என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
- போலீசார் நடத்திய விசாரணையில் அவர் கடத்தல் நாடகமாடியது தெரியவந்தது.
- பாராளுமன்ற தேர்தலில் 7 அரசியல் கட்சி வேட்பாளர்கள், 19 சுயேட்சை வேட்பாளர்கள் என 26 பேர் போட்டியிடுகின்றனர்.
புதுச்சேரி:
ஏனாம் பிராந்திய பா.ஜனதா தலைவர் தெம்மாடி துர்காபிரசாத் கடந்த சட்டசபை தேர்தலின்போது ஏனாம் தொகுதியில் போட்டியிட திட்டமிட்டார்.
ஏனாமில் பா.ஜனதா, என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் முதலமைச்சர் ரங்கசாமி போட்டியிட்டார். இதனால் அதிருப்தியடைந்த துர்காபிரசாத் சுயேட்சை வேட்பாளராக களம் இறங்கினார். பா.ஜனதா அவரை கட்சியிலிருந்து நீக்கியது.
இந்த நிலையில் அவர் மாயமாகி 5 நாட்களுக்கு பிறகு வந்தார். அவரை சிலர் கடத்தி மனுவை வாபஸ்பெற மிரட்டியதாக தெரிவித்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில் அவர் கடத்தல் நாடகமாடியது தெரியவந்தது. இதனால் போலீசார் 5 நாட்கள் கடும் அலைச்சலுக்கு ஆளாகினர்.
இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருக்க பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்க டி.ஜி.பி. உத்தரவிட்டார்.
புதுச்சேரியில் தற்போது நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் 7 அரசியல் கட்சி வேட்பாளர்கள், 19 சுயேட்சை வேட்பாளர்கள் என 26 பேர் போட்டியிடுகின்றனர்.
அனைவருக்கும் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் நாள் முழுவதும் பாதுகாப்புக்கு இருக்கு வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
போலீஸ்துறையில் சிக்மா, நுண்ணறிவு, குற்றம், கடலோர காவல், பயிற்சி பள்ளி என பிற பணிகளில் உள்ளவர்கள் நியமிக்கப்பட்டு வேட்பாளர்களுடன் வலம் வருகின்றனர்.
வேட்பாளர் எங்கு செல்கிறார் என தொடர்ந்து கண்காணிக்கின்றனர். சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் பலர் பிரசாரம் ஏதும் செய்யாமல் தங்கள் வீடுகளில்தான் உள்ளனர். அவர்கள் வீடுகளில் போலீசார் காவல் காத்து வருகின்றனர்.
- 24 மணி நேரமும் செயல்படும் பறக்கும் படை மற்றும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
- தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான குலோத்துங்கன் நள்ளிரவில் திடீர் ஆய்வு செய்தார்.
புதுச்சேரி:
பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து புதுச்சேரியில் தேர்தல் மாதிரி நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்க புதுச்சேரியின் பல்வேறு இடங்களில் 24 மணி நேரமும் செயல்படும் பறக்கும் படை மற்றும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
கனக செட்டிக்குளம், சிவாஜி சிலை, அய்யங் குட்டிப்பாளையம், கோரிமேடு, பத்துக்கண்ணு மற்றும் திருக்கானூர் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடிகளை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான குலோத்துங்கன் நள்ளிரவில் திடீர் ஆய்வு செய்தார்.
அப்போது அங்கிருந்த வாகன சோதனை பதிவேட்டை பார்வையிட்டு, சோதனைச் சாவடிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்களின் எண்ணிக்கை மற்றும் வருகை, பறக்கும் படையினர் மேற்கொண்டு வரும் தொடர் ஆய்வுகளின் விவரம் குறித்து கேட்டறிந்தார்.
அனைத்து வாகனங்களையும் கட்டாயம் சோதனை செய்ய வேண்டும் மற்றும் சோதனைச் சாவடி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து உரிய அறிவுரைகளையும் வழங்கினார்.
- அகரம் கிராமத்தில் வேனில் இருந்து இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார்.
- மூதாட்டியை பாராட்டி அ.தி.மு.க. சார்பில் அவருக்கு சால்வை அணிவித்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரியின் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் மங்கலம் தொகுதியில் வாக்கு சேகரித்தார்.
