search icon
என் மலர்tooltip icon

    தேனி

    • கல்வெட்டு சிதைந்துள்ளதால் முழுமையாக வாசிக்க முடியாதவாறு உள்ளது.
    • இரண்டாவதாக உள்ள துண்டுக் கல்வெட்டு நிலதான அளவைகளை குறிப்பதாக உள்ளது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம் கெங்குவார் பட்டியில் உள்ள பழமையான ஞானாம்பிகை உடனுறை காளகஸ்தீஸ்வரர் கோவிலில் கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் செல்வம், கெங்குவார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர் அப்பாஸ் ஆகியோர் கள ஆய்வு செய்ததில் கி.பி. 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற்கால பாண்டியர் கல்வெட்டுகள் இருப்பதை கண்டறிந்தனர்.

    இது குறித்து ஆய்வாளர் செல்வம் கூறுகையில்

    திருப்பணி செய்பவர்கள், கோயிலைச் சுற்றியுள்ள புதர்களை அகற்றும் போது, மண்ணிற்குள் புதைந்திருந்த 2 கல்வெட்டுகளை எடுத்து வைத்திருப்பது கள ஆய்வில் தெரியவந்தது. முதல் கல்வெட்டு கோவில் அதிட்டான கல்பலகையில் 2 பகுதிகளாக உள்ளது. முதல் பகுதியில் 5 வரிகளில் எழுத்துகள் எழுதப்பட்டுள்ளன. கல்வெட்டு சிதைந்துள்ளதால் முழுமையாக வாசிக்க முடியாதவாறு உள்ளது.

    தவச்சதுர்வேதி மங்கலத்து பிரக்மரு நாட்டுச் செட்டியும் நீ என தொடங்கும் முதல் பகுதியில் இக்கோயிலில் இருக்கும் இறைவனின் பெயர் திருவகத்தீஸ்வர முடைய நாயனார் என்பது புலனாகிறது. சதுர்வேதி மங்கலம் என்பது பிராமணர்களுக்கு அரசு வழங்கிய நிலம். வடபகுதியில் இருக்கும் பிரக்மாரு நாட்டைச் சேர்ந்த செட்டி என்பவர் கொடுத்த வரியும், பிற நில வரிகளும் கூறுவதாக கல்வெட்டு செய்தி இருக்கலாம். மூவேந்த வேளாண் என்ற அதிகாரியின் முன் கல்வெட்டு எழுதப்பட்டிருப்பது தெரிய வருகிறது.


    கல்லின் பக்கவாட்டில் உள்ள 2-ம் பகுதி கல்வெட்டில் ஆறு வரிகள் எழுதப்பட்டிருக்கின்றன. திருவரகத்தீஸ்வரர் உடைய நாயனார் கோவிலில் உள்ள விநாயகருக்கு தினமும் திருவமுது படைப்பதற்காக அரைக்காணி முந்திரிகை அளவுள்ள நிலத்தை மிழலைக் கூற்றத்து நடுநாட்டுச் சேர்ந்த அதிகாரி ஒருவரின் முன்னிலையில் தானமாக வழங்கப்பட்ட செய்தியை குறிப்பிடுவதாக உள்ளது. மிழலைக்கூற்றம் என்பது அறந்தாங்கி வட்டத்து தென்பகுதியும் ராமநாதபுரம் மாவட்டத்தின் கீழ் பகுதியும் கொண்டது ஆவுடையார் கோவில் வட்டாரப் பகுதி. இரண்டாவதாக உள்ள துண்டுக் கல்வெட்டு நிலதான அளவைகளை குறிப்பதாக உள்ளது. வைகை ஆற்றின் முக்கிய கிளை நதியான மஞ்சளாற்றின் வடகரையில் இக்கோவில் அமைந்திருப்பதால் பிற்கால பாண்டியர் ஆட்சி காலத்தில் இப்பகுதி செழிப்புற்றிருந்திருக்கிறது என்பதை அறிய முடிகிறது என்றார்.

