search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொள்ளாச்சியில் பழக்கடை ஊழியரை கொன்றது பிராய்லர் கடை உரிமையாளர்
    X

    பொள்ளாச்சியில் பழக்கடை ஊழியரை கொன்றது பிராய்லர் கடை உரிமையாளர்

    • கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனக்கும் ஒரு இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது.
    • அடிக்கடி என்னை சந்திக்க வருவார். நாங்கள் நீண்ட நேரம் பேசி கொண்டு இருப்போம். இதனை குப்புசாமி பார்த்துள்ளார்.

    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி மார்க்கெட் ரோட்டை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 40). பழக்கடை ஊழியர்.

    இவர் அவரது வீட்டின் முன்பு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து பொள்ளாச்சி மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று குப்புசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து பொள்ளாச்சி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி குப்புசாமியை அடித்து கொலை செய்த பொள்ளாச்சி குமரன் நகரை சேர்ந்த பிராய்லர் கடை உரிமையாளர் அருண்குமார் (28)என்பவரை போலீசார் கைது செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து அவரிடம் விசாரித்தனர்.

    அப்போது அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

    நான் கோழிக்கடை வைத்து நடத்தி வருகிறேன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனக்கும் ஒரு இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவர் அடிக்கடி என்னை சந்திக்க வருவார். நாங்கள் நீண்ட நேரம் பேசி கொண்டு இருப்போம். இதனை குப்புசாமி பார்த்துள்ளார்.

    சம்பவத்தன்று நான் எனது கோழிக்கடை பின்புறம் சென்றேன். அப்போது அங்கு குப்புசாமி மது குடித்து கொண்டு இருந்தார். அவர் என்னையும், என்னுடன் பழகும் இளம்பெண்ணையும் தவறாக பேசினார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இது குறித்து நான் கேட்டபோது எங்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் குப்புசாமி அவரது வீட்டிற்கு நடந்து சென்றார்.

    அப்போது அவரை கொலை செய்யும் திட்டத்துடன் கையில் உருட்டு கட்டையுடன் பின் தொடர்ந்து சென்றேன். அவரது வீட்டின் அருகே சென்ற போது தலையில் தாக்கினேன். இதில் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து இறந்தார். பின்னர் நான் தலைமறைவாக இருந்தேன். போலீசார் என்னை விசாரணை நடத்தி கைது செய்து விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கைது செய்யப்பட்ட அருண்குமாரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

    Next Story
    ×