search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • தி.மு.க. குற்றச்சாட்டு
    • அரசு அதிகாரிகள் பயன்படுத்தப்படுவது ஏற்புடையதல்ல. இதனால் அரசு எந்திரம் ஸ்தம்பித்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை எதிர்க்கட்சி தலைவர் சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மாநில பொறுப்பு கவர்னர் தமிழிசை பா.ஜனதாவின் முழுநேர அரசியல் வாதியாக செயல்படுகிறார். பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதால் மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்கு தெரியப்படுத்து கிறோம் என்ற போர்வையில் அரசு அதிகாரிகளை மூலமாக தேர்தல் பிரச்சா ரத்தை தொடங்கி உள்ளார்.

    மாநில அரசின் திட்ட பயன்கள் மக்களை சென்றடைகிறதா.? என கவலைப்படாத கவர்னர் மத்திய அரசின் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது. இதற்கு அரசு அதிகாரிகள் பயன்படுத்தப்படுவது ஏற்புடையதல்ல. இதனால் அரசு எந்திரம் ஸ்தம்பித்துள்ளது.

    மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்ற இந்த 10 ஆண்டுகால ஆட்சியில் புதுவைக்கு கொண்டு வரப்பட்ட திட்டங்கள் எத்தனை?. அதற்காக எத்தனை கோடி நிதி ஒதுக்கப்பட்டது என்பதை பட்டியலிட முடியுமா?.

    மோடி அரசு மீது மக்களுக்கு உள்ள அதிருப்தியை திசை திருப்பவும், பாராளுமன்ற தேர்தலில் புதுவையில் பா.ஜனதாவை போட்டியிட வைக்கும் பணியினை விக்சித் பாரத் சங்கல்ப யாத்ரா பிரசாரம் மூலம் முன்னின்று செய்து வருகிறார். இதற்காக அரசு எந்திரத்தை பயன்படுத்து வதும் சரியல்ல. கவர்னரின் இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறோம்.

    இவ்வாறு சிவா அறிக்கையில் கூறியுள்ளார்.

    • ரூ.1.63 கோடி மதிப்பில் பஸ் நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கியது.
    • பஸ் நிலைய திட்டத்தை மீண்டும் துவங்கி பயன்பாட்டிற்கு கொண்டு வருவது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    புதுச்சேரி:

    பாகூரில் பஸ் நிலையம் அமைக்கப்பட வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை இருந்து வருகிறது.

    இந்த நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மத்திய அரசின் ரூர்பன் திட்டத்தின் கீழ் ரூ.1.63 கோடி மதிப்பில் பஸ் நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கியது.

    ஆனால், கட்டுமானங்களுக்கான அஸ்திவாரம் அமைக்கப் பட்ட நிலையில் பணிகள் முடிவடையாமல் கிடப்பில் போடப்பட்டதால், அந்த ஒப்பந்த்தம் ரத்து செய்யப்பட்டது.

    இந்நிலையில், மீண்டும் அத்திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக, செந்தில்குமார் எம்.எல்.ஏ., பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் வீரசெல்வம், செயற்பொறியாளர் கள் சந்திரசேகர், பாலசுப்ரமணியன் மற்றும் அதிகாரிகளுடன் சென்று பஸ் நிலைய கட்டுமான பணி நடைபெற்ற பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது, பஸ் நிலைய திட்டத்தை மீண்டும் துவங்கி பயன்பாட்டிற்கு கொண்டு வருவது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். 

    • எதிர்க்கட்சி தலைவர் சிவா தொடங்கி வைத்தார்
    • ரூ.1 ¾ லட்சத்திற்கான காசோலையையும் எதிர்க்கட்சித் தலைவருமான சிவா அந்தந்த கோவில் நிர்வாகிகளிடம் வழங்கினார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர ஜி.என்.பாளையம் பேட் ஸ்ரீ குழந்தைமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    இதனையொட்டி கோவிலில் திருப்பணிகள் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. எதிர்க்கட்சி தலைவருமான சிவா திருப்பணியை பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து வில்லியனூர் தொகுதியில் உள்ள கொம்பாக்கம் குப்பம்பேட் மாரியம்மன் கோவில், ஓட்டம் பாளையம் முனீஸ்வரர் கோவில், முத்துப்பிள்ளை பாளையம் ஸ்ரீ கழுத்து முத்துமாரியம்மன் கோவில், எஸ்.எஸ்நகர் தேசபக்தி முத்து மாரியம்மன் கோவில் ஒரு கால பூஜைக்கு அரசின் இந்து அறநிலையத்துறை மூலம் தலா ரூ.20 ஆயிரம் விதம் 4 கோவில்களுக்கு ரூ.80 ஆயிரம் காசோலையும், உத்திரவாகினிபேட் பெரிய பாளையத்தம்மன் கோவில் திருப்பணிக்கு ரூ.1 ¾ லட்சத்திற்கான காசோலையையும் எதிர்க்கட்சித் தலைவருமான சிவா அந்தந்த கோவில் நிர்வாகிகளிடம் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சிகளில் தி.மு.க. தொகுதி செயலாளர் மணிகண்டன் பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, தர்மராஜன் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