    • கால்நடை மருத்துவர்கள் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர்.
    • காளைகளின் உரிமையாளர்களுக்கு பீரோ, அண்டா, கட்டில், தங்க காசு உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே அய்யம்பட்டி ஏழை காத்த அம்மன், வல்லடிகார சுவாமி கோவில் திருவிழாவையொட்டி வருடம் தோறும் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு இன்று நடைபெற்றது.

    இணையதளம் வழியாக தேனி, மதுரை, திருச்சி, திண்டுக்கல், விருதுநகர், சேலம், கரூர் உள்ளிட்ட தமிழகத்தின் பிற பகுதியில் இருந்து 4500 காளைகள், 2100 மாடு பிடி வீரர்கள் பதிவு செய்திருந்தனர். தகுதி அடிப்படையில் காளைகள் மற்றும் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி 720 காளைகள் மற்றும் 400 மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.

    மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் வீரர்கள் பல்வேறு குழுக்களாக பிரிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். இதே போல் கால்நடை மருத்துவர்கள் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர்.

    பின்னர் ஜல்லிக்கட்டை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அந்த காளையை யாரும் பிடிக்கவில்லை. அதனைத் தொடர்ந்து வாடிவாசல் வழியாக ஜல்லிக்கட்டு காளைகள் சீறிப்பாய்ந்தன.

    இதனை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். சில காளைகள் களத்தில் நின்று வீரர்களுக்கு பிடி கொடுக்காமல் போக்கு காட்டியது. அந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு பீரோ, அண்டா, கட்டில், தங்க காசு உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

    இதே போல் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டியையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு ரசித்தனர். முன்னதாக உள்ளூர் காளைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கக் கோரி சின்னமனூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

    • பூங்காவுக்கு வந்த வாலிபர்கள் மற்றும் காதலர்களை திரும்பிச் செல்லுமாறு கூறி அனுப்பி வைத்தனர்.
    • காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த வந்த இந்து முன்னணி நிர்வாகிகளை போலீசார் தடுத்து நிறுத்தி அனுப்பினர்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வைகை அணை அமைந்துள்ளது. இதன் அருகே அமைந்துள்ள பூங்கா சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் பொழுதுபோக்கு அம்சமாக உள்ளது. மேலும் உள்ளூர் மக்களுக்கும் இது சிறந்த பொழுதுபோக்கு இடமாக உள்ளது.

    இங்கு வாரம் தோறும் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் வருகை தருகின்றனர். இது தவிர விடுமுறை நாட்களில் அதிக அளவு நபர்கள் வருகை தருவதுண்டு.

    இன்று காதலர் தினம் என்பதால் காதல் ஜோடிகள் வைகை அணை பூங்காவுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நுழைவு வாயில் முன்பு அதிக அளவு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

    அவர்கள் பூங்காவுக்கு வந்த வாலிபர்கள் மற்றும் காதலர்களை திரும்பிச் செல்லுமாறு கூறி அனுப்பி வைத்தனர். பொது இடங்களில் காதல் ஜோடிகளைப் பார்த்தால் அவர்களுக்கு மஞ்சள் கயிறு கொடுத்து திருமணம் செய்து வைக்கப்போவதாக பல்வேறு அமைப்புகள் தயார் நிலையில் இருந்தன.

    மேலும் காதல் ஜோடிகளை படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதாகவும், அவர்கள் அறிவித்திருந்தனர். இது போன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கையாக பூங்காவுக்கு வந்தவர்களை தொடர்ந்து போலீசார் திருப்பி அனுப்பினர். இதனால் சந்தோஷமாக பொழுதை கழிக்க வந்த காதல் ஜோடிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதே போல தேனி மாவட்டத்தின் மற்றொரு சுற்றுலா தலமாக குரங்கணி பகுதி உள்ளது. அங்கும் காதல் ஜோடிகள் குவியத் தொடங்கியதால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதன் காரணமாக காதலர்கள் சினிமா தியேட்டர்கள் உள்ளிட்ட பிற இடங்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டது.

