search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    பெங்களூரில் பதுங்கி இருந்த சென்னை ரவுடிகள் 2 பேர் துப்பாக்கிமுனையில் கைது
    X

    பெங்களூரில் பதுங்கி இருந்த சென்னை ரவுடிகள் 2 பேர் துப்பாக்கிமுனையில் கைது

    • தலைமறைவான ரவுடிகள் ஈஷா, யுவராஜ் ஆகிய 2 பேரையும் போலீசார் தேடிவந்தனர்.
    • ரவுடிகள் ஈஷா, யுவராஜ் ஆகிய இருவரும் பெங்களூரில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது.

    திருவொற்றியூர்:

    புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர்கள் ஈஷா என்கிற ஈஸ்வரன்(வயது33). யுவராஜ் என்கிற எலி யுவராஜ் (38). ரவுடிகளான இவர்கள் மீது கொலை, கொள்ளை, போதை பொருள் கடத்தல், ஆயுத கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

    வடசென்னை பகுதியில் உள்ள தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிப்பு, காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் உள்ள ஷெட்டுகளில் மாமுல் வசூலிப்பது உள்ளிட்ட குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.

    கடந்த 2017-ம் ஆண்டு திருப்பூரில் வக்கீலான காமேஷ் என்பவர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஈஷா, யுவராஜ் ஆகியோர் கோர்ட்டில் சரண்அடைந்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த இருவரும் வழக்கு விசாரணையின் போது கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாகி விட்டனர்.

    இதையடுத்து தலைமறைவான ரவுடிகள் ஈஷா, யுவராஜ் ஆகிய 2 பேரையும் போலீசார் தேடிவந்தனர்.அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியாமல் இருந்தது. அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. துணை கமிஷனர் ரம்யா பாரதி உத்தரவின் படி சப்-இன்ஸ்பெக்டர் விஜய் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் ரவுடிகள் ஈஷா, யுவராஜ் ஆகிய இருவரும் பெங்களூரில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் விஜய் தலைமையில் தனிப்படை போலீசார் சென்னையில் இருந்து பெங்களூருக்கு விரைந்து சென்றனர்.

    இன்று அதிகாலை ரவுடிகள் பதுங்கி இருந்த இடத்தை போலீசார் சுற்றி வளைத்து உள்ளே புகுந்தனர். அப்போது போலீசாரை கண்டதும் ஈஷா, யுவராஜ் ஆகிய இருவரும் அங்குள்ள சுவரை தாண்டிக்குதித்து தப்பி செல்ல முயன்றனர். இதில் அவர்களது காலில் முறிவு ஏற்பட்டது. அவர்கள் இருவரையும் போலீசார் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து பிடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    கைதான ஈஷாவும், யுவ ராஜும் பெங்களூரில் பதுங்கி இருந்தபடி சென்னையில் இருக்கும் தொழில்திபர்களை சாட்டி லைட் போன் மூலம் தொடர்பு கொண்டு மிரட்டி பணம் வாங்குவது, கொலை திட்டம் தீட்டுவது உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களை சென்னையில் உள்ள தங்களது கூட்டாளிகள் மூலம் அரங்கேற்றி இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

    அவர்களை சென்னை அழைத்து வந்து யார்? யாரை? மிரட்டி பணம் பறித்தனர், கூட்டாளிகள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காலில் முறிவு ஏற்பட்டு இருப்பதால் ரவுடிகள் ஈஷா, யுவராஜ் ஆகிய இருவரையும் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து உள்ளனர். அவர்களுக்கு காலில் மாவுகட்டுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×