search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ரூ.15 லட்சம் நிவாரண நிதி- திருமாவளவன் தகவல்
    X

    நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ரூ.15 லட்சம் நிவாரண நிதி- திருமாவளவன் தகவல்

    • மத்திய அரசு இதனை பேரிடராக அறிவிக்க வேண்டும்.
    • உதயநிதி துணை முதல்வராக வேண்டும் என்பது அவர்களின் உட்கட்சி விவகாரம்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தின் போது திருமானூர் அருகே இலந்தைக் கூடம் கிராமத்தில் இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்ததாகவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் திருமாவளவன் எம்.பி.மீது வெங்கனூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இந்த வழக்கு விசாரணை அரியலூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணைக்காக திருமாவளவன் எம்.பி. நேரில் ஆஜரானார்.

    பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு நூற்றுக்கணக்காணவர்களை பலி வாங்கி இருக்கிறது. இதுவரையில் 377 உடல்கள் மீட்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்து உள்ளது. நூற்றுக்கனக்கான குடும்பங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன. அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது.

    மத்திய அரசு இதனை பேரிடராக அறிவிக்க வேண்டும். மறுவாழ்வுக்காகவும், மறு கட்டுமானத்திற்காகவும் போதிய இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் .

    வரும் 9-ந் தேதி கேரள மாநில முதல்-மந்திரியை சந்தித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ரூ.15 லட்சம் நிவாரண நிதியை வழங்க இருக்கிறோம்.

    தமிழக அரசு அரசு பணியாளர்களின் பணி ஓய்வுக்கான வயதை 60 லிருந்து 62 ஆக உயர்த்த போகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த பணி ஓய்வு பெறும் வயதை நீடிப்பதால் புதிய இளைய தலைமுறைக்கான வேலை வாய்ப்பில் சிக்கல் ஏற்படும் என்று கருத்து உள்ளது.

    ஆம்ஸ்ட்ராங் குடும்பத்துக்கு கொலை மிரட்டல் வந்திருப்பது உடனடியாக தமிழக அரசும் அவர்கள் தங்கி இருக்கிற இல்லத்துக்கு பாதுகாப்பு அளித்திருப்பதை வரவேற்கிறோம்.

    சாதிவாரி கணக்கெடுப்பு தவிர்க்க முடியாததாக உள்ளது. எனவே சாதிவாரி கணக்கெடுப்பை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் ஆதரிக்கிறது.

    அண்மையில் மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் மேகாலவை சந்தித்து, அரியலூரில் நீண்ட கால கோரிக்கையான ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டிய நிதியை உடனே ஒதுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பிலும், ம.தி.மு.க.வின் சார்பிலும் கோரிக்கை வைத்திருக்கிறோம் .

    தமிழ்நாடு அரசு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடகாவில் மேகதாதுவில் அணையை கட்ட முடியாது அதற்கு வாய்ப்பில்லை. உதயநிதி துணை முதல்வராக வேண்டும் என்பது அவர்களின் உட்கட்சி விவகாரம். அதில் நான் தலையிட விரும்பவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×