருவர் தங்கள் கைகளில் தேங்காய்களை நேருக்கு நேராக மோதிக் கொள்வார்கள். இந்த மோதலில் உடையும் தேங்காயை, மோதி உடைத்தவர் எடுத்துக் கொள்வார். இந்த மோதலுக்கான ஒரு போர் தேங்காய் ரூ.300 முதல் ரூ. 500 வரை விலை கொடுத்து வாங்கி வருகின்றனர்.

    ஒரே தேங்காயை கொண்டு பல தேங்காய்களை உடைத்து கொண்டு செல்பவர்களும் உள்ளனர். ஜல்லிக்கட்டு போல பல்வேறு சுற்றுக்களாக இந்த போட்டிகள் நடந்தது.

    புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு கிராமத்தில் விளையாட்டு திடலில் போர் தேங்காய் உடைக்கும் விளையாட்டு போட்டி நடந்தது. பல்வேறு கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் பைகளில் தேங்காய்களுடன் வந்து முன்பதிவு செய்து போட்டியில் கலந்து கொண்டனர்.

    தேங்காய்களை நேருக்கு நேர் மோத வைத்தனர். பல தேங்காய்களை ஒரு சில தேங்காய்கள் வைத்து மோதி உடைத்தனர். சிலர் மோதி உடைத்த தேங்காய்களை சாக்கு நிறைய அள்ளிச் சென்றனர். போர் தேங்காய் பரிசுப் போட்டியில் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி மாவடுகுறிச்சி முத்துக்குமார் அதிக தேங்காய்களை உடைத்து முதல் பரிசு ரூ.4004 மற்றும் சுழற்கோப்பை பெற்றார்.

    இதேபோல செரியலூரில் நேற்று நடந்த போட்டியில் நூற்றுக்கணக்கான தேங்காய்களுடன் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இது பற்றி பொதுமக்கள் கூறுகையில், இது எங்களின் சந்தோசத்துக்காக நடத்தப்படும் போட்டி. இந்த போட்டியில் பங்கேற்க போர்காய் தேங்காய்களுக்காக ஒவ்வொரு கிராமமாக அலைந்து தேங்காய்கள் வாங்க வேண்டும். 2 மாதங்களுக்கு முன்பே தேங்காய் வாங்கிவிட்டோம் என்றனர்.


    கரூர் மாவட்டம், குளித்தலை அருகே தோகை மலை ஊராட்சி, கள்ளை தொட்டியப்பட்டியில் கம்பளத்து நாயக்கர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர்.

    இவர்கள் வருடாந்தோறும் தை மாதம் 1-ந்தேதி கள்ளையில் உள்ள மாரியம்மன் கோவில் முன்பாக ஊர் கவுண்டர் முன்னிலையில் பரிவட்டம் வாங்கி எட்டுப்பட்டி பொதுமக்கள் முன்பாக மாரியம்மன் கோவிலை வலம் வந்து சுற்றி மாடுகளை விரட்டி மறித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து அவர்களின் பாரம்பரிய கலையான தேவராட்டம், புல்லாங்குழல் வாசித்தல், கோமாளி ஆட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது,

    விழாவில் கல்லை ஊராட்சி மன்ற தலைவர் கருப்பையா, மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். மாடு மறித்தல் நிகழ்ச்சியில் 70 களை மாடுகள், நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்களும் கலந்து கொண்டனர், நிகழ்ச்சியை சுற்றுவட்டார பகுதியில் உள்ள பத்திற்கு மேற்பட்ட கிராம மக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் கண்டுகளித்தனர்.

    • ஜல்லிக்கட்டை அமைச்சர் மெய்யநாதன் கொடியசைத்து போட்டியை தொடங்கிவைத்தார்.
    • பெரும்பாலான காளைகள் மாடுபிடி வீரர்களை கண்டு அஞ்சாமல் அவர்களை துச்சமாக நினைத்து, களத்தில் நின்று விளையாடி பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தன.

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வன்னியன் விடுதியில் ஜல்லிக்கட்டு இன்று (ஜன.17) உற்சாகமாக நடைபெற்று வருகிறது.

    தமிழகத்தின் அதிக இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறும் மாவட்டமாகவும், ஒரே ஜல்லிக்கட்டில் அதிக எண்ணிக்கையிலான காளைகள் (2,000) கலந்துகொண்ட மாவட்டமாகவும், ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு நடைபெறும் மாவட்டமாகவும் புதுக்கோட்டை திகழ்கிறது.

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வன்னியன் விடுதியில் அமைந்துள்ள மாயன் பெருமாள் கோவிலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம்.

    அந்த வகையில் இன்று வன்னியர் விடுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இன்று காலை 8 மணிக்கு அரசு வழிகாட்டுதல்படி மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள், விழா குழுவினர் ஆகியோர் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர். தொடர்ந்து அமைச்சர் மெய்யநாதன் கொடியசைத்து போட்டியை தொடங்கிவைத்தார். முதலில் வாடிவாசல் வழியாக கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. பதிவு செய்யப்பட்ட 800 காளைகள் களத்தில் அவிழ்த்து விடப்பட்டன. அதே போல் 300 மாடுபிடி வீரர்கள் ஒவ்வொரு சுற்றாக அனுமதிக்கப்பட்டனர்.