    • கவர்னரிடம் கேள்வி எழுப்பிய பெண்கள்
    • பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    புதுச்சேரி:

    நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம், என்று பெயரிடப்பட்ட திட்டத்தின் வாயிலாக நலத்திட்டங்களின் செறிவூட்டலை அடைவதற்கான விழிப்புணர்வு நாடு தழுவிய பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக பாகூர் கிழக்கு பஞ்சாயத்துஇந்த நிகழ்ச்சி நடந்தது. அதில் சிறப்பு விருந்தினராக, கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன், கலெக்டர் வல்லவன், துணை கலெக்டர் மகாதேவன், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் வேளாண் துறை, குடிமை பொருள் வழங்கல் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலமாக பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது.

    இதனிடையே தொடர்ந்து கவர்னர் நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்களிடம் கலந்துரையாடினார். அப்போது கவர்னரிடம் புதுச்சேரியில் மட்டும் தான் ரேஷன் கடைகள் இல்லாமல் உள்ளது. ரேஷன் கடையை எப்போது திறக்கப் போகிறீர்கள்? பிரதமர் மோடி மாதம் 5 கிலோ அரிசி ரேஷன் கடை மூலமாக வழங்கப்படும் என்று கூறியுள்ளார். நீங்கள் எதன் மூலமாக மக்களுக்கு வழங்குவீர்கள்.? என்று அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு கேட்டனர். இதற்கு கவர்னர் விரைவில் பதில் சொல்கிறேன் என்று கூறினார்.

    இருந்தும் அங்கிருந்த இந்திய தேசிய மாதர் சம்மேளன தலைவர் தசரதா, அமுதா உள்ளிட்ட பெண்கள் கவர்னரிடம் திரும்பவும் ரேஷன் கடை பற்றி கேள்வி எழுப்பிக் கொண்டே இருந்தனர். இதனை தொடர்ந்து அவர்களை அங்கிருந்து போலீசார் அப்புறப்படுத்த முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து மருத்துவ காப்பீடு, கியாஸ் மற்றும் வீடு கட்ட மானியம் பெற்ற பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று சந்தித்தார். பின்னர் பாகூர் மூலநாதர் சாமி கோவிலில் கவர்னர் தமிழிசை தரிசனம் செய்தார்.

    • ஆர்ப்பாட்டத்துக்கு ஆறுமுகம் தலைமை வகித்தார்.
    • விளையாட்டு போட்டிகள் நடத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

    புதுச்சேரி:

    புதுவை பார்வையற்றோர் கல்லூரி மாணவர்கள் பட்டதாரிகள் சங்கம், தேசிய பார்வையற்றோர் இணையம் இணைந்து புதுவை அரசு ஆஸ்பத்திரி அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    ஆர்ப்பாட்டத்துக்கு ஆறுமுகம் தலைமை வகித்தார். மணிகண்டன் வரவேற்றார். சிவக்குமார், புவனேஷ், ரோஜாமேரி, சந்துரு, முருகேசன், எத்திராஜூ, ஜான்ஜேம்ஸ், சூரியா முன்னிலை வகித்தனர்.

    புதுவையில் உள்ள தனியார், தன்னாட்சி கல்லூரிகளில் மாற்று திறனாளிகளுக்கு இலவச கல்வி, தங்குமிடம் வழங்க அரசாணை வெளியிட வேண்டும். பிற மாநிலம் போல சிறப்பு ஆட்சேர்ப்பு தேர்வு நடத்தி சி,டி பிரிவுகளில் 375 காலி பணியிடங்கைள நிரப்ப வேண்டும்.