திருக்காஞ்சி அகரம் கிராமத்தில் வேனில் இருந்து இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது கீழே நின்றிருந்த மூதாட்டி ஒருவர் தான் மேலே வந்து பேச வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
உடனடியாக அந்த மூதாட்டியை அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் பிரசார வாகனத்திற்கு வர செய்து மைக்கை கொடுத்தார். மைக்கில் மூதாட்டி எம்.ஜி.ஆரின் பாடலை பாடினார். "நாங்க புதுசா கட்டிகிட்ட ஜோடி தானுங்க" என்ற பாடலை அவர் பாட கூடியிருந்த மக்கள் ஆர்வத்துடன் கைத்தட்டி வரவேற்றனர்.
மூதாட்டியை பாராட்டி அ.தி.மு.க. சார்பில் அவருக்கு சால்வை அணிவித்தனர்.
- ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் மத்தியில் உள்ளது.
- வேட்பாளர்கள் 15 நாட்கள் மட்டுமே பிரசாரம் செய்ய முடியும்.
புதுச்சேரி:
புதுச்சேரி பாராளுமன்ற தொகுதி 4 பிராந்தியங்களாக உள்ளது.
தமிழகம், கேரளா, ஆந்திரா, புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் பிராந்தியங்கள் உள்ளன. காரைக்கால் மாவட்டம் தலைநகரான புதுச்சேரியில் இருந்து 132 கி.மீ. தூரத்தில் தமிழகத்தின் நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு மத்தியில் உள்ளது.
மாகி பிராந்தியம் 614 கி.மீ. தூரத்தில் கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தின் அருகே அரபிக்கடலோரம் உள்ளது. மற்றொரு பிராந்தியமான ஏனாம் 822 கி.மீ. தூரத்தில் ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் மத்தியில் உள்ளது.
புதுச்சேரியில் இருந்து மாகி செல்ல 15 மணி நேரமும், ஏனாம் செல்ல 18 மணி நேரமும் சாலையில் பயணிக்க வேண்டும். பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் இங்கு சென்று பிரசாரம் செய்ய பல்வேறு சிரமம் உள்ளது. கால விரயமும் ஏற்படும்.
தமிழகம், புதுச்சேரியில் முதல்கட்டமாக வருகிற 19-ந் தேதி வாக்குப் பதிவு நடக்கிறது. இதனால் குறைந்த நாட்களே பிரசாரத்துக்கு அவகாசம் உள்ளது. வேட்பாளர்கள் 15 நாட்கள் மட்டுமே பிரசாரம் செய்ய முடியும்.
இந்த விஷயங்களை கருத்தில் கொண்டு 3 மாநிலங்களில் பரவியுள்ள புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் நமச்சிவாயத்தின் சிரமத்தை கவனத்தில் கொண்டு கட்சி தலைமை உதவிக்கரம் நீட்டியுள்ளது.
ஏனாம், மாகி, காரைக்கால் பிராந்தியங்களுக்கு பா.ஜனதா வேட்பாளர் நமச்சிவாயம் விரைவாக சென்று பிரசாரம் செய்ய கட்சி தலைமை ஹெலிகாப்டர் வழங்கியுள்ளது. புதுச்சேரிக்கு நாளை (புதன்கிழமை) தனியார் நிறுவன ஹெலிகாப்டர் லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு கொண்டு வரப்படுகிறது.
அங்கிருந்து தேவைப்படும் நேரத்தில் ஹெலிகாப்டரை நமச்சிவாயம் பயன்படுத்தி மற்ற பிராந்தியங்களுக்கு சென்று பிரசாரம் செய்ய கட்சித்தலைமை ஏற்பாடு செய்துள்ளது. கட்சித் தலைமையின் இந்த நடவடிக்கையால் பா.ஜனதாவினர் உற்சாகமடைந்துள்ளனர்.
- மனிதர்களை மோப்பம் பிடித்து சுவாசத்தின் மூலம் இதனை நாய்கள் கண்டுபிடிக்கிறது.
- இரண்டு நாய்களும் மன அழுத்தத்தை கண்டுபிடிப்பதில் 90 சதவீதம் சிறப்பாக செயல்பட்டது.