    இதனிடையே காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த வந்த இந்து முன்னணி நிர்வாகிகளை போலீசார் தடுத்து நிறுத்தி அனுப்பினர். இதனால் வைகை அணை பூங்கா பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களிடையே மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.
    • பள்ளி விழாவில் மாணவிகள் சாமியாடிய நிகழ்ச்சி பரபரப்பை ஏற்படுத்தியது.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதன்மை கல்வி அதிகாரிகளின் வழிகாட்டுதல் படி பள்ளி விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த விழாக்களில் மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. மாணவர்களும் இதில் உற்சாகமாக கலந்து கொண்டு வருகின்றனர்.

    திண்டுக்கல் அருகே உள்ள நல்லமநாயக்கன்பட்டி அரசு பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் மகேந்திரன் தலைமை தாங்கினார். தோட்டனூத்து ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா ராதாகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். இதில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    அப்போது கருப்பசாமி பாட்டுக்கு மாணவர் ஒருவர் உடல் முழுவதும் கருப்பு நிற சாயம் பூசி கையில் அரிவாளுடன் நடனமாட அந்த பாட்டுக்கு மற்ற மாணவர்கள் பாடல் பாடிக்கொண்டு இருந்தனர்.

    இதை பார்த்ததும் அங்கு அமர்ந்திருந்த மாணவிகள் சிலர் உணர்ச்சிகரமாக அருள்வந்து ஆடினர். இதனால் ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களிடையே மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மாணவிகளை அங்கிருந்து வேறு இடத்துக்கு அழைத்துச் சென்று அமைதிப்படுத்தினர்.

    பள்ளி விழாவில் மாணவிகள் சாமியாடிய நிகழ்ச்சி பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தி.மு.க. நிர்வாகி மீது அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகளே புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • கட்சி கட்டுப்பாட்டை மீறியும், அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டு வந்த ஜீவா அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டுள்ளார்.

    தேனி:

    தேனி வடக்கு மாவட்ட விவசாய அணி அமைப்பாளராக இருந்தவர் ஜீவா. இவர் சொந்தமாக யூடியூப் சேனல் நடத்தி வந்தார். இவர் சமூக வலைதளங்களில் தங்கதமிழ்ச்செல்வன் மற்றும் சரவணக்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் மீதும் தி.மு.க. நிர்வாகிகள் மீதும் பல்வேறு அவதூறு கருத்துக்களை பதிவிட்டு வந்தார்.

    எனவே இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட எஸ்.பி.யிடம் தி.மு.க. நிர்வாகிகள் புகார் அளித்தனர். தி.மு.க. நிர்வாகி மீது அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகளே புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் ஜீவாவை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி பொதுச் செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.

    இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில், கட்சி கட்டுப்பாட்டை மீறியும், அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டு வந்த ஜீவா அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • கடந்த 2 நாட்களாக அப்பகுதியில் முகாமிட்டு வெங்கடேசனை தேடி வந்தனர்.
    • போலீசில் சிக்காமல் தலைமறைவாக இருந்த குற்றவாளியை போலீசார் பிடித்ததால் மாவட்ட எஸ்.பி. பாராட்டு தெரிவித்தார்.

    தேவதானப்பட்டி:

    மதுரை மாவட்டம் டி.வாடிப்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்த சடகோபாலன் மகன் வெங்கடேன் (வயது 46). இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருட்டு வழக்கில் பிடிபட்டார். போலீசார் அவரை கைது செய்து பெரியகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    பின்னர் ஜாமீனில் வெளி வந்த வெங்கடேசன் தலைமறைவானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து பெரியகுளம் உதவி அமர்வு நீதிபதி தலைமறைவான குற்றவாளியை பிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என தேவதானப்பட்டி போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தனர்.

    அதன்படி இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் தலைமையிலான போலீசார் அவரை பல்வேறு இடங்களில் தீவிரமாக தேடி வந்தனர். திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அவர் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்படி கடந்த 2 நாட்களாக அப்பகுதியில் முகாமிட்டு வெங்கடேசனை தேடி வந்தனர்.

    பின்னர் நேற்று இரவு அவரை கைது செய்து பெரியகுளம் அழைத்து வந்தனர். 20 ஆண்டுகளாக போலீசில் சிக்காமல் தலைமறைவாக இருந்த குற்றவாளியை போலீசார் பிடித்ததால் மாவட்ட எஸ்.பி. பாராட்டு தெரிவித்தார்.

    • முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 133.30 அடியாக உள்ளது.
    • வைகை அணையின் நீர்மட்டம் 68.77 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை கைகொடுத்ததால் அனைத்து அணைகளும் நிரம்பி முழு கொள்ளளவை எட்டியது. இதனால் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பாசனத்திற்காக தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

    தற்போது மழை முற்றிலும் நின்று விட்டதாலும், கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதாலும் அணைகளின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. இதனால் பெரியாறு, வைகை அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டு குடிநீருக்காக மட்டும் தண்ணீர் திறக்கப்படுகிறது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 133.30 அடியாக உள்ளது. நீர் வரத்து 437 கனஅடி. நேற்று வரை 1500 கன அடி திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை முதல் 500 கன அடி மட்டும் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 5469 மி.கன அடியாக உள்ளது. கூடுதல் தண்ணீர் திறப்பால் லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில் 4 ஜெனரேட்டர்களும் இயக்கப்பட்டு 135 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. தற்போது 2 ஜெனரேட்டர்கள் மட்டும் இயக்கப்பட்டு 46 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 68.77 அடியாக உள்ளது. வரத்து 1251 கன அடி. திறப்பு 69 கன அடி. இருப்பு 5513 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 53.40 அடி. வரத்து 29 கன அடி. திறப்பு 75 கன அடி. இருப்பு 403 மி.கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடி. வரத்து மற்றும் திறப்பு 29 கன அடி. இருப்பு 100 மி.கன அடி.

    • தொழில்நுட்ப கருத்தரங்கம் வருகிற 8ந் தேதி முற்பகல் 11.30 மணி அளவில் காமாட்சிபுரத்தில் நடைபெறுகிறது.
    • விழாவிற்கான ஏற்பாடுகளை சென்டெக்ட் வேளாண் அறிவியல் மைய தலைவர் பச்சைமால் தலைமையில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையம் சார்பில் மாநில அளவிலான பெண் விவசாயிகள், பெண் தொழில் முனைவோர்கள், மகளிர் சுய உதவிக்குழு அமைப்புகள் மற்றும் மா, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான தொழில்நுட்ப கருத்தரங்கம் வருகிற 8ந் தேதி முற்பகல் 11.30 மணி அளவில் காமாட்சிபுரத்தில் நடைபெறுகிறது.

    இந்த கருத்தரங்கில் பங்கேற்க தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சின்னமனூர் வருகிறார்.

    இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வரும் அவர் பின்னர் அங்கிருந்து கார் மூலம் கருத்தரங்கம் நடைபெறும் இடத்திற்கு வருகை தருகிறார். விழாவிற்கு கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி, அவிநாசி லிங்கம் பல்லைக்கழக துணை வேந்தர் பாரதிஹரிசங்கர், ஹைதராபாத் வேளாண்மை தொழில்நுட்ப பயன்பாட்டு இயக்குனர் சேக்மீரா ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    கருத்தரங்கில் தேனி, அரியலூர் மற்றும் பெரியகுளம், உத்தமபாளையத்தை சேர்ந்த வேளாண் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சென்டெக்ட் வேளாண் அறிவியல் மைய தலைவர் பச்சைமால் தலைமையில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

    • கண்டுபிடிக்கப்பட்டுள்ள இச்சிற்பம் பேரரசமர்வு என்னும் மகாராஜாலீலாசனத்தில் சிற்பம் உள்ளது.
    • கேரளா, இலங்கை, அந்தமான் போன்ற இடங்களிலும் அய்யனார் சிலை வழிபாடு வழக்கத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் செல்வம், கிருஷ்ணகிரி மாவட்டம், காமன் தொட்டி உயர்நிலைப் பள்ளி தமிழாசிரியை ஜெயலட்சுமி, ஆகியோர் தொல்லியல்துறை சார்பில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    தங்கம்மாள்புரத்தில் இருந்து வருசநாடு செல்லும் வழியில் உள்ள ஜி.ஆர்.டி. பண்ணை உச்சிப்பிள்ளையார் கோவில் இருக்கும் இடத்தில், கி.பி. 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவலிங்கம், பேச்சியம்மன் சிலை, அய்யனார் சிலை, தட்சிணாமூர்த்தி சிலை போன்ற பழமையான சிற்பங்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.


    தலையில் ஜூவால கிரீடம், இடது கையில் ஒரு பெண்ணை பிடித்து வயிற்றைக் கீறிய நிலையிலும், வலது கையில் ஒரு குழந்தையை ஏந்திய நிலையிலும் பயமுறுத்தும் கண்கள், அகன்ற மூக்கு, நீளமான வாய், பெரிய காதுகள், பெரிய பரந்த பாதங்கள், மார்புக்கூடு எலும்புகள் தெரியும் வகையில், பார்ப்போரை பயமுறுத்தும் வகையில் பேச்சியம்மன் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பேச்சு அம்மன் என்பதே பேச்சியம்மன் என்று மருவி விட்டது. கல்விக் கடவுளான சரஸ்வதியின் மறுத்தோற்றமாக கருதப்படும் இந்த அம்மனை வழிபட்டால் மாணவர்கள் தங்கள் கல்வியில் சிறப்பான இடத்தைப் பெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. பேச்சி அம்மனுக்கு தமிழ்நாட்டில் மட்டுமல்ல கேரளா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய பகுதிகளிலும் பேச்சியம்மன் வழிபாடு காணப்படுகிறது.

    பொதுவாக அய்யனார் நிலை மண்டலமர்வு எனும் உத்குடி ஆசனத்தில் சிற்பம் வடிவமைப்பதுண்டு. ஆனால் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ள இச்சிற்பம் பேரரசமர்வு என்னும் மகாராஜாலீலாசனத்தில் சிற்பம் உள்ளது. தலையில் விரித்த அலங்கார ஜடாபாரம், தனித்தனி இழைகளாக சுருண்டு அழகுற அமைந்துள்ளது. முத்துப்பட்டம், வட்டமான பத்திர குண்டலம், கண்டசரம், சரபள்ளி, சவடி, பூணூல், உத்தரபந்தம், கடகம், கைவளை, காப்பு, இடைக்கச்சை போன்ற அணிகலன்கள் அணிந்து அழகுற அய்யனார் அமர்ந்திருக்கிறார்.

    இவர் சிவபெருமானின் மகன் என்றும் கிராமங்களில் வசிக்கும் எளிய மக்களை காக்க வந்தவர் என்றும் நம்பப்படுகிறது. சங்க காலம் முதலே தமிழகத்தில் அய்யனார் வழிபாடு வழக்கத்தில் உள்ளது. கேரளா, இலங்கை, அந்தமான் போன்ற இடங்களிலும் அய்யனார் சிலை வழிபாடு வழக்கத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    சிவனின் அம்சமான தட்சிணாமூர்த்தி வடிவமானது இடது காலை மடக்கி வலது காலை தொங்கவிட்ட சுகாசன நிலையில் அமர்ந்துள்ளார். பூணூல் அணியப்பட்டுள்ளது. கரந்தை மகுடம், கைகளில் வளையல், கால்களில் வீரக் கழல், கால்விரல் அணிகள், அபய வரத முத்திரையுடன் பின் வலது கையில் மழு உள்ளது. இடது மேற்கையில் மான் உருவம் சிதைந்துள்ளது. சாந்த சொரூப நிலையில் சிற்பம் உள்ளது.


    "தெக்கினான்" என்றும் தென்முகக் கடவுள் என்றும் அழைக்கப்படும் தட்சிணாமூர்த்தி, சிவனின் அம்சமாக கருதப்படுகிறார். மேற்கண்ட சிற்பங்கள் பாண்டியர் காலத்துக்கே உரிய சிற்ப நுட்பத்தோடும் உச்சபட்ச நயத்தோடும் செதுக்கப்பட்டிருக்கின்றன.

    மற்றொரு சிலையான சிவலிங்கம், பத்ம பீடம் (பிரம்மா பகுதி) அதாவது தாமரைப் பூ கவிழ்ந்த நிலை, அதற்கு மேல் ஆவுடை உள்ளது. பெருவுடையார் (லிங்கபாணம்) இல்லாமல் உள்ளது.

    கி.பி. 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்றும் உள்ளது. அதில், மதுரை சொக்கநாதருக்கும் பார்வதி அம்மனுக்கும் நெய்விளக்கு தானமாக வழங்கப்பட்ட செய்தி கூறப்பட்டுள்ளது. மேற்கண்ட சிலைகள் மற்றும் கல்வெட்டு மூலம் இந்த இடத்தில் சிவன் கோயில் இருந்தது உறுதி செய்யப்படுகிறது. பாண்டியர் காலத்திலிருந்து நாயக்கர் காலம் வரை தொடர் வழிபாட்டில் இக்கோவில் இருந்திருக்கிறது என்பதை அறிய முடிகிறது என்று கூறினர்.

    • வைகை அணையின் நீர்மட்டம் 69.16 அடியாக உள்ளது.
    • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 53.75 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தொடர் மழை காரணமாக முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. இதனால் 142 அடி வரை தண்ணீர் தேக்கப்படும் என விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆனால் தற்போது மழை குறைந்ததால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி 134.20 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு 296 கன அடி நீர் மட்டுமே வருகிறது. இருந்தபோதும் தமிழக பகுதிக்கு 1500 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து 1321 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 1769 கன அடி நீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 69.16 அடியாக உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 53.75 அடியாக உள்ளது. வருகிற 75 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. 29.29 கன அடி நீர் வருகிறது. 25 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

    • வளர்மதிக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நன்றாக செயல்பட்டு வந்த கைகளும் கால்களும் முதுகு தண்டுவடமும் திடீரென செயலிழந்தன.
    • ரூ.10 லட்சத்துக்கும் மேல் செலவு செய்ததால் குடும்பமே வறுமையில் சிக்கியது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியத்துக்கு உட்பட்ட உப்புத்துறை கிராமத்தை சேர்ந்த ராஜசேகரன் அவரது மனைவி வளர்மதி.

    இவர்களுக்கு 7-ம் வகுப்பு படிக்கும் 13 வயது மகாலட்சுமி என்ற மகளும், 4-ம் வகுப்பு படிக்கும் சக்திவேல் என்ற 9 வயது மகனும் உள்ளனர்.

    சிறிய அளவிலான விவசாய நிலம், 2 மாடுகளை வளர்த்துக் கொண்டு கூலி வேலைக்கு சென்று மகிழ்ச்சியாக இருந்து வந்த இந்த குடும்பத்தினருக்கு வளர்மதியின் உடல் நலக்குறைவால் நிலைமை தலைகீழாக மாறியது.

    வளர்மதிக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நன்றாக செயல்பட்டு வந்த கைகளும் கால்களும் முதுகு தண்டுவடமும் திடீரென செயலிழந்தன.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜசேகரன் உள்ளூர் மற்றும் தேனி, மதுரை உள்ளிட்ட பல்வேறு தனியார் ஆஸ்பத்திரியில் தனது மனைவி வளர்மதியை அழைத்துச் சென்று பெரும் செலவு செய்து சிகிச்சை பார்த்தார்.

    பரிசோதனை செய்து பார்த்தபோது அபூர்வ வகை நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது. மேலும் தொடர்ந்து மாத்திரை சாப்பிட்டு வந்தால் குணமாகும் என்று கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் கடந்த 1½ ஆண்டு காலமாக இந்த நோய் குணமாகவில்லை.

    இதையடுத்து பெங்களூருக்கு சென்று அங்கும் சிகிச்சை பார்த்தும் குணமாகவில்லை என்றும் வேதனை தெரிவிக்கின்றனர். தொடர் சிகிச்சை காரணமாக குடும்ப வருமானம் பாதித்தது. மேலும் மருத்துவச் செலவிற்கு வீட்டை அடமானம் வைத்தும் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் கடன் பெற்றனர். ரூ.10 லட்சத்துக்கும் மேல் செலவு செய்ததால் குடும்பமே வறுமையில் சிக்கியது.

    தொடர்ந்து சிகிச்சை பெற வழி இல்லாததால் அவர்கள் செய்வது அறியாது வேதனையில் தவித்து வருகின்றனர். குடும்ப சூழ்நிலை அறிந்து அவரது மகள் மகாலட்சுமி தானே வீட்டு வேலைகளையும் சமையல் வேலைகளையும் செய்து தாயை பராமரித்து விட்டு அவ்வப்போது பள்ளிக்கு சென்று வருகிறார்.

    அதேபோல சக்திவேலும் மாட்டையும் ஒரு கன்று குட்டியையும் தானே தீவனம் போட்டு பராமரித்து வளர்த்து பணிகளை முடித்து பள்ளிக்கு சென்று வருகிறார்.

    மேற்கொண்டு சிகிச்சை பெற வழி இல்லாமல் வேதனையில் தவிக்கும் குடும்பத்தினர் தங்களுக்கு உதவ தமிழக முதலமைச்சரும் தமிழக அரசும் முன் வரவேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மழை நின்ற பிறகும் அணையின் நீர் மட்டம் 71 அடியில் நின்று கடந்த 2 நாட்களுக்கு முன்பு குறையத் தொடங்கியது.
    • வைகை பூர்வீக பாசனத்துக்கும் குடிநீருக்கும் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர் மட்டம் பருவமழை கைகொடுத்ததால் கடந்த மாதம் 70 அடிக்கு மேல் எட்டியது. அதன் பிறகு கடந்த 6-ந் தேதி முழு கொள்ளளவான 71 அடியை எட்டியதால் அணைக்கு வந்த தண்ணீர் முழுவதும் உபரியாக வெளியேற்றப்பட்டது.

    இதனால் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் வைகை கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    மழை நின்ற பிறகும் அணையின் நீர் மட்டம் 71 அடியில் நின்று கடந்த 2 நாட்களுக்கு முன்பு குறையத் தொடங்கியது. இருந்த போதும் வைகை பூர்வீக பாசனத்துக்கும் குடிநீருக்கும் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.

    இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 70.10 அடியாக உள்ளது. வரத்து 910 கன அடியாக உள்ளது. பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்பட்டு மதுரை குடிநீருக்காக மட்டும் 69 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 5873 மி.கன அடியாக உள்ளது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 136.70 அடியாக உள்ளது. வரத்து 134 கன அடி. திறப்பு 1000 கன அடி. இருப்பு 6294 மி.கன அடி.

    மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 54.75 அடி. வரத்து 21 கன அடி. திறப்பு 30 கன அடி. இருப்பு 430.23 மி.கன அடி.

    சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 126.28 அடி. வரத்து 34 கன அடி. திறப்பு 25 கன அடி. இருப்பு 100 மி.கன அடி.

    ×