search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • திட்டங்களை விரைவாக செயல்படுத்த மாநில அந்தஸ்து தேவை.
    • எம்.பி.க்கள் புதுச்சேரிக்காக கேள்வி எழுப்பி மாநில அந்தஸ்து தர வலியுறுத்த வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பதிலளித்து முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

    சபையில் பேசிய அனைத்து எம்.எல்.ஏ.க்களும் புதுவைக்கு தனி மாநில அந்தஸ்து பெறுவது குறித்து பேசினர். மக்களின் எண்ணமும் அதுவாக தான் உள்ளது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு மத்திய அரசை வலியுறுத்தி கொண்டே உள்ளோம்.

    பல முறை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியுள்ளோம். கடந்த முறை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியபோது மத்திய அரசு மாநில அந்தஸ்து தர வாய்ப்பில்லை என்று அறிவித்துவிட்டது.

    எம்.எல்.ஏ.க்கள் தெரிவிக்கும் குறைகளை சரி செய்யவும், கேட்கும் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றவும் மாநில அந்தஸ்து தேவை.

    மத்திய அரசை கேட்டு வலியுறுத்தி வருகிறோம். அரசு என்றால் சட்டசபை என இல்லாமல் கவர்னர் ஒப்புதலும் மிக அவசியம். மறைவாக இருந்த இதை உச்சநீதிமன்றம் வரை சென்று கவர்னருக்கு தான் அதிகாரம் என வெளிப்படையாக தெரிவிக்க செய்து விட்டனர். அதன் காரணமாக அனைத்தும் காலதாமதம் ஆகிறது.

    கோப்புகளை பார்க்கும் எல்.டி.சி., முதல் தலைமைச் செயலர் வரை அவர்கள் என்ன நினைக்கின்றார்களோ அதுதான் நிறைவேற வேண்டும் என நினைக்கின்றனர்.

    அதனால் கோப்பு தேங்கி கிடக்கிறது. இப்படி இருந்தால் மக்கள் எண்ணங்கள் எப்படி நிறைவேறும்? இதனை சுட்டி காட்டி மத்திய அரசிடம் மாநில அந்தஸ்து கேட்டு வலியுறுத்துகிறோம்.

    திட்டங்களை விரைவாக செயல்படுத்த மாநில அந்தஸ்து தேவை. எம்.பி.க்கள் புதுச்சேரிக்காக கேள்வி எழுப்பி மாநில அந்தஸ்து தர வலியுறுத்த வேண்டும்.

    இதன் மூலம் வருவாய் மற்றும் மத்திய அரசின் உதவி அதிகம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதனால் மாநில அந்தஸ்து பெற தயக்கம் இல்லை.

    மாநில அந்தஸ்து பெற்றால் சிரமமின்றி புதுச்சேரிக்கான திட்டங்களை நிறைவேற்ற முடியும். அரசு பொறுப்பேற்ற போது, காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் 3 மாதத்தில் நிரப்பலாம் என நினைத்தால், 3 ஆண்டு முடிந்தும் நிரப்ப முடியாத நிலை உள்ளது.

    மாநில அந்தஸ்து தான் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. எனவே நமது எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்த வேண்டும். இந்தியா கூட்டணிக்கும் அதிக எம்.பி.,க்கள் கிடைத்துள்ளனர். அவர்களும் பாராளுமன்றத்தில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்க வலியுறுத்த வேண்டும்.

    நாமும் டெல்லி சென்று பிரதமர் உள்ளிட்டோரை சந்தித்து பேசலாம். புதுச்சேரி மாநிலம் பெரிய அளவில் வளர்ச்சி காண மாநில அந்தஸ்து வேண்டும்.

    கடந்த காலத்தில் கருத்து வேறுபாடுகளை கோப்புகளில் கவர்னர் வெளிப்படுத்த தொடங்கினர். அதுவும் வளர்ச்சிக்கு தடையானது.

    இவ்வாறு முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசினார்.

    • கும்பலின் தலைவன் அசாம்கானை போலீசார் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
    • விசாரணையில் பெங்களூருவில் தங்கியிருந்த வடமாநில கும்பல் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவருக்கு கனடா நாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி ஆன்லைன் மோசடி கும்பல் ரூ.17 லட்சத்து 71 ஆயிரத்து பெற்று ஏமாற்றியது. இதுகுறித்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பெங்களூருவில் தங்கியிருந்த வடமாநில கும்பல் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்தி தலைமையிலான போலீசார் பெங்களூரில் பதுங்கி இருந்த கும்பலை கியாஸ் சிலிண்டர் டெலிவரி செய்யும் ஊழியர்கள் போல் மாறு வேடத்தில் சென்று சுற்றி வளைத்து 4 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர்.

    விசாரணையில் அவர்கள் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த சுபம் ஷர்மா (வயது 29), நிரஜ்சூர்ஜார்(29), உத்தர காண்டை சேர்ந்த ராஜ் கவுண்ட்(28) ஆகியோர் என்பது தெரியவந்தது.

    மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. இவர்கள் உத்தரபிரதேசத்தை சேர்ந்த அசாம்கான் தலைவனாக கொண்டு புதுச்சேரி, தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடாக உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வேலை தேடும் இளைஞர்களை குறி வைத்து 3,400 பேரிடம் சுமார் ரூ.200 கோடி வரை மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

    ஒரு மாதத்திற்கு ரூ.6 கோடி என இலக்கு வைத்து அவர்கள் வேலை தேடும் இளைஞர்களிடம் பணம் பறித்துள்ளனர்.

    இந்த நிலையில் கைதானவர்களிடம் இருந்து போலீசார் கைப்பற்றிய செல்போன், லேப்-டாப் ஆகியவற்றை ஆய்வு செய்த போது இதில் ஏமாந்தவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே சென்றது.

    ஏற்கனவே 3,400 பேரிடம் மோசடி செய்த அந்த கும்பல் மேலும் 360 பேரை தங்கள் வலையில் வீழ்த்தி பல கோடி மோசடி செய்தது தெரியவந்துள்ளது.

    மேலும் மாநில வாரியாக ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்தவர்களின் விவரங்களை சைபர் கிரைம் போலீசார் தயார் செய்து வருகிறார்கள். அந்த பட்டியலை அந்தந்த மாநிலங்களை சேர்ந்த போலீசாருக்கு அனுப்பி வைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இதற்கிடையே இந்த பெரும் மோசடிக்கு மூளையாக செயல்பட்ட கும்பலின் தலைவன் அசாம்கானை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். போலீசார் தேடுவதை அறிந்த மோசடி கும்பல் தலைவன் அடிக்கடி தனது இருப்பிடத்தை மாற்றி கொள்வதால் அவனை பிடிப்பதில் போலீசாருக்கு சவாலாக உள்ளது. எனினும் ஓரிரு நாளில் அவன் புதுச்சேரி போலீசாரிடம் சிக்கி கொள்வான் என்று சைபர் கிரைம் போலீசார் உறுதியாக சொல்கிறார்கள்.

    • காலநிலை மாற்றத்தால் ஏற்படுகிறதா என கண்டறிந்து நிரந்த தீர்வு காணப்பட உள்ளது.
    • கடற்கரை பகுதிகள் கடல் அரிப்பால் சிறிது, சிறிதாக மாயமாகி வருகிறது.

    புதுச்சேரி:

    வங்காள விரிகுடா கடற்கரையில் அமைந்துள்ள அழகிய சுற்றுலா நகரம் புதுச்சேரி. மினி கோவா என அழைக்கப்படும் புதுச்சேரியில் கனகசெட்டிக் குளம் தொடங்கி புதுக்குப்பம் முள்ளோடை வரை 31 கி.மீ. நீள கடற்கரை உள்ளது.

    இதில் பழைய சாராய ஆலையில் இருந்து சீகல்ஸ் ஓட்டல் வரை உள்ள ப்ரோமனட் கடற்கரை (ராக் பீச்), பாண்டி மெரினா, சின்ன வீராம்பட்டினம் ஈடன் கடற்கரை, நோணாங்குப்பம் பேரடைஸ் கடற்கரை பிரசித்தி பெற்றது.

    இங்குள்ள கடற்கரை பகுதிகள் கடல் அரிப்பால் சிறிது, சிறிதாக மாயமாகி வருகிறது. 2 நாட்களுக்கு முன்பு இருந்த கடற்கரையின் ஒரு பகுதி, திடீரென மாயமாகி விடுகிறது. அந்த அளவுக்கு புதுச்சேரி கடலில் காலநிலை மாற்றத்தால் கடல் அரிப்பு அதிகரித்து வருகிறது.

    புதுச்சேரி கடற்கரையில் ஏற்படும் கடல் அரிப்பு மற்றும் அதனை தடுப்பதற்கான வழிகளை கண்டறிய மத்திய அரசின் சென்னை பள்ளிக்கரணையில் உள்ள தேசிய கடலோர ஆராய்ச்சி மையம் புதுச்சேரியில் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது.

    அதன்படி, டாபோ கிராபிகல் கருவி மூலம் கடற்கரை உருவாக்கம் குறித்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர். ஒவ்வொரு 3 மாதத்திற்கும் ஒரு முறை இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. கடற்கரை மற்றும் கடல் நீரூக்குள் 1 மீட்டர் வரையிலான ஆழம் வரை சென்று கடல் அலையின் உயரம் உள்ளிட்டவை குறித்த தகவல்களை சேகரிக்கின்றனர்.

    இப்படி ஆண்டு முழுதும் 3 மாதத்திற்கு ஒரு முறை எடுக்கப்படும் ஆய்வு தரவுகள் ஒட்டுமொத்தமாக சேகரித்து ஆய்வு செய்யப்பட உள்ளது. அதன் பிறகே கடலில் தூண்டில் முள் வளைவுக்காக கொட்டிய கல், செயற்கை கடற்கரை உருவாக்க செய்யப்பட்ட கூம்பு வடிவ இரும்பு பொருள் உள்ளிட்டவையால் கடல் அரிப்பு ஏற்படுகிறதா, காலநிலை மாற்றத்தால் ஏற்படுகிறதா என கண்டறிந்து நிரந்த தீர்வு காணப்பட உள்ளது.

    • கூடுதல் பொறுப்பு வகித்து வந்தவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் மகாராஷ்டிர மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்கள்.
    • புதுச்சேரி ராஜ்நிவாஸில் பதவி ஏற்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு புதிய ஆளுநர்களை நியமித்தார்.