புதுச்சேரி:
வீடுகளில் வளர்க்கும் செல்ல பிராணிகளில் நாய்களுக்கு முதலிடம் எப்போதும் உண்டு. மனிதர்களின் நண்பன் போல் எப்போதும் நாய்கள் சுற்றி சுற்றியே வரும்.
மனிதர்களிடம் விசுவாசமாக இருக்கும். மோப்ப சக்தி நாய்களுக்கு அதிகளவில் உண்டு. குற்றங்களை கண்டுபிடிப்பதில் நாய்கள் போலீசாருக்கு கைகொடுக்கும்.
இப்போது ஆய்வு அதைவிட அதிகமாகவும் மனிதர்களுக்கு உதவ முடியும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. நாய்கள் மனிதர்களுக்கு வரவிருக்கும் மன அழுத்தத்தை மோப்பம் பிடித்து கண்டுபிடிக்கலாம் என்பது தெரிய வந்துள்ளது.
இந்த எச்சரிக்கையின் மூலம் மன அழுத்தத்திற்கு உள்ளாகும் நபருக்கு முன் கூட்டியே மருத்துவ சிகிச்சைகளை அளிக்கலாம். மனிதர்களை மோப்பம் பிடித்து சுவாசத்தின் மூலம் இதனை நாய்கள் கண்டுபிடிக்கிறது.
இதற்காக நாய்களுக்கு பிரத்தியேக பயிற்சி அளிக்கப்படுகிறது என்று டல்ஹவுசி பல்கலைக்கழகத்தின் ஆய்வு அறிக்கை பேராசிரியர் லாராகிரோஜா கூறியுள்ளார்.
மோப்ப சுவாச பயிற்சி 25 நாய்களுக்கு அளிக்கப்பட்டது. இதில் ஐவி மற்றும் கால்லி ஆகிய இரண்டு நாய்கள் இயல்பாகவே மோப்ப சக்தியில் திறம்பட இருந்தது.
இரண்டு நாய்களும் மன அழுத்தத்தை கண்டுபிடிப்பதில் 90 சதவீதம் சிறப்பாக செயல்பட்டது.
தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனை பயிற்சிகள் மூலம் ஐவி 74 சதவீதமும், கால்லி 81 சதவீதமும் துல்லியமாக முடிவுகளை காட்டியது. மேலும் இது போல் ஆய்வு தொடர்ந்து நடத்த உள்ளனர்.
- அனைத்து கொடியையும் இறக்கிவிட்டு உதயநிதி பேச்சை கேட்டனர்.
- எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டிருக்கும் போட்டோவை எடுத்து காட்டினார்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் தமிழக அமைச்சர் உதயநிதி காங்கிரஸ் வேட்பாளர் வைத்தி லிங்கத்தை ஆதரித்து வில்லியனூர், மரப்பாலம் மற்றும் அண்ணாசிலை சதுக்கம் ஆகிய இடங்களில் பேசினார்.
உதயநிதி பேச தொடங்கிய போது, எல்லாரும் நல்லா இருக்கீங்களா, நீங்க திரும்ப கேட்க மாட்டீங்களா என கேட்டார். அப்போது தொண்டர்கள் நல்லா இருக்கீங்களா? என கோஷ மிட்டனர். அதற்கு பதிலளித்த உதயநிதி, ஏதோ சுமாரா இருக்கேன். நீங்க இருக்கும்போது எனக்கு என்ன கவலை? என்றார்.
உதயநிதி பேச தொடங்கிய போது, தி.மு.க.-காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பெரிய கொடியை ஆட்டிக் கொண்டே இருந்தனர். தான் பேசி முடிக்கும் வரை கட்சி கொடியை கீழே இறக்கும்படி உதயநிதி கேட்டுக் கொண்டார். இதனால் கூட்டணி கட்சியினர் அப்செட் ஆகினர். இருப்பினும் அனைத்து கொடியையும் இறக்கிவிட்டு உதயநிதி பேச்சை கேட்டனர்.
