search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    டெங்கு, ப்ளூ காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
    X

    டெங்கு, ப்ளூ காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

    • காய்ச்சல் முகாம்களில் 6,860 பேருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டதில் 1,798 பேருக்கு இன்புளு வென்சா எனப்படும் ‘ப்ளூ’ தொற்று நோய்க்கான அறிகுறிகள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
    • பரிசோதனை மேற்கொள்ளப்பட்டவர்களில் 25 சதவீதத்துக்கும் மேலானவர்கள் ‘ப்ளூ’ காய்ச்சலால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை புள்ளி விவரங்கள் தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கின்றன.

    சென்னை:

    முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் குழந்தைகளிடையே வேகமாக பரவி வரும் 'ப்ளூ' காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் வகையில், புதுச்சேரி மாநிலத்தை பின்பற்றி தொடக்கப் பள்ளிகளுக்கு சிறிது காலம் விடுமுறை அளிக்குமாறு நான் அறிக்கை வெளியிட்டு இருந்தேன்.

    ஆனால், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரோ பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கத் தேவையில்லை என்றும், அனைத்தும் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றும் தெரிவித்து இருந்தார்.

    இருப்பினும், கள நிலைமை வேறுவிதமாகத்தான் இருக்கிறது. 'ப்ளூ' காய்ச்சலைத் தொடர்ந்து டெங்கு காய்ச்சலும் செப்டம்பர் மாதத்தில் இரு மடங்காக அதிகரித்து பொது மக்களை மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது என்றும் தகவல்கள் வருகின்றன. அமைச்சர் அனைத்தும் கட்டுப்பாட்டில் இருக்கிறது, யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று சொன்னாலும், அண்மைக்காலமாக காய்ச்சல் அறிகுறியோடு அரசு மருத்துவமனைகளை நாடும் பொதுமக்களின் எண்ணிக்கை, குறிப்பாக குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

    காய்ச்சல் முகாம்களில் 6,860 பேருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டதில் 1,798 பேருக்கு இன்புளு வென்சா எனப்படும் 'ப்ளூ' தொற்று நோய்க்கான அறிகுறிகள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

    அதாவது பரிசோதனை மேற்கொள்ளப்பட்டவர்களில் 25 சதவீதத்துக்கும் மேலானவர்கள் 'ப்ளூ' காய்ச்சலால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை புள்ளி விவரங்கள் தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கின்றன.

    அகில இந்திய அளவிலும் சரி, தமிழ்நாட்டு அளவிலும் சரி கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், 20-09-2022 அன்று 496 ஆக இருந்த தினசரி பாதிப்பு 21-09-2022 அன்று 509 ஆகவும், 22-09-2022 அன்று 522 ஆகவும், 23-09-2002 அன்று 529 ஆகவும் உயர்ந்து கொண்டே செல்கிறது. இது தவிர, 23-09-2022 அன்று இரண்டு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

    எனவே, முதல்-அமைச்சர் இதில் தனிக்கவனம் செலுத்தி, அதிகரித்து வரும் கொரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் வகையிலும், ஆங்காங்கே பரவி வரும் டெங்கு காய்ச்சல், ப்ளூ காய்ச்சல், பன்றி காய்ச்சல் ஆகியவற்றை கட்டுக்குள் கொண்டு வரும் வண்ணமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×