search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி அருகே கட்டிட மேஸ்திரி அடித்து கொலை- முன்விரோத காரணமா? போலீசார் விசாரணை
    X

    தருமபுரி அருகே கட்டிட மேஸ்திரி அடித்து கொலை- முன்விரோத காரணமா? போலீசார் விசாரணை

    • இன்று காலை விடிந்து நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவரவில்லை.
    • கொலை தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள தண்டுகாரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மார்கண்டன்.

    இவரது மகன் சிவபிரகாசம் (வயது47). இவருக்கு திருமணமாகி பொன்னுருவி என்ற மனைவியும், நந்தகுமார் என்ற மகனும், ரம்யா, நித்யா, சந்தியா ஆகிய 3 மகள்களும் உள்ளனர்.

    சிவபிரகாசம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் தண்டுகாரன்பட்டியில் உள்ள சிவபிரகாசத்தின் உறவினர் ஒருவர் இறந்து விட்டார். இதையொட்டி உறவினர் வீட்டின் அருகே உள்ள சென்றாய பெருமாள் கோவில் பகுதியில் நேற்று தெருக்கூத்து நடைபெற்றது. அதனை பார்ப்பதற்காக சிவபிரகாசம் வீட்டில் இருந்து நேற்று இரவு புறப்பட்டு சென்றார்.

    இன்று காலை விடிந்து நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவரவில்லை.

    இந்த நிலையில் சென்றாய பெருமாள் கோவில் பின்புறம் பகுதியில் உள்ள புதரின் அருகே சிவபிரகாசம் கை கட்டப்பட்ட நிலையில் பலத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதனை இன்று காலை அங்கிருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சியடைநதனர்.

    இந்த சம்பவம் குறித்து சிவபிரகாசத்தின் மனைவி மற்றும் உறவினர்களிடம் தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த சிவபிரகாசத்தின் மனைவி மற்றும் மகன், மகள்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர்.

    சம்பவ குறித்து தகவலறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்வரன் மற்றும் தொப்பூர் போலீசார் அங்கு விரைந்து வந்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது சிவபிரகாசத்தை மர்மநபர்கள் யாரோ சிலர் கையை கட்டிப்போட்டு அடித்து கொன்று விட்டு சுமார் 200 மீட்டர் தொலைவில் இழுத்து வந்து புதரின் அருகே போட்டு விட்டு தப்பி ஓடியுள்ளனர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    பின்னர் போலீசார் சிவபிரகாசத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் கொலை தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் குறித்து தொப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவபிரகாசத்தை முன்விரோதம் காரணமாக யாராவது அடித்து கொலை செய்தனரா? அல்லது கள்ளக்காதல் விவகாரத்தில் யாராவது அடித்து கொலை செய்தனரா? என்ற பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×