    அதன்படி, குஜராத்தில் 2013 முதல் 2014 வரை அப்போதைய முதல்வர் நரேந்திர மோடியின் முதன்மைச் செயலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி கே.கைலாஷ்நாதன் புதுச்சேரியின் லெப்டினன்ட் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    மேலும், ஜார்க்கண்ட் மாநில ஆளுநராகவும், புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராகக் கூடுதல் பொறுப்பு வகித்து வந்தவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் மகாராஷ்டிர மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்கள்.

    இந்த நிலையில், புதுச்சேரி ஆளுநராக ஓய்வு கைலாசநாதன் வரும் ஆகஸ்ட் 7ம் தேதி காலை 11 மணிக்கு புதுச்சேரி ராஜ்நிவாஸில் பதவி ஏற்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மத்திய அரசு திட்டங்களின் கீழ் வழங்கும் நிதி ரூ.430 கோடியாக இருக்கும்.
    • ஓய்வூதியம், கடன், வட்டி செலுத்துதல் உள்ளிட்ட செலவினங்களுக்கு செலவிடப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி 15-வது சட்டப்பேரவையின் 5-வது கூட்டத்தொடர் கடந்த 31ம் தேதி தொடங்கியது.

    கூட்டத்தொடரை கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்து உரையாற்றினார். நேற்று 2-வது நாளாக புதுவை சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் பேசினர்.

    இன்று 3-வது நாள் சட்டசபை காலை 9 மணிக்கு கூடியது. சபாநாயகர் ஏம்பலம் செல்வம் குறள் வாசித்து சபை நிகழ்வுகளை தொடங்கி வைத்து 2024-25-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யும்படி சபாநாயகர் அழைப்பு விடுத்தார்.

    இதைத்தொடர்ந்து நிதி பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி 2024-25-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து 9.05 மணிக்கு பேச தொடங்கினார்.

    பிரதமராக மோடி 3-வது முறையாக தேர்ந்தெடுத்த நாட்டு மக்களின் நம்பிக்கையை பாராட்டுகிறேன். பிரதமர் தலைமையின் கீழ் எதிர்வரும் ஆண்டுகளில் விக்சித்பாரத் 2047 திட்டம் முழுமையாக நிறைவடையும் என உறுதியாக நம்புகிறேன். அண்மையில் நடந்த பாராளுமன்ற தேர்தல் சுமூகமாகவும், அமைதியாகவும் நடந்தது.

    இதற்காக ஓய்வின்றி பணியாற்றிய அனைத்து துறை ஊழியர்கள், அதிகாரிகள், பொதுமக்களுக்கு பாராட்டுகள். ஏழை எளிய மக்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்தை முதன்மையாக கொண்டு, பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் பயனாக மொத்த உற்பத்தி குறியீடு, தனி நபர் வருமானம் நிலையாகவும், சீராகவும் வளர்ந்து வருகிறது.

    கடந்த 1.4.2024 முதல் 31.8.2024 வரை 5 மாதங்களுக்கு அரசின் அன்றாட செலவினங்களுக்காக முன்னளி மானியமாக ரூ.5 ஆயிரத்து 187 கோடிக்கு பேரவையில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. மூலதன செலவினங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடுசெய்வதன் முக்கியத்தவத்தை கருத்தில் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

    2024-25ம் ஆண்டின் பட்ஜெட் ரூ.12 ஆயிரத்து 700 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.6 ஆயிரத்து 914.66 கோடி அரசின் சொந்த வருவாய். பேரிடர் நிவாரண நிதியும் சேர்த்து மத்திய அரசின் நிதியுதவி ரூ.3 ஆயிரத்து 268.98கோடி. மத்திய சாலை நிதி ரூ.20 கோடி மற்றும் மத்திய அரசு திட்டங்களின் கீழ் வழங்கும் நிதி ரூ.430 கோடியாக இருக்கும்.

    நிதி பற்றாக்குறையை ஈடுகட்ட ரூ.2 ஆயிரத்து 66 கோடியே 36 லட்சம் கடன்தொகையாக திரட்ட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. பட்ஜெட்டில் ரூ.10 ஆயிரத்து 969.80 கோடி வருவாய் செலவினங்களுக்காககவும், ரூ.ஆயிரத்து 730.20 கோடி மூலதன செலவினங்களுக்காகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டை போல இந்த நிதியாண்டிலும் அனைத்து துறைகளுக்குமான சிறப்பு நிதியாக ரூ.2 ஆயிரத்து 442.18 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இதில் பெண்களுக்கு ரூ.ஆயிரத்து 403.46 கோடியும், இளைஞர்களுக்கு ரூ.516.81 கோடியும், பசுமை சிறப்பு நிதியத்துக்கு ரூ.521.83 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசின் நிதி ஆதாரத்தின் பெரும்பகுதி சம்பளம், ஓய்வூதியம், கடன், வட்டி செலுத்துதல் உள்ளிட்ட செலவினங்களுக்கு செலவிடப்படுகிறது.

    நடப்பு நிதியாண்டில் ரூ.2 ஆயிரத்து 574 கோடி சம்பளத்துக்கும், ரூ.ஆயிரத்து 388 கோடி ஓய்வூதியத்திற்கும், ரூ.ஆயிரத்து 817 கோடி கடன், வட்டி செலுத்தவும், ரூ.2 ஆயிரத்து 509 கோடி மின்சாரம் வாங்கவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் அரசின் மற்ற முக்கிய நலத்திட்டங்களான முதியோர் ஓய்வூதியம், குடும்ப தலைவிகளுக்கு நிதியுதவி, கியாஸ் சிலிண்டர் மானியம் உள்ளிட்ட நலத்திட்டங்களுக்கு ரூ.ஆயிரத்து 900 கோடியும், அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் தன்னாட்சி உயர்கல்வி நிறுவனங்களுக்கு ரூ.420 கோடியும், பொதுத்துறை நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்களுக்கு மானிய கொடையாக ரூ.ஆயிரத்து 82 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    குடிமை பொருள் வழங்கும் துறையின் கீழ் இலவச அரிசியுடன் மானிய விலையில் கோதுமை, சர்க்கரை, எண்ணெய், பருப்பு பொதுமக்களுக்கு வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • புதுவை நிர்வாகம் மத்திய அரசுக்கு தனது நன்றியை தெரிவிக்கிறது.
    • 16 ஆயிரம் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோரும், ஆயிரத்து 500 ஆசிரியர், ஊழியர்கள் பயனடைந்துள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தமிழ்தாய் வாழ்த்துடன் தொடங்கியது.

    சட்டசபையில் கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் உரையாற்றினார். அவர் ஆற்றிய உரை வருமாறு:-

    நினைவுகூரத்தக்க இத்தருணத்தில் அவை உறுப்பினர்களுக்கும், புதுவை மக்களுக்கும் என் அன்பான வணக்கத்தையும், நல்வாழ்த்துக்களையும் முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

    புதுச்சேரி சட்டசபையில் 2024-25ம் ஆண்டுக்கான எனது உரையை நிகழ்த்து வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். 15-வது சட்ட சபையின் 5-வது கூட்டத் தொடரை தொடங்கி வைத்து பெருமை வாய்ந்த இந்த அவையில் என் முதல் உரையை ஆற்றுகிறேன். 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் சுமூகமாகவும், அமைதியான முறையிலும் நடந்ததை கண்டு மகிழ்ச்சியடைகிறேன்.

    தேர்தலை சீராக நடத்தியதற்காக அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், தேர்தல் துறைக்கும், காவல்துறைக்கும், பொதுமக்களுக்கும் இத்தருணத்தில் என் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    குறிப்பாக காவல்துறை விழிப்புணர்வுடன் செயல்பட்டதால் விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏதுமின்றி தேர்தல் நடைபெற்றது. இதற்காக காவல் துறை பாராட்டுக்குரியது.

    தொடர்ந்து 3-வது முறையாக பாரத பிரதமராக பதவியேற்றமைக்காக நரேந்திர மோடிக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் தலைமையில் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் பொருளாதார சீர்திருத்தங்கள், உள்கட்டமைப்பு, முதலீடுகள் போன்ற துறைகளில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளது.

    2016-ம் ஆண்டுக்கு முந்தைய ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கான நிலுவைத்தொகை, அரசு கல்வி நிறுவனங்கள், சார்பு கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர், ஊழியர்களின் 7-வது மத்திய ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையிலான நிலுவைத் தொகைக்காக மத்திய அரசு 2023-24ம் ஆண்டில் திருத்திய மதிப்பீட்டில் ரூ.271 கோடி வழங்கியுள்ளது.

    இதன்மூலம் சுமார் 16 ஆயிரம் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோரும், ஆயிரத்து 500 ஆசிரியர், ஊழியர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக புதுச்சேரி நிர்வாகம் மத்திய அரசுக்கு தனது நன்றியை தெரிவிக்கிறது.

    ஏழைகள், சமுதாயத்தில் நலிவுற்றோர் நலனுக்கு முன்னுரிமை அளித்தும், சாலைகள், குடிநீர் வழங்கல், துப்புரவு, மின்விசை, சுகாதாரம், கல்வி, தகவல் தொழில்நுட்பம், தொழில்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம், குழந்தைகள் மற்றும் மகளிர் நலம், வேளாண்மை, கால்நடை பராமரிப்பு, மீன்வளம் போன்ற முக்கியமான துறைகளின் வளர்ச்சியை உறுதிசெய்வதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது.

    நலத்திட்டங்கள் நலிவுற்ற மக்களிடம் விரைவாக சென்றடையும் பொருட்டும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கவும், அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நேரடி போட்டி தேர்வுகள் மூலம் இந்த அரசு நிரப்பி வருகிறது. அதனடிப்படையில் கடந்த நிதி ஆண்டில் நேரடி போட்டி தேர்வு மூலம் பல்வேறு அரசு துறைகளில் உள்ள 1,119 பணி இடங்கள் நிரப்பப்பட்டுள்ளது.

    மத்திய உள்துறை அமைச் சகத்தின் பாராளுமன்ற குழு புதுச்சேரி அரசு துறைகளின் செயல்பாடுகளை பாராட்டியும், நிர்வாக செயல்பாடுகளில் முழு திருப்தியும் வெளிப்படுத்தியுள்ளது. ஆட்சி பரப்பின் நிதி ஆதாரங்கள் அளவாகவே இருப்பதால், அரசு செலவினங்களை வருவாய்க்கு தகுந்தவாறு சீர் செய்து கொள்ள வேண்டிய நிலை உள்ளது. இதனை உறுப்பினர்கள் நன்கு அறிவர்.

    இருப்பினும் ஏழைகளின் நலனுக்காக தேவையான நிதியை வழங்குவதை அரசு உறுதிபடுத்தியுள்ளது. கடந்த நிதி ஆண்டில் மொத்த ஒதுக்கீடான ரூ.12 ஆயிரத்து 250 கோடியில் ரூ.11 ஆயிரத்து 464 கோடி அதாவது 93.58 சதவீதம் செலவு செய்யப்பட்டுள்ளது. இந்த செலவினம் முந்தைய ஆண்டு செலவினத்தோடு ஒப்பிடுகையில் 6.55 சதவீதம் அதிகமாகும்.

    மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை தீர்மானிக்கும் நிதி குறியீடாக, மொத்த உள்நாட்டு உற்பத்தி திகழ்கிறது. கடந்த நிதியாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியாக ரூ.48 ஆயிரத்து 52 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 7.54 சதவீதம் கூடுதலாகும்.

    புதுவையின் தனிநபர் வருமானம் 2022-23-ம் ஆண்டில் ரூ.2 லட்சத்து 44 ஆயிரத்து 469-லிருந்து 2023-24ம் ஆண்டில் ரூ.2 லட்சத்து 63 ஆயிரத்து 68 ஆக உயர்ந்துள்ளது. இது 7.61 சதவீத வளர்ச்சியை காட்டுகிறது.

    இவ்வாறு கவர்னர் உரையாற்றினார்.

    தொடர்ந்து கடந்த ஆண்டில் பல்வேறு துறைகளின் கீழ் அரசால் நிறைவேற்றப்பட்டுள்ள முக்கிய திட்டங்கள், சாதனைகளை கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் எடுத்துரைத்தார்.

    • தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சபையில் அமர்ந்து கவர்னர் உரையை கேட்டனர்.
    • கடந்த பட்ஜெட் அறிவிப்புகளையே அரசு நிறைவேற்றவில்லை.

    புதுச்சேரி:

    புதுச்சேரி சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் உரை இன்று நடைபெற்றது.

    இதையொட்டி காலை 9.25 மணிக்கு கவர்னர் மாளிகையிலிருந்து கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் கார் மூலம் புதுச்சேரி சட்ட சபைக்கு வந்தார். அவரை சபாநாயகர் ஏம்பலம் செல்வம், சட்டசபை செயலாளர் தயாளன் ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து கவர்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    கவர்னரை சபாநாயகர் ஏம்பலம் செல்வம், சட்டசபை மைய மண்டபத்துக்கு அழைத்து வந்தார். சட்ட சபையில் உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கவர்னரை வரவேற்றனர். சபாநாயகர் இருக்கையில் கவர்னர் அமர்ந்தவுடன், காலை 9.30 மணிக்கு சபை நிகழ்வுகள் தமிழ்தாய் வாழ்த்துடன் தொடங்கியது.

    கவர்னர் தனது உரையை தொடங்க முயன்றபோது, எதிர்கட்சித்தலைவர் சிவா தலைமையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நாஜிம், அனிபால்கென்னடி, நாகதியாகராஜன், செந்தில் குமார், சம்பத், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வைத்தியநாதன், ரமேஷ்பரம்பத் ஆகியோர் எழுந்து, மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரிக்கு நிதி ஒதுக்கவில்லை.


    இந்த நிலையில் கவர்னர் உரையில் எந்த மக்கள் நலத்திட்டமும் இருக்காது என குற்றம்சாட்டி விமர்சித்து பேசினர்.

    அப்போது அவர்களை சமாதானப்படுத்திய கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன், நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மைதான் என வைத்துக்கொண்டாலும், நான் என்ன சொல்லப் போகிறேன் என முழுமையாக கேட்டுக்கொண்டு, அதற்கு பின் பதில் வைத்தால் உண்மையான ஜனநாயகமாக இருக்கும். தயவு செய்து அமர்ந்து என்ன உரையாற்றப் போகிறேன் என்பதை உன்னிப்பாக கேளுங்கள், தவறு இருந்தால் சுட்டிக்காட்டுங்கள், அதை ஆளும் கட்சி திருத்திக்கொள்ள வேண்டும். உங்களிடம் அற்புதமான சிந்தனை இருந்தால் அதையும் எடுத்து வையுங்கள். அதை ஆளும் கட்சி எடுத்துக் கொள்ளட்டும். தயவு செய்து அமருங்கள், நான் எனது உரையை தொடங்குகிறேன் எனக்கூறி உரையாற்ற தொடங்கினார்.

    இதையேற்று தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சபையில் அமர்ந்து கவர்னர் உரையை கேட்டனர். சுமார் 15 நிமிடங்கள் அமர்ந்து கவர்னர் உரையை அமைதியாக கேட்ட தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கவர்னர் உரையில் குறிப்பிடத்தக்க அம்சங்கள் ஏதும் இல்லை. கடந்த பட்ஜெட் அறிவிப்புகளையே அரசு நிறைவேற்றவில்லை எனக்கூறினர்.

    தொடர்ந்து 9.45 மணியளவில் எதிர்க்கட்சி தலைவர் சிவா தலைமையில், கவர்னர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்வதாக கூறி சபையிலிருந்து தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளி நடப்பு செய்தனர்.

    • பாஜக ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர்.
    • ஆளும் கூட்டணி அரசுக்கு எதிராக குரல் கொடுக்க உள்ளதாகவும் அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் தெரிவித்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் பரபரப்பான அரசியல் சூழலில், பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கவர்னர் உரையுடன் தொடங்கியது.

    நாளை 1-ந் தேதி கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடக்கிறது.

    நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி, வருகிற 2-ந் தேதி காலை 9.30 மணிக்கு ரூ. 12,700 கோடிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

    சட்டசபை கூட்டத் தொடரில் வழக்கம் போல், மாநில அந்தஸ்து, மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு, ரேசன் கடை திறக்காதது குறித்து எதிர்கட்சிகள் புயலை கிளப்ப திட்டமிட்டுள்ளன.

    இதற்கிடையில், பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் செயல்பாடுகள் தான் காரணம் என பாஜக எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் பாஜக ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர்.

    மேலும், தங்களுக்கு அமைச்சர், வாரிய தலைவர் பதவி கேட்டும் போர்க்கொடி உயர்த்தினர்.

    டெல்லிக்கு சென்று மத்திய மந்திரி, பாஜக தலைவர்களை சந்தித்து பாஜக அமைச்சர்கள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர்.

    அதிருப்தி எம்.எல். ஏ.,க்களின் பிரச்சனை பாஜகவின் உட்கட்சி பிரச்சனையாக இருந்தாலும், என்.ஆர்.காங்.,-பாஜக கூட்டணிக்குள் விரிசலை ஏற்படுத்தியது.

    புதுச்சேரி வந்த பாஜக பொறுப்பாளர் சுரானா, மத்திய மந்திரியின் சமாதான பேச்சுகளை அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் ஏற்கவில்லை. மேலிட பொறுப்பாளரை சந்திக்காமலும் அதிருப்தி எம்எல்.ஏ.க்கள் புறக்கணித்தனர்.

    சட்டசபை கூட்ட தொடரில் எதிர்கட்சியினர் போல, ஆளும் கூட்டணி அரசுக்கு எதிராக குரல் கொடுக்க உள்ளதாகவும் அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் தெரிவித்தனர்.

    சமாதானப்படுத்த வந்த பாஜக பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து பேசிய போது, கூட்டணி அரசை கண்டித்து அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் எதிர்கட்சி வரிசையில் அமர விரும்பினால், அமர்ந்து கொள்ளட்டும் என தெரிவித்ததாக வெளியான தகவலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கிடையே சட்டமன்ற கூட்டத் தொடர் தொடங்கியதையொட்டி தலைமை செயலாளர் சரத் சவுகான் அரசு செயலாளர்கள், இயக்குனர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    சட்டமன்ற கூட்ட விவாதங்கள் நடக்கும்போது சம்பந்தப்பட்ட துறைகளின் செயலாளர்கள், இயக்குனர்கள் சட்டசபை வளாகத்தில் இருக்க வேண்டும். அமைச்சர்கள் பதில் அளிக்க தேவையான பதில்களை உடனுக்குடன் வழங்க வேண்டும். எதிர்மறையான விவாதங்களின்போது தேவையான ஆதாரங்களை முன்கூட்டியே தயார் செய்து அமைச்சர்களுக்கு வழங்கிட வேண்டும்.

    கேள்வி நேரங்களின் போது விவாதிக்கப்படும் எம்.எல்.ஏ.க்கள் கேள்விகளுக்கான பதில்களை 48 மணி நேரத்துக்கு முன்பாகவே வழங்க வேண்டும். கேள்விகளை தள்ளி வைக்க வேண்டும் என்றாலும் 48 மணி நேரத்துக்கு முன்பாகவே தெரிவிக்க வேண்டும்.

    தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட செயலாளர், அமைச்சரின் அனுமதியை பெற்று சட்டசபை செயலகத்துக்கு தெரிவிக்க வேண்டும். பூஜ்யநேரம் முடியும்வரை அரசு செயலாளர்கள், இயக்குனர்கள் அதிகாரிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் இருக்க வேண்டும். முக்கியமான விவரங்கள் தொடர்பாக துறை செயலாளர்கள் தலைமை செயலாளருக்கு விளக்கமான குறிப்பு அனுப்ப வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
    • தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி வீராம்பட்டினம் முகத்துவாரம் அருகே மாங்குரோவ் காட்டில் ஏற்பட்ட தீயை ஒரு மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.

    சுனாமி பேரழிவின் போது, கடற்கரையில் வளர்ந்திருந்த அடர்ந்த மாங்குரோவ் காடுகள் தடுப்புச் சுவராக நின்று சுனாமி அலைகளை தடுத்து, கரையோரம் வாழும் மக்களை காத்தன. இதனால், சுனாமிக்கு பிறகு தமிழகம், புதுச்சேரி கடற்கரையோரம் மாங்குரோவ் காடுகள் வளர்க்க அரசுகள் பரிந்துரை செய்தது.

    இதையடுத்து, தேங்காய்த் திட்டு துறைமுக பகுதியில் ஏற்கனவே இருந்த மாங்குரோவ் காடுகளுடன், புதிதாக பல இடங்களில் மாங்குரோவ் செடிகள் நட்டு வளர்க்கப்பட்டன. அவை சிலரது சுயநலத்தால் தற்போது அழிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், தேங்காய்த் திட்டு துறைமுகத்தின் தெற்கு பக்கம் வீராம்பட்டினம் கரையோரம் மாங்குரோவ் மரங்களுடன், கருவேல மரங்களும் சேர்ந்து வளர்ந்து இருந்தது.

    இதற்கிடையில், அரசு இடத்தில் இருந்த கருவேல மரங்கள் மற்றும் மாங்குரோவ் மரங்கள் பொக்லைன் எந்திரம் மூலம் யாரோ அழித்து ஒரே இடத்தில் குவித்து வைத்து இருந்தனர். நேற்று இரவு வெட்டி குவித்து வைக்கப்பட்டிருந்த மரங்கள் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. இதில் அருகில் இருந்த கருவவேல மரங்களும் மற்றும் மாங்குரோவ் மரங்களும் தீயில் கருகியது.

    புதுச்சேரி மற்றும் கோரிமேடு தீயணைப்பு நிலையத்தில் இருந்து விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    தேங்காய்த்திட்டு துறைமுக முகத்துவாரம் அருகே கரையோரம் பல ஏக்கரில் இருந்த மாங்குரோவ் காடுகள் ஏற்கனவே அழிந்து விட்டது.

    தற்போது, வீராம்பட்டினம் முகத்துவார பகுதியில் திடீரென மரங்கள் தீப்பற்றி எரிந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மரங்கள் அல்லது காய்ந்த சருகுகள் தானாக எரிய வாய்ப்பு இல்லை. எனவே, இதுகுறித்து விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும் என்று பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • மத்திய அரசு பா.ஜ.க. ஆளும் மாநில முதல்- அமைச்சர்கள் மற்றும் கூட்டணி முதல்- அமைச்சர்கள் நிதி ஆயோக் கூட்டத்தில் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என விரும்பியது.
    • முதல்-அமைச்சர் ரங்கசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்ல டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டது.

    புதுச்சேரி:

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் இன்று நடந்தது.

    கூட்டத்தில் மாநில முதல்-அமைச்சர்கள் தவறாது கலந்து கொள்ளும்படி நிதி ஆயோக் அழைப்பு விடுத்திருந்தது. புதுச்சேரியை பொருத்தவரை கடந்த காலங்களில் முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு பதிலாக டெல்லி கூட்டங்களில் அமைச்சர் லட்சுமி நாராயணன் பங்கேற்று வந்தார்.

    ஆனால் இந்த முறை புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி டெல்லி செல்ல இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் மத்திய பட்ஜெட்டில் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களை மத்திய அரசு புறக்கணித்ததாக கூறி இந்தியா கூட்டணி மாநில முதல்-அமைச்சர்கள் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தனர்.

    இதனால் மத்திய அரசு பா.ஜ.க. ஆளும் மாநில முதல்- அமைச்சர்கள் மற்றும் கூட்டணி முதல்- அமைச்சர்கள் நிதி ஆயோக் கூட்டத்தில் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என விரும்பியது.

    இந்த நிலையில் புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்ல டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டது.

    மேலும் நிதி ஆயோக் கூட்டத்தில் பேச உரையும் தயாரிக்கப்பட்டிருந்தது. இதனால் நேற்று மாலை முதல்- அமைச்சர் ரங்கசாமி சென்னை சென்று அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் முதல்- அமைச்சர் ரங்கசாமி டெல்லி செல்லாமல் நிதி ஆயோக் கூட்டத்தை திடீரென புறக்கணித்துள்ளார்.

    இது பா.ஜ.க.வை அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. ஏற்கனவே புதுச்சேரியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் பா.ஜ.க. அமைச்சர்களுக்கு எதிராக பா.ஜ.க மற்றும் பா.ஜ.க. வை ஆதரிக்கும் 3 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் போர்கொடி தூக்கி உள்ளனர்.

    முதல்- அமைச்சர் ரங்கசாமி அரசுக்கு தரும் ஆதரவை விலக்கி வெளியில் இருந்து ஆதரவு அளிக்க வேண்டும் என அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தி வருகின்றனர். பா.ஜ.க. ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ. அங்காளன் ரங்கசாமி அரசில் அனைத்து துறைகளிலும் ஊழல் பெருகிவிட்டது என்றும் புரோக்கர்கள் மூலம் அரசு செயல்படுவதாகவும் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியிருந்தார்.

    இது முதல்- அமைச்சர் ரங்கசாமி மற்றும் என்.ஆர்.காங்கிரசாருக்கு பா.ஜ.க. மீது அதிருப்தியை ஏற்படுத்தியது. மெஜாரிட்டிக்கு தேவையான எண்ணிக்கை எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு இருக்கும் போது எதற்காக சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை என்று என்.ஆர்.காங்கிரசார் கேள்வி எழுப்பினர்.

    அதோடு முதல்-அமைச்சர் ரங்கசாமி தரப்பில் இருந்து சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை வாபஸ் பெறுமாறு பா.ஜ.க. தலைமைக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை பா.ஜ.க. விலக்கி கொள்ளவில்லை.

    இதனாலும், பட்ஜெட் கூட்ட தொடர் கூட உள்ள நிலையில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை பா.ஜ.க. தலைமை சரியாக கையாண்டு சமரசம் செய்யாததும் முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனாலேயே நிதி ஆயோக் கூட்டத்தை ரங்கசாமி புறக்கணித்துள்ளதாக கூறப்படுகிறது.

    • பாலமுருகன் வீட்டிற்கு தபாலில் பிரான்ஸ் குடியுரிமை சான்றிதழ் வந்தது.
    • போலீசார் வழக்கு பதிந்து மிலன் அருள்மணியை தேடி வந்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 26) இவர் டிப்ளமோ கேட்ரிங் படித்து விட்டு,புதுச்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் வேலை செய்து வருகிறார்.

    இவர் வேலைபார்க்கும் ஓட்டல் மூலம் அறிமுகமான புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த மிலன் அருள்மணி (46) என்பவர் பாலமுருகனுக்கு பிரான்ஸ் நாட்டில் குடியுரிமை பெற்றுதருவதாக கூறி அவரிடம் இருந்து முன்பணமாக ரூ.10 ஆயிரம் பெற்றார்.

    பின்னர் படிப்படியாக பள்ளி ஒரிஜினல் சான்றிதழ், ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்ளுடன் மொத்தம் ரூ.1¼ லட்சம் பணத்தை கடந்த பிப்ரவரி மாதம் மிலன் அருள்மணி வாங்கினார்.

    அதனை அடுத்து பாலமுருகன் வீட்டிற்கு தபாலில் பிரான்ஸ் குடியுரிமை சான்றிதழ் வந்தது. அந்த சான்றிதழை பாலமுருகன் எடுத்துக் கொண்டு சென்னையில் உள்ள வெளியுறவு துறை அமைச்சகத்தின் மூலம் சரிபார்த்தார். அப்போது அது போலி சான்றிதழ் என தெரியவந்தது. மிலன் அருள்மணி பிரான்ஸ் குடியுரிமை சான்றிதழை போலியாக தயாரித்து தபாலில் பாலமுருகனுக்கு அனுப்பியது தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சிடைந்த பாலமுருகன் அரியாங்குப்பம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து மிலன் அருள்மணியை தேடி வந்தனர்.

    இந்நிலையில் தலைமறைவாக இருந்த மிலன் அருள்மணியை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

    • ஆளும் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தலாம்.
    • பாஜக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சந்தித்து சமரசம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பாராளுமன்ற தேர்தல் தோல்வி ஆளும் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக இடையே மோதலை ஏற்படுத்தியுள்ளது.

    தேர்தல் தோல்விக்கு முதலமைச்சர், பாஜக அமைச்சர்களின் அணுகுமுறை, செயல்பாடுகள்தான் காரணம் என பாஜக எம்.எல்.ஏ.க்களில் ஒரு பிரிவினர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

    அவர்கள் ஏற்கனவே டெல்லியில் மத்திய மந்திரி மெக்வால், பாஜக தலைவர் நட்டா, அமைப்பு செயலாளர் சந்தோஷ் ஆகியோரை சந்தித்து, முதலமைச்சர் ரங்கசாமி, பாஜக அமைச்சர்கள் மீது புகார் தெரிவித்தனர்.

    இதையடுத்து அவர்களை சமரசப்படுத்த பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா புதுவைக்கு வந்தார். அவருடைய சமாதான முயற்சியும் கைகூடவில்லை.

    இதனிடையே புதுவை மாநில பா.ஜனதா செயற்குழுவில் பங்கேற்க வந்த மத்திய மந்திரி கிஷன்ரெட்டியிடமும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் புகார் தெரிவித்தனர்.


    அதோடு, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்திப்பதற்காக டெல்லிக்கு சென்றனர். 3 நாட்களாக டெல்லியில் முகாமிட்டும், பாராளுமன்ற கூட்டத்தொடர் நடப்பதால் அமித்ஷாவை அவர்களால் சந்திக்க முடியவில்லை. இதனால் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரிக்கு திரும்பிவிட்டனர்.

    இந்த நிலையில் புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 31-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்குகிறது.

    தொடர்ந்து கூட்டத்தொடர் 15 நாட்கள் வரை நடைபெறும் என தெரிகிறது. எம்.எல்.ஏ.க்கள் சமரசம் அடையாத நிலையில் பட்ஜெட் கூட்டத் தொடரில் அதிருப்தியை வெளிப்படுத்தலாம் என கூறப்படுகிறது.

    இது ஆளும் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தலாம். இதனால் எம்.எல்.ஏ.க்களை சமரசம் செய்ய இறுதிகட்ட முயற்சியை பாஜக தலைமை எடுத்துள்ளது. இதற்காக நாளை (சனிக்கிழமை) பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா புதுவைக்கு வருகிறார். அவர் பாஜக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சந்தித்து சமரசம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

    ×