    பார்வையற்றவர்களின் அரசு வேலைவாய்ப்பை 56-ஆக உயர்த்த வேண்டும். வேலையற்றவர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும். அனைத்து தனியார் நிறுவனத்திலும் 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க அரசாணை வெளியிட வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

    • சமூக நலத்துறை இயக்குனர் குமரன் தொடங்கி வைத்தார்
    • சமூக சேவகர் முருகசாமி, பேபி சாரா இல்ல அலுவலர் தமிழ்ச்செல்வம் மற்றும் ஊழியர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பத்தை அடுத்த காக்காயந்தோப்பு பகுதியில் உள்ள பேபி சாரா இல்லத்தில் மத்திய அரசின் கீழ் செயல்படும் தேசிய அறக்கட்டளையின் வழிகாட்டுதலின் படி ஒருங்கிணைந்த புணர்வாழ்வு மற்றும் மேம்பாட்டு மையம், சுய வழக்காடுதல் மன்றம் மற்றும் பரிவார் அமைப்பு ஆகியவை இணைந்து சுய வழிகாட்டுதல் என்ற தலைப்பில் 2 நாள் பயிற்சி முகாம் நடக்கிறது.  பயிற்சி முகாம் தொடங்கியது. நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த புணர்வாழ்வு மற்றும் மேம்பாட்டு மைய செயலாளர் ஸ்டீபன்ராஜ் வரவேற்றார்.

    புதுவை சமூக நலத்துறை இயக்குநர் குமரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி சிறப்புரையாற்றினார்.

    பேபி சாரா இல்ல துணை நிறுவனர் விக்டோரியா முன்னிலை வகித்தார். திருச்சி குழந்தைகள் நலக் குழுமத்தின் உறுப்பினர் மற்றும் வக்கீல் பவுலின்சோபியா ராணி, சுய வழக்காடு பயிற்சியாளர் நிர்மலா ஆகியோர் பயிற்சிகளை நடத்து கின்றனர்.

    வீராம்பட்டினம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி அல்லி மருத்துவ ஆலோசனைகளை வழங்கினார். சமூக சேவகர் அய்யம்மாள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சமூக சேவகர் முருகசாமி, பேபி சாரா இல்ல அலுவலர் தமிழ்ச்செல்வம் மற்றும் ஊழியர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    முடிவில் ஒருங்கிணைந்த புணர்வாழ்வு மற்றும் மேம்பாட்டு மைய தன்னார்வலர் நித்யா ஜெனிபர் நன்றி கூறினார்.

    • திருபுவனை சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் கலந்து கொண்டு பேசினார்.
    • நாட்டு நல பணி திட்ட அதிகாரிகள், ஆசிரியர்கள், பள்ளி மாணவ-மாணவி யர்கள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    மதகடிப்பட்டு கலைஞர் கருணாநிதி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு போதை தடுப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், திருபுவனை சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் கலந்து கொண்டு பேசினார்.

    அதனை தொடர்ந்து பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் பள்ளி யின் துணை முதல்வர், நாட்டு நல பணி திட்ட அதிகாரிகள், ஆசிரியர்கள், பள்ளி மாணவ-மாணவி யர்கள் கலந்து கொண்டனர்.

    • பல ஆண்டுகளாக சாலை வசதி இல்லை. தற்போது மழை பெய்து வருவதால் அங்கு சேரும் சகதியுமாக உள்ளது.
    • தங்கள் பகுதிக்கு உடனடியாக சாலை வசதி செய்து தர வேண்டும் என்று அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

    புதுச்சேரி:

    திருபுவனை அருகே உள்ள தமிழகப் பகுதியான பெரிய பாபு சமுத்திரம் கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

    இவர்கள் வசிக்கும் பகுதியில் பல ஆண்டுகளாக சாலை வசதி இல்லை. தற்போது மழை பெய்து வருவதால் அங்கு சேரும் சகதியுமாக உள்ளது.

    இதனால் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் வேலைக்கு செல்வோர் அனைவரும் இந்த சேரும் சகதியுமான பகுதியை கடந்து தான் செல்ல வேண்டும். ஏற்கனவே தங்கள் பகுதிக்கு சாலை வசதி செய்து தரக் கோரி அப்பகுதி மக்கள் பலமுறை ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

    இந்த நிலையில் இன்று காலை அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சேரும் -சகதியுமான சாலையில் நாற்று நட்டு சாலை வசதி செய்து தரக்கோரி கண்டமங்கலத்தில் இருந்து செல்லிப்பட்டு செல்லும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் பகுதிக்கு உடனடியாக சாலை வசதி செய்து தர வேண்டும் என்று அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

    இந்த மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    • மாணவர்கள் உருவாக்கிய 167 அறிவியல் படைப்புகள் இக்கண்காட்சியில் இடம்பெற்று இருந்தது.
    • அனைத்து ஆசிரியர்கள்-ஆசிரியைகள் மற்றும் பள்ளி ஊழியர்கள் பள்ளி மேலாண்மை குழுவினர் செய்திருந்தனர்.