பிரசாரத்தில் வழக்கம் போல உதயநிதி எய்ம்ஸ் செங்கல்லை எடுத்து காட்டுவார். அதுபோல் புதுச்சேரி பிரசாரத்தில் எய்ம்ஸ் கல்லை காட்டுவார் என்று தொண்டர்கள் எதிர்பார்த்து கேள்வி எழுப்பினர். இதையடுத்து எய்ம்ஸ் செங்கல் புதுச்சேரி வரை பேமஸ் ஆகிவிட்டதா? எனக்கேட்டு செங்கல்லை எடுத்துக்காட்டிய உதயநிதி நீங்கள் காட்ட சொன்னதால்தான் கல்லை காட்டுகிறேன். இந்த கல்லுக்கு அவ்வளவு டிமாண்ட். நான் காட்டினது கல்லு, அவர் காட்டினது என பிரதமர் மோடியுடன் அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டிருக்கும் போட்டோவை எடுத்து காட்டினார்.
மரப்பாலத்தில் பேசும் போது, தொண்டர் ஒருவர் ஆபாசமாக பேசினார். அப்போது உதயநிதி, நீ கெட்ட வார்த்தையில் பேசிட்டு போய்விடுவாய், போலீஸ் என்மீது வழக்கு போடும். ஆனால் அதற்காக நான் பயப்பட மாட்டேன் என்றார்.
- 2 வாரத்துக்கு முன்பே பாடபுத்தகம் வாங்கும் நடவடிக்கையை கல்வித்துறை மேற்கொண்டது.
- இன்று திறக்கப்படும் அரசு பள்ளிகள் வருகிற 30-ந் தேதி வரை இயங்கும்.
புதுச்சேரி:
புதுச்சேரில் நடப்பு கல்வியாண்டு முதல் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அமலாகிறது.
கடந்த 23-ந் தேதியுடன் முழு ஆண்டு தேர்வு முடிந்து, சி.பி.எஸ்.இ. வழிகாட்டுதலின்படி இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது. 2 வாரத்துக்கு முன்பே பாடபுத்தகம் வாங்கும் நடவடிக்கையை கல்வித்துறை மேற்கொண்டது.
இதற்கு நிதி ஒதுக்கப்பட்டு பெங்களூருவில் இருந்து என்.சி.ஆர்.டி. பாடபுத்தகம் வாங்கப்பட்டது. இந்த பாடபுத்தகங்களை பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் வாகனம் மூலம் தங்கள் பள்ளிகளுக்கு எடுத்துச் சென்று வருகின்றனர். மிக குறைவாகவும், ஒரு சில பாடங்களுக்கு பாடபுத்தகம் வராமலும் உள்ளது. 3,4,6-ம் வகுப்புகளுக்கு ஒரு பாடங்களுக்கு கூட புத்தகங்கள் வரவில்லை.
இவற்றையும் உடனடியாக வாங்கி பள்ளி மாணவர்களுக்கு வழங்க கல்வித்துறை தீவிரம் காட்டி வருகிறது. இன்று திறக்கப்படும் அரசு பள்ளிகள் வருகிற 30-ந் தேதி வரை இயங்கும். மே 1-ந் தேதி முதல் ஜூன் 2-ந் தேதி வரை கோடை விடுமுறை விடப்பட்டு, ஜூன் 3-ந் தேதிமுதல் மீண்டும் பள்ளிகள் திறந்து செயல்படும்.
- போலீசார் கல் வீசிய மர்ம நபரை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் பாராளுமன்ற பா.ஜனதா வேட்பாளர் அமைச்சர் நமச்சிவாயத்தை ஆதரித்து முதலமைச்சர் ரங்கசாமி கடந்த 27-ந் தேதி முதல் தொகுதி வாரியாக சென்று திறந்த ஜீப்பில் பொது மக்களிடம் ஆதரவு திரட்டி வருகிறார்.
அதன்படி புதுவை முத்தியால்பேட்டை சட்டமன்ற தொகுதியில் வேட்பாளர் அமைச்சர் நமச்சிவாயத்தை ஆதரித்து முதலமைச்சர் ரங்கசாமி நேற்று போலீஸ் நிலையம் எதிரே உள்ள பொன்னுமாரியம்மன் கோவிலில் இருந்து திறந்த வாகனத்தில் நின்றபடி தேர்தல் பிரசாரம் செய்தார்.
இந்தநிலையில் முத்தியால்பேட்டை மந்தை வெளி மாரியம்மன் கோவில் அருகே அமைச்சர் நமச்சிவாயத்தை ஆதரித்து முதலமைச்சர் ரங்கசாமி பேசிக்கொண்டிருந்த போது திடீரென பிரசார வாகனத்தின் மீது எங்கிருந்தோ வீசப்பட்ட கல் ஒன்று வந்து விழுந்தது. இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இருப்பினும் தொடர்ந்து முதலமைச்சர் ரங்கசாமி தனது பேச்சை தொடர்ந்தார். அதன்பின் பிரசாரத்தை முடித்துவிட்டு அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதுதொடர்பாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் சென்று சோதனை நடத்தினார்கள். மேலும் வீட்டின் மாடிகளில் யாரும் உள்ளார்களா? எனவும் டார்ச் லைட் மூலமாக அடித்து பார்வையிட்டனர்.
இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
முத்தியால்பேட்டை பகுதியில் கடந்த மாதம் பள்ளி மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டார்.
இந்த விவகாரத்தில் அதிருப்தியில் இருந்த மர்ம நபர் யாரேனும் முதலமைச்சர் பிரசார வாகனம் மீது கல் வீசி இருக்கலாம் என கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் கல் வீசிய மர்ம நபரை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
- புதுவை பாராளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் போட்டியிடுகிறார்.
- வைத்திலிங்கம் வேனில் நின்ற படி பிரசாரம் செய்தார்.
புதுச்சேரி:
இந்தியா கூட்டணி கட்சி சார்பில் புதுவை பாராளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் போட்டியிடுகிறார்.
அவர் தொகுதி வாரியாக கூட்டணிக் கட்சி தலைவர்களுடன் வீதி, வீதியாக திறந்த ஜீப்பில் பிரசாரம் செய்து வருகிறார். இன்று காலை புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் வைத்திலிங்கம் வேனில் நின்ற படி பிரசாரம் செய்தார். அப்போது வள்ளலார் சாலையில் வாக்கு கேட்டு வேனில் சென்று கொண்டிருந்தார்
இன்று காலை முதலே புதுவையில் வெயில் சுட்டெரித்தது. காலை 11.10 மணி அளவில் வேனில் நின்றபடி வாக்கு சேகரித்து பிரசாரம் செய்த வைத்திலிங்கம் திடீரென மயங்கி அருகில் இருந்த வைத்தியநாதன் எம்.எல்.ஏ. மீது சரிந்தார்.
உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை தாங்கி பிடித்தனர். வேனை நிறுத்தி அருகேயிருந்த வீட்டில் அமர வைத்தனர்.
அருகாமையில் இருந்த டாக்டர் அங்கு வரவழைக்கப்பட்டார். அவர் வைத்திலிங்கத்தை பரிசோதித்தார். அப்போது குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக மயக்கம் ஏற்பட்டுள்ளது என்றும் அதிக வெயில் இருப்பதால் குடிநீர், ஜூஸ் பருகும்படி டாக்டர் அறிவுருத்தினார்.
இதையடுத்து வைத்திலிங்கத்துக்கு எலுமிச்சை ஜூஸ் அளிக்கப்பட்டது. சிறிது நேரம் ஓய்வு எடுத்து விட்டு பகல் 11.30 மணியளவில் மீண்டும் ஜீப்பில் ஏறி வாக்கு சேகரிப்பை தொடர்ந்தார்.
- வாய்க்காலுக்கு மறுபக்கம் நின்றிருந்த 10 பேர் உயிர் தப்பினர்.
- சம்பவம் நடைபெற்றவுடன் தீயணைப்பு துறை மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட அவர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி தேங்காய்திட்டு வசந்த் நகர் என்ற பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
வசந்த் நகர் 3-வது குறுக்கு தெருவில் நடந்த இந்த பணியில் இன்று காலை அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 16 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
மரப்பாலம் துணைமின் நிலையம் பின்புறம் சுற்று சுவரையொட்டி தூர்வாரி வாய்காலில் இருந்த சேற்றை வெளியேற்றி கொண்டிருந்னர்.
அப்போது மின் துறையின் 33 ஆண்டுகள் பழைமையான சுற்று சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளுக்கு இடையே தொழிலாளர்கள் சிக்கினர்.
இதனையடுத்து முதலியார்பேட்டை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர்களை மீட்டனர். இதில் 3 தொழிலாளர்கள் இடுபாடுகளில் சிக்கியும் கால்வாய் தண்ணீரில் மூழ்கியும் பரிதாபமாக இறந்தனர். அவர்கள் 3 பேரும் அரியலூர் நெட்டகுறிச்சியை சேர்ந்த பாக்கியராஜ், பால முருகன், ஆரோக்கியராஜ் என்பது தெரியவந்தது.
மீதமுள்ள 3 பேர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வாய்க்காலுக்கு மறுபக்கம் நின்றிருந்த 10 பேர் உயிர் தப்பினர்.
சம்பவம் நடைபெற்றவுடன் தீயணைப்பு துறை மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட அவர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
ஆம்புலன்ஸ் உரிய நேரத்தில் வராததால் மினி லாரியில் வைத்து தொழிலாளர்களை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பறக்கும் படையினர், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- பாகூர் தொகுதிகளில் பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ள இடங்களுக்கு சென்று ஆய்வு செய்தார்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன.
புதுச்சேரியையொட்டிய மாநில எல்லைப் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு பறக்கும் படையினர், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்கவும், மேற்பார்வையிடவும் தேர்தல் பொது பார்வையாளராக பியூஷ் சிங்லாவும், தேர்தல் காவல் பார்வையாளராக அமன்தீப் சிங்ராய் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தேர்தல் காவல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள அமன்தீப் சிங் ராய் புதுச்சேரி எல்லைப் பகுதியான திருக்கனூரில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது வாகன சோதனையின் போது எந்தவித பாரபட்சமும் இன்றி அவ்வழியாக செல்லும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு வம்சித ரெட்டி, திருக்கனூர் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் தேர்தல் துறையின் சோதனைச் சாவடி ஊழியர்கள், துணை ராணுவ படையினர் உடனிருந்தனர்.
தொடர்ந்து எல்லைப் பகுதிகளான முள்ளோடை, சோரியாங்குப்பம், மணமேடு ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடிகளுக்கு சென்று அவர் ஆய்வு செய்தார்.
இதேபோல் தேர்தல் பொதுப்பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள பியூஷ் சிங்லா ஏம்பலம், பாகூர் தொகுதிகளில் பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ள இடங்களுக்கு சென்று ஆய்வு செய்தார்.
- அதிகபட்சமாக நேற்று முன்தினம் 95.72 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது.
- பாராளுமன்ற தேர்தலையொட்டி புதுச்சேரியில் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுச்சேரி:
தமிழகம்-புதுச்சேரியில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் இறுதி வாரத்தில் இருந்து ஜூன் மாதம் வரை கோடை காலமாகும்.
அந்த வகையில் தற்போது புதுச்சேரியில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
தினமும் 93 முதல் 94 டிகிரி வெயில் பதிவாகி வருகிறது. இதில் அதிகபட்சமாக நேற்று முன்தினம் 95.72 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது.
நேற்று 94.64 டிகிரி வெயில் பாதிவாகியுள்ளது. காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.
இதனால் பொதுமக்களும் பகல் நேரங்களில் வெளியே செல்வதை தவிர்த்து வருகின்றனர். மேலும், கோடை வெயிலை சமாளிக்க மக்கள் இளநீர், தர்பூசணி, நுங்கு மற்றும் பழச்சாறுகளை வாங்கி பருகி வருகின்றனர். இதனால் அவற்றின் விற்பனையும் ஜரூராக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே பாராளுமன்ற தேர்தலையொட்டி புதுச்சேரியில் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெயிலின் தாக்கத்தால் வேட்பாளர்கள் திணறி வருகின்றனர். மேலும் தொண்டர்கள் சோர்வடைந்து விடுவதால் காலை 8 மணிக்கே பிரசாரத்தை தொடங்கும் வேட்பாளர்கள் மதியம் 12 மணிக்குள் முடித்துக் கொள்கின்றனர்.
அதன் பிறகு வெயில் தாழ்ந்தவுடன் மாலை 6 மணிக்கு மீண்டும் பிரசாரத்தை தொடங்குகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்