search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பரங்குன்றம் மலைக் கோவிலில் திருட்டு
    X

    திருப்பரங்குன்றம் மலைக் கோவிலில் திருட்டு

    • கேமராவில் கொள்ளை சம்பவம் பதிவாகி விடக்கூடாது என்பதற்காக கொள்ளையர்கள் கேமரா மீது விபூதியை அள்ளி வீசி கைவரிசை காட்டி உள்ளனர்.
    • மய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் கதவை உடைத்து பூஜை பொருட்களை திருடிய சம்பவம் திருப்பரங்குன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருப்பரங்குன்றம்:

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் துணைக்கோவிலாக காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. திருப்பரங்குன்றம் மலை மேல் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு பக்தர்கள் அதிகளவில் சென்று தரிசனம் செய்து வருகின்றனர்.

    இந்த கோவிலுக்கு செல்ல பழைய படிக்கட்டுப் பாதை மற்றும் புதிய படி கட்டுப்பாதை என 2 வழிகள் உள்ளன. இங்கு நேற்று முன்தினம் சித்ரா பவுர்ணமியை யொட்டி வழக்கத்துக்கு அதிகமாக பக்தர்கள் வருகைதந்து சாமி தரிசனம் செய்து சென்றனர். இதைத் தொடர்ந்து இரவு கோவிலை பூட்டி சென்றனர்.

    நேற்று காலை கோவிலை திறப்பதற்காக கோவில் குருக்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் சென்றனர்.அப்போது கோவிலின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன.

    மேலும் கோவிலுக்குள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பூஜை பொருட்கள், பித்தளை வேல் உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போனது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கோவில் குருக்கள் மற்றும் பணியாளர்கள் உடனடியாக கோவில் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதுகுறித்து கோவில் நிர்வாகம் சார்பில் திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அங்கிருந்த சி.சி.டி.வி. கேமரா ஹார்ட் டிஸ்க் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது.

    மேலும் கேமராவில் கொள்ளை சம்பவம் பதிவாகி விடக்கூடாது என்பதற்காக கொள்ளையர்கள் கேமரா மீது விபூதியை அள்ளி வீசி கைவரிசை காட்டி உள்ளனர்.

    இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் கதவை உடைத்து பூஜை பொருட்களை திருடிய சம்பவம் திருப்பரங்குன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து திருப்பரங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து மலைக்குச் செல்லும் படிக்கட்டு பாதை பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் மர்ம நபர்களின் உருவங்கள் பதிவாகி உள்ளதா? என ஆய்வு செய்து வருகின்றனர்.

    காசி விசுவநாதர் கோவிலில் கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இங்குள்ள சி.சி.டி.வி. கேமராவின் ஹார்ட் டிஸ்க் திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து திருப்பரங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து மலைக்கோவிலில் திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×