     புதுச்சேரி:

    புதுவை தமிழ் தென்றல் திரு.வி.க.அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் வீரமாமுனிவர் அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளி ஆகியவை இணைந்து அறிவியல் கண்காட்சியை நடத்தியது.

    தொடக்க விழா நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மரூபஸ், தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக பிரெஞ்சு அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மனோஜ் கலந்துகொண்டு அறிவியல் கண்காட்சியை தொடங்கி வைத்தார். மாணவர்கள் உருவாக்கிய 167 அறிவியல் படைப்புகள் இக்கண்காட்சியில் இடம்பெற்று இருந்தது.

    கொம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளி அறிவியல் ஆசிரியர் ஞானமணி, சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு காட்சி படைப்புகளை மதிப்பீடு செய்து சிறந்த படைப்புகளை தேர்வு செய்தார்.

    பள்ளி அளவில் நடைபெற்ற இக்கண்காட்சிக் கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் தலைமையில் அனைத்து ஆசிரியர்கள்-ஆசிரியைகள் மற்றும் பள்ளி ஊழியர்கள் பள்ளி மேலாண்மை குழுவினர் செய்திருந்தனர்.

    • அந்த பகுதி மக்கள் தொகுதி எம்.எல்.ஏ. பிரகாஷ்குமாரை சந்தித்து முறையிட்டனர்.
    • கேபிள் பிரிவு இளநிலை பொறியாளர் லோகநாயகி, பிகோத்தே உள்பட அப்பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதி சோலை நகர் வீதியில் அமைந்துள்ள சப்தகிரி கார்டன் பகுதிக்கு பல வருடங்களாக புதைவட கேபிள் இல்லாமல் இருந்தது.

    இதனால் மின்சார சப்ளையில் அவ்வப்போது பாதிப்பு இருந்து வந்தது. இதுகுறித்து அந்த பகுதி மக்கள் தொகுதி எம்.எல்.ஏ. பிரகாஷ்குமாரை சந்தித்து முறையிட்டனர்.

    இதையடுத்து இப்பகுதியில் புதைவட கேபிள் அமைப்பதற்காக ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இப்பணியும் வீட்டு இணைப்புக்கான கேபிள் அமைக்கும் பணியும் மேற்கொள்வ தற்கான பூமி பூஜையை பிரகாஷ் குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் மின்துறை செயற்பொறியாளர் கனியமுதன், புதைவட கேபிள் பிரிவு செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி பொறியாளர் திலகராஜ், கேபிள் பிரிவு உதவி பொறியாளர் முருகசாமி, இளநிலை பொறியாளர் குமார், கேபிள் பிரிவு இளநிலை பொறியாளர் லோகநாயகி, பிகோத்தே உள்பட அப்பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.

    • பிரமரின் வளர்ச்சியடைந்த பாரதம் என்பது நமது லட்சியம்.
    • மழைக்கால நடவடிக்கைகளுக்காக காய்ச்சல் முகாம்கள் தொடங்கப்பட்டிருக்கிறது.

    புதுச்சேரி:

    பிரதமர் மோடி கலந்துரையாடுதல் மற்றும் கானொளி மூலம் உரையாற்றும் நிகழ்ச்சி புதுச்சேரி அருகே சேலியமேடு கிராம பஞ்சாயத்தில் அரங்கனூர் சமூதாய நலக்கூடத்தில் நடைபெற்றது.

    சிறப்பு விருந்தினராக, கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் கலந்துகொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அவர் கூறியதாவது:-

    பிரமரின் வளர்ச்சியடைந்த பாரதம் என்பது நமது லட்சியம். 'மோடி கேரண்டி வேன்' எல்லா கிராமங்களுக்கும் சென்று மத்திய அரசின் திட்டங்களை விளக்கி வருகிறது. பிரதமர் சொன்னது போன்று மூளை முடுக்குகளிலும் கூட மத்திய அரசின் திட்டங்கள் சென்று சேர்ந்திருக்கிறது. இது போன்ற பயனாளர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு வாழ்த்துக்கள் சொல்வதற்கும் இன்னும் பல பயனாளிகளை கண்டறிவதற்கும் இந்த திட்டம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

    பிரதமரின் வீடு கட்டும் திட்டப் பயனாளியின் வீட்டுக்கு சென்றிருந்தேன். அந்த வீட்டின் உரிமையாளர் "அம்மா இதற்கு முன்பு ஓலை வீட்டில் இருந்தேன். இப்போது கான்கிரீட் வீட்டில் வசிக்கிறேன். அதற்கு பிரதமரின் வீடு கட்டும் திட்டம் தான் காரணம்" என்று கூறினார்.

    அதைப்போல இன்னும் தேவைகள் அதிகமாக இருக்கும் பட்சத்தில் அவற்றைக் கண்டறிவதற்கும் இது உதவுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனை தொடர்ந்து புதுச்சேரியில் மழைக்கால காய்ச்சலை தடுக்க அரசு எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவிலலை என்று குற்றச்சாட்டு கூறப்படுவது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து கவர்னர் தமிழிசை கூறியதாவது:-

    மழைக்கால நடவடிக்கைகளுக்காக காய்ச்சல் முகாம்கள் தொடங்கப்பட்டிருக்கிறது. படுக்கை வசதிகள், மருந்து மாத்திரைகள் எல்லாம் முன்னெச்சரிக்கையாக தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது. ஆகவே குறை சொல்ல வேண்டும் என்பதற்காகவே பேச வேண்டாம். மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் நாம் பேச வேண்டும்.

    தொடர்ந்து அவரிடம் நிருபர்கள் இந்த ஆட்சியில் எல்லாத்துறைகளிலும் 30 சதவீதம் கமிஷன் வைக்கப்படுகிறது. ஊழல் மிகுந்த ஆட்சியாக இருக்கிறது. இதில் கவர்னருக்கும் சம்மந்தம் இருக்கிறது என்றும், இது சம்மந்தமாக ஜனாதிபதிக்கும் புகார் தெரிவிக்க உள்ளோம் என்று எதிர்கட்சியினர் குற்றச்சாட்டு வைத்துள்ளனரே என்ற கேள்விக்கு, இது தொடர்பாக அவர்களிடம் தான் கேட்க வேண்டும்.

    இதில் கவர்னருக்கு சம்மந்தம் இருக்கிறது என்று எப்படி சொல்ல முடியும்? சம்பந்தமே இல்லாமல் பேசிவிட்டு சம்பந்தம் இருக்கிறது என்றால் என்ன அர்த்தம்.

    இவ்வாறு கவர்னர் தமிழிசை தெரிவித்தார்.

    • ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெற வந்த நோயாளிகளும் உள்ளே செல்ல முடியாமல் அவதியடைந்தனர்.
    • மருத்துவமனைக்கு பூட்டு போட்டவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அடுத்த மண்ணாடிப்பட்டை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 21). இவரது உறவினரின் இறுதிச்சடங்கின்போது பட்டாசு வெடித்ததில், ரவிக்குமாருக்கு கையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை அப்பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லுமாறு டாக்டர்கள் பரிந்துரை செய்தனர். அப்போது ஆஸ்பத்திரியில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்சில் ரவிக்குமாரை புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்செல்லுமாறு உறவினர்கள் டாக்டர்களிடம் வற்புறுத்தினர்.

    அப்போது ஆம்புலன்ஸ் ஓட்ட டிரைவர் இல்லை என்றும் தனியாக வாகனத்தை ஏற்பாடு செய்து கொள்ளுமாறு டாக்டர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த அங்கு நின்றிருந்த வாலிபர்கள் டாக்டர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் ஆஸ்பத்திரியின் மெயின் கேட்டை இழுத்து மூடி பூட்டு போட்டனர்.

    இதனால் டாக்டர்கள், நர்சுகள், வெளியே வரமுடியாமல் தவித்தனர்.

    மேலும் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெற வந்த நோயாளிகளும் உள்ளே செல்ல முடியாமல் அவதியடைந்தனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் திருக்கனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பூட்டை உடைத்து கதவை திறந்தனர்.

    இதையடுத்து டாக்டர்கள், ஊழியர்கள் மற்றும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற நோயாளிகள் வெளியே வந்தனர். மருத்துவமனைக்கு பூட்டு போட்டவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×