search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு
    X

    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு

    • பவானிசாகர் அணை நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்து உள்ளது.
    • கடந்த 6 நாட்களில் மட்டும் அணையின் நீர்மட்டம் 7 அடி உயர்ந்துள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 89.41 அடியாக உள்ளது.

    ஈரோடு:

    பவானிசாகர் அணை ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது.

    105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியான தெங்குமரஹடா, அல்லிமாயார், ஊட்டி, குந்தா, பில்லூர் அணைப்பகுதிகளில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    நேற்றும் பவானிசாகர் அணை நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்து உள்ளது.

    இதன் காரணமாக கடந்த 6 நாட்களில் மட்டும் அணையின் நீர்மட்டம் 7 அடி உயர்ந்துள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 89.41 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 6,561 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 900 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 1005 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    அணையின் நீர்மட்டம் இன்று மாலைக்குள் 90 அடியை கடந்து விடும். இதே போல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள மற்ற பிரதான அணைகளான வரட்டுபள்ளம் அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளது.

    வரட்டுபள்ளம் அணையின் முழு கொள்ளளவு 33.50 அடியாகும். கடந்த 2 நாட்களாக வரட்டு பள்ளம் அணை நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக வரட்டுபள்ளம் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 33.43 அடியாக உள்ளது. இந்த அணை மூலம் 3000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

    இதேபோல் 30.84 அடி கொண்ட பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 19.03 அடியாக உள்ளது. இதேபோல் மற்றொரு அணையான 41.75 அடி கொண்ட குண்டேரிபள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.79 அடியாக உள்ளது. தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×