search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆலங்குளம் அருகே வியாபாரி கொலை வழக்கில் மனைவி கைது
    X

    ஆலங்குளம் அருகே வியாபாரி கொலை வழக்கில் மனைவி கைது

    • வட்டாலூரை சேர்ந்த கடல்மணி என்பவருக்கும், முத்துராமலிங்கராஜனின் மனைவி உஷாவிற்கும் கள்ளக்காதல் இருந்துள்ளது.
    • கள்ளக்காதல் குறித்து அறிந்த முத்துராமலிங்க ராஜன் தனது மனைவியை கண்டித்துள்ளார்.

    ஆலங்குளம்:

    தென்காசி ஆலங்குளத்தை அடுத்த அடைக்கலப்பட்டினம் அருகே உள்ள வட்டாலூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்துராமலிங்க ராஜன் (வயது 45). பழைய இரும்பு வியாபாரி.

    இவருடைய மனைவி உஷா. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் உஷா கணவரை பிரிந்து ஏ.பி.நாடானூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.

    நேற்று காலை முத்துராமலிங்க ராஜன் அங்குள்ள காட்டுப்பகுதியில் அடித்துக்கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவருடைய கை, கால்கள் முறிந்த நிலையில் இருந்தன. இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

    வட்டாலூரை சேர்ந்த கடல்மணி என்பவருக்கும், முத்துராமலிங்கராஜனின் மனைவி உஷாவிற்கும் கள்ளக்காதல் இருந்துள்ளது. இதை அறிந்த முத்துராமலிங்க ராஜன் தனது மனைவியை கண்டித்துள்ளார்.

    ஆனாலும் 2 பேரும் அதனை கண்டு கொள்ளாமல் கள்ளக்காதலை தொடர்ந்துள்ளனர். இது தொடர்பாக முத்துராமலிங்கராஜன் கொடுத்த புகாரின்பேரில் ஆலங்குளம் போலீசார் கடல்மணியை கைது செய்தனர். இதனால் கடல்மணிக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

    இந்நிலையில் சமீபத்தில் சிறையில் இருந்து வெளியே வந்த கடல்மணி மீண்டும் உஷாவுடன் கள்ளக்காதலை தொடர்ந்துள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் உஷா தனது கணவரிடம் கோபித்துக்கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

    முத்துராமலிங்கராஜன் உயிரோடு இருக்கும் வரை தங்களால் கள்ளக்காதலை தொடர முடியாது என்று முடிவு செய்த உஷாவும், கடல்மணியும் சேர்ந்து அவரை கொலை செய்துவிட முடிவு செய்தனர்.

    ஏற்கனவே தன்னை சிறையில் தள்ளியதால் ஆத்திரத்தில் இருந்த கடல்மணி இதுதான் சரியான தருணம் என்று முடிவு செய்து முத்துராமலிங்கராஜனை அவரது நண்பர் ஒருவர் மூலமாக பூலாங்குளம் காட்டுப்பகுதிக்கு அழைத்து வர செய்துள்ளார்.

    அங்கு வைத்து முத்துராமலிங்கராஜனுக்கு அதிக அளவு மது வாங்கி கொடுத்துள்ளனர். இதனால் அவர் மதுபோதையில் மயங்கி கிடந்தார். அப்போது அங்கு வந்த கடல்மணி, அவரது கை மற்றும் கால்களை முறித்து அடித்துக்கொலை செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து கொலைக்கு உடந்தையாக இருந்ததாக உஷாவை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான கடல்மணியை வலைவீசி தேடி வருகின்றனர்.

    Next Story
    ×