search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    மு.க.ஸ்டாலின் ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும் 1,355 கோவில்களில் கும்பாபிஷேகம்
    X

    மு.க.ஸ்டாலின் ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும் 1,355 கோவில்களில் கும்பாபிஷேகம்

    • 143 கோவில்களின் குளங்களைச் சீரமைப்பதற்கு ரூ.84.16 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.
    • அன்னதானத் திட்டம் இதுவரை 756 கோவில்களில் நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற 7.5.2021 முதல் 31.1.2024 வரை மூன்றாண்டுகளில் 1,355 கோவில்களில் திருப்பணிகள் நிறைவுற்றுத் கும்பாபிஷேக விழாக்கள் நடைபெற்றுள்ளன.

    8,436 கோவில்களில் 18,841 திருப்பணிகள் ரூ.3,776 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டு 5,775 திருப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

    2021-2022-ம் நிதியாண்டில் 1,250 கோவில்களுக்குத் திருப்பணி நிதி தலா ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டு ரூ.25 கோடி வழங்கப்பட்டது. கிராமப்புற மற்றும் ஆதி திராவிடர் கோவில் திருப்பணிக்கான நிதி உதவி ரூ.2 லட்சம் வீதம் மேலும், 1250 கோவில்களுக்கு அனுமதிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.

    143 கோவில்களின் குளங்களைச் சீரமைப்பதற்கு ரூ.84.16 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. 3 கோவில்களில் புதிய திருக்குளங்கள் ரூ.2.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படுகின்றன.

    சமயபுரம், திருவெண்ணெய் நல்லூர், திருப்பாற்கடல், தாராபுரம், அரியலூர், சென்னை கீழ்பாக்கம் ஆகிய இடங்களில் 6 கோவில்களில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் புதிய ராஜகோபுரங்கள் கட்டப்பட்டு கும்பிஷேகம் விழாக்கள் நடைபெற்றுள்ளன.

    15 கோவில்களில் ராஜகோபுரங்கள் ரூ.25.98 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ளன. பட்டுக்கோட்டை, வரகுணநாத சுவாமி கோவில், 3 நிலை ராஜகோபுரம் இறையன்பரின் நிதியுதவி ரூ.50 லட்சத்தில் கட்டப்படுகிறது.

    அன்னதானத் திட்டம் இதுவரை 756 கோவில்களில் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் நாளொன்றுக்கு 82,000 பேர்கள் பயன்பெற்று வருகின்றனர். இவ்வாண்டு மேலும் 7 கோவில்களில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

    கடந்த மூன்றாண்டுகளில் அறநிலையங்களுக்குச் சொந்தமான நிலம், கட்டிடம், மனை ஆகியவற்றில் ஏற்பட்ட ஆக்கிரமிப்பில் இருந்து ரூ.5577.35 கோடி மதிப்பிலான 6140.59 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு உள்ளது.

    கடந்த மூன்றாண்டுகளில் 1,59,507 ஏக்கர் நிலங்கள் நவீன ரோவர் கருவிகள் மூலம் