search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கர்ப்பிணி மனைவி, மகளை குத்திக் கொன்று கணவர் தற்கொலை
    X

    கர்ப்பிணி மனைவி, மகளை குத்திக் கொன்று கணவர் தற்கொலை

    • காதல் திருமணம் செய்த இவர்களை இரு வீட்டாரும் ஏற்றுக் கொள்ளவில்லை.
    • மனைவி, மகளை கொன்று கணவர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி அருகே உள்ள அமச்சியாபுரத்தைச் சேர்ந்தவர் சதீஸ்குமார் (வயது 35). இவர் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு அஜித்தா (வயது 33) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது பிரத்விகா (5) என்ற மகள் உள்ளார். இந்த குழந்தை தனியார் பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வந்தார்.

    காதல் திருமணம் செய்த இவர்களை இரு வீட்டாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் அரண்மனைப்புதூர் அருகே உள்ள முல்லை நகரில் வாடகை வீட்டில் சதீஸ்குமார் தனது மனைவி மற்றும் மகளுடன் வசித்து வந்தனர். சதீஸ்குமார் தேனியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    மேலும் சிலருக்கு வட்டிக்கு பணம் கொடுத்தும் பைனான்ஸ் தொழில் செய்தும் வந்துள்ளார். தற்போது இவரது மனைவி அஜித்தா 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பேசாமல் இருந்து வந்துள்ளனர்.

    அஜித்தா தனது தேவைகளை ஒரு பேப்பரில் எழுதி தனது மகளிடம் கொடுத்து விடுவார். அதனை பார்த்து சதீஸ்குமார் என்ன வேண்டுமோ அதனை வாங்கி கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. நேற்று காலை முதல் இரவு வரை பைனான்ஸ் கம்பெனியில் இருந்து பல முறை தொடர்பு கொண்டும் இணைப்பு கிடைக்காததால் சந்தேகமடைந்தனர்.

    இதனையடுத்து அஜித்தாவின் தந்தை மற்றும் சகோதரனுக்கு தகவல் தெரிவித்து வீட்டில் என்ன பிரச்சனை என்று விசாரிக்குமாறு பைனான்ஸ் கம்பெனியில் இருந்து தெரிவித்தனர்.

    அஜித்தாவின் தந்தை மற்றும் அவரது தம்பி வீட்டுக்கு வந்த போது உட்புறமாக கதவு பூட்டப்பட்டு இருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்ற போது, அஜித்தா மற்றும் அவரது மகள் கத்திக் குத்து காயங்களுடன் கொடூரமாக இறந்து கிடந்தனர். கணவர் சதீஸ்குமார் தூக்கு மாட்டிய நிலையில் இறந்து கிடந்தார்.

    இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து 3 பேரின் உடல்களையும் மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    போலீசார் வீட்டில் சோதனை செய்த போது சதீஸ்குமார் கைப்பட எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது. அதில், தனது பெற்றோர்கள் மற்றும் நண்பர்களுக்கு அவர் எழுதியிருந்தார். காதல் திருமணம் செய்து சந்தோசமாக வாழலாம் என நினைத்தோம். ஆனால் எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டபோது, அதனை தீர்த்து வைக்க யாரும் வரவில்லை. இதனால் என் மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்ய முடிவு செய்தேன். இந்த உலகத்தில் வாழ பிடிக்கவில்லை. நான் இல்லாத உலகத்தில் அவர்கள் இருக்க கூடாது என்பதாலும் அவர்கள் இல்லாத உலகத்தில் நான் வாழ விரும்பாத காரணத்தாலும் தற்கொலை செய்யும் முடிவை எடுத்துள்ளேன். என்னை அனைவரும் மன்னித்து கொள்ளுங்கள். இவ்வாறு சதீஸ்குமார் அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

    காதல் திருமணம் செய்த மனைவி, மகளை கொன்று கணவர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×