    கோவில் காளையை தொடர்ந்து புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டு வருகின்றன. காளைகள் வாடிவாசல் வழியாக சீறிபாய்ந்து வந்தன. அதில் பெரும்பாலான காளைகள் மாடுபிடி வீரர்களை கண்டு அஞ்சாமல் அவர்களை துச்சமாக நினைத்து களத்தில் நின்று விளையாடி பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தன. வீரர்களும் சீறிப்பாய்ந்து வந்த காளைகளை அடக்கி பார்வையாளர்களை கவர்ந்தனர்.

    போட்டியில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்களுக்கு அமைச்சர் மெய்யநாதன், மோட்டார் சைக்கிள், கட்டில், பீரோ, எவர் சில்வர் பாத்திரங்கள் பரிசாக வழங்கினார்.

    காயமடைந்த வீரர்களுக்கு மருத்து உதவி செய்ய மருத்துவகுழுவினர் தயார் நிலையில் இருந்தனர்.

    ஆலங்குடி போலீஸ் டி.எஸ்.பி. தீபக் ரஜினி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    • ராமேசுவரம் அருகே பாம்பன் தெற்கு துறைமுகத்தில் இருந்து சுமார் 90-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு புறப்பட்டனர்.
    • கைதான மீனவர்களும் அவர்கள் பயன்படுத்திய 2 டோலர் படகுகளும் கடற்படையினரால் தாழ்வுபாடு கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டன.

    புதுக்கோட்டை:

    தமிழகத்தின் ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் கச்சத்தீவு அருகே சென்று மீன்பிடித்து வருவது வழக்கம். அவ்வாறு மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து அட்டூழியத்தில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது. இதேபோல் இலங்கை கடற்கொள்ளையர்களாலும் தமிழக மீனவர்கள் அவ்வபோது தாக்குதலுக்கு ஆளாகின்றனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 12 பேரை கடந்த 13-ம் தேதி இலங்கை கடற்படை கைது செய்தது. இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாடு மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

    இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அருகே பாம்பன் தெற்கு துறைமுகத்தில் இருந்து சுமார் 90-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு புறப்பட்டனர். நடுக்கடலில் தலைமன்னாருக்கும், தனுஷ்கோடிக்கும் இடையே தாழ்வுபாடு கடற்கரை பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் அவர்களை வழிமறித்தனர்.

    பின்பு எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 2 விசைப்படகையும், அதில் இருந்த மீனவர்கள் விஜயகுமார், ஆரோக்கியம், யோகம், பிச்சை, இன்னாசி, ஸ்வீடன் உள்ளிட்ட 18 பேரையும் கைது செய்தனர். இதை தொடர்ந்து 18 மீனவர்களிடமும் நடுக்கடலில் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. கைதான மீனவர்களும் அவர்கள் பயன்படுத்திய 2 டோலர் படகுகளும் கடற்படையினரால் தாழ்வுபாடு கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டன. அதன்பின்னர் கைதான 18 மீனவர்கள், மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

    இதை தொடர்ந்து மீனவர்கள் 18 பேரும் இன்று மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்கள். கடந்த ஒரு வாரத்தில் புதுக்கோட்டை, நாகை, ராமநாதபுரம் உள்ளிட்ட 3 மாவட்டத்தை சேர்ந்த 40 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 250 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
    • கைது செய்யப்பட்ட மீனவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தகவல்.

    தமிழக மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. 5 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.

    சுமார் 250 விசைப்படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் இலங்கை யாழ்ப்பாணம் மாவட்ட காரைநகர் கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 32 பேரை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட மீனவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

    கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 56 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 2021-ம் ஆண்டு சோதனை நடத்தினர்.
    • புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் வழக்கு விசாரணை இன்று நடைபெற இருந்தது.

    புதுக்கோட்டை:

    அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. வருமானத்திற்கு அதிகமாக ரூ.35 கோடியே 79 லட்சத்து 90 ஆயிரத்து 81 மதிப்பில் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17-ந்தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இதில் அவரது மனைவி ரம்யாவின் பெயரும் இடம் பெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் உள்ள அவரது வீடு, கல்குவாரிகள், நிறுவனங்கள், சென்னையில் உள்ள அவரது வீடு உள்பட மொத்தம் 56 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 2021-ம் ஆண்டு சோதனை நடத்தினர்.

    இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீது மொத்தம் 210 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை புதுக்கோட்டை கோர்ட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தாக்கல் செய்தனர்.

    புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற இருந்தது.

    ஆனால் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் இந்த வழக்கை மீண்டும் ஜனவரி 31-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி பூரண ஜெய ஆனந்த் உத்தரவிட்டுள்ளார்.

    • கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 415 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
    • காயம் அடையும் வீரர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    பொங்கலை பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். அலங்காநல்லூர், அவனியாபுரம் உள்ளிட்ட ஜல்லிக்கட்டு போட்டிகள் தயாராகி வருகின்றனர். இதற்கிடையே இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை தச்சன்குறிச்சியில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. தச்சங்குறிச்சி விண்ணேற்பு அன்னை ஆலய ஆண்டுத்திருவிழா, புத்தாண்டையொட்டி ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்தப்படும்.

    இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்ட நிலையில் இன்று காலை ஜல்லிக்கட்டு தொடங்கியது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து 700-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக வாடிசாவலில் இருந்து சீறிப் பாய்ந்த வண்ணம் உள்ளன.

    280-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் களத்தில் மாடுகளை பிடிக்க களம் இறங்கியுள்ளனர். மாடு பிடி வீரர்களுக்கு சைக்கிள், பீரோ, கட்டில், இருசக்கர வாகனம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட இருக்கின்றன.

    ஆட்சியர் ஐ.எஸ். மெர்சி ரம்யா தலைமையில் நடைபெறும் ஜல்லிக்கட்டை, மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இந்த ஜல்லிக்கட்டுக்காக தச்சங்குறிச்சியில் வாடிவாசல், பார்வையாளர்கள் அரங்கு அமைத்தல் உள்ளிட்ட அனைத்து முன்னேற்பாடு பணிகளும் புதுக்கோட்டை கோட்டாட்சியர் முருகேசன் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டது.

    ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளை பரிசோதிப்பதற்காக கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர்(பொ) ராமச்சந்திரன் தலைமையில் மருத்துவர்கள் குழு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    காயம் அடையும் காளைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பிரத்யேக ஆம்புலன்ஸ் வசதி, காயம் அடையும் வீரர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் வசதி ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    இந்த ஜல்லிக்கட்டையொட்டி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 415 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஜல்லிக்கட்டை கண்காணிக்க பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.

    • ஜல்லிக்கட்டில் களம் காண காளைகளும், காளையர்களும் தயாராகி வருகின்றனர்.
    • ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது.

    கந்தர்வகோட்டை:

    தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் தை பொங்கலை முன்னிட்டு பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மதுரை அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு உலக புகழ் பெற்றதாகும். எனினும் தமிழகத்தில் அதிக ஜல்லிக்கட்டு நடைபெறும் மாவட்டமாக புதுக்கோட்டை திகழ்கிறது. ஜனவரி முதல் மே மாதம் வரை புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு களை கட்டும். கோவில் திருவிழாக்களில் ஒரு பகுதியாக ஜல்லிக்கட்டு காணப்படும்.

    புத்தாண்டில் முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் புனித விண்ணேற்பு அன்னை ஆலய புத்தாண்டு திருவிழாவையொட்டி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு நாளை மறுநாள் (சனிக்கிழமை) தச்சங்குறிச்சியில் நடைபெறுகிறது.

    இதற்காக வாடிவாசல், கேலரி, இரும்பு தடுப்புகள் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கு ஆன்லைன் பதிவு இன்று (வியாழக்கிழமை) தொடங்கி யது.

    ஆன்லைனில் பதிவு செய்த மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது.

    ஜல்லிக்கட்டில் களம் காண காளைகளும், காளையர்களும் தயாராகி வருகின்றனர்.

    ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது. அதனை பின்பற்றி ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதை தொடர்ந்து ஜல்லிக்கட்டு காளைகளுக்கு நீச்சல் பயிற்சி, வீரர்களிடம் பிடிபடாமல் சீறிப்பாய்வதற்கு, கொம்புகளால் முட்டி தூக்கி தள்ளுவதற்கும் காளைகளின் உரிமையாளர்கள் பயிற்சி அளித்து வருகின்றனர். அதேநேரத்தில் காளைகளை அடக்குவதற்கும் மாடுபிடி வீரர்கள் பயிற்சி எடுத்து வருகின்றனர்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 48 ஜல்லிக்கட்டும், 7 இடங்களில் மஞ்சுவிரட்டும், 17 இடங்களில் வடமாடு மஞ்சுவிரட்டும் என மொத்தம் 72 இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.

    இதனிடையே இந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ளது. தேர்தல் தொடா்பாக தேதி அறிவிக்கப்பட்டால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிடும். இதனால் தேர்தல் நேரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கிடைக்காது என்ற நிலையில் முன்கூட்டியே ஜல்லிக்கட்டு நடத்த அந்தந்த பகுதி மக்கள் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

    • ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
    • ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை விழா குழுவினர், ஊராட்சி மன்ற தலைவர், உள்ளூர் மக்கள் செய்ய தொடங்கியுள்ளனர்.

    புதுக்கோட்டை:

    2024ம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி வரும் ஜனவரி 6-ந்தேதி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சி கிராமத்தில் விமர்சையாக நடைபெற உள்ளது.

    தச்சங்குறிச்சி கிராமத்தில் உள்ள விண்ணேற்பு அன்னை ஆலய புத்தாண்டு திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

    இதை தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை விழா குழுவினர், ஊராட்சி மன்ற தலைவர், உள்ளூர் மக்கள் செய்ய தொடங்கியுள்ளனர்.

    ×