search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆந்திராவில் தேர்தல் மோதலால் எம்.எல்.ஏ வீடு மீது தாக்குதல்- துப்பாக்கி சூடு
    X

    ஆந்திராவில் தேர்தல் மோதலால் எம்.எல்.ஏ வீடு மீது தாக்குதல்- துப்பாக்கி சூடு

    • போலீசார் ரப்பர் குண்டுகள் மூலம் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.
    • தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் நேற்று பாராளுமன்ற தேர்தலுடன் சட்ட மன்றத்திற்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

    பல்வேறு இடங்களில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.

    காலையில் வாக்கு பதிவு தொடங்கியதும் தாடிப்பத்திரி என்ற இடத்தில் இரு கட்சி கடுமையாக மோதி கொண்டனர். அவர்கள் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர் அங்கு அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டு தொண்டர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

    குண்டூர் அருகே உள்ள நரசராவ்பேட்டையில் தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கினர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர்.

    இதனையடுத்து அங்கு வாக்குப்பதிவு சுமூகமாக நடைபெற்றது வாக்குப்பதிவு முடிந்து எந்திரங்கள் அனைத்தும் எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. இதற்கு பிறகும் தொண்டர்கள் ஆவேசமாக காணப்பட்டனர்.

    நரசராவ்பேட்டை நகரப் பகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த நூற்றுக்கணக்கான தொண்டர்கள் திரண்டு மாறி மாறி கோஷங்கள் எழுப்பினர். திடீரென அவர்களுக்குள் கலவரம் வெடித்தது. அப்போது தெலுங்கு தேசம் கட்சியினர் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.

    மேலும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கோபி ரெட்டி சீனிவாஸ் எம்.எல்.ஏ. வீட்டின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இது பற்றி தகவல் அறிந்த போலீசார் கல்வீச்சில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்தனர்.

    அப்போது பின்னோக்கி செல்வது போல சென்ற தொண்டர்கள் மீண்டும் எம்.எல்.ஏ. வீட்டு முன்பு ஓடி வந்து கற்களை வீசி தாக்கினர். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் ரப்பர் குண்டுகள் மூலம் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதனையடுத்து அங்கிருந்த தெலுங்கு தேசம் கட்சியினர் ஓட்டம் பிடித்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதி போர்க்களம் போல காட்சியளித்தது.

    மேலும் அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்க அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    பல்நாடு பகுதியில் இரவிலும் தெலுங்கு தேசம் ஒய்எஸ்ஆர் கட்சியை காங்கிரஸ் கட்சியினர் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. அப்போது கார் ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டது.

    நடுரோட்டில் கார் பற்றி எரிந்ததால் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உருவானது. இது பற்றி தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். மேலும் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

    இதே போல ஆந்திராவில் பல்வேறு இடங்களில் இரவிலும் மோதல் நீடித்தது. மாநிலம் முழுவதும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    Next Story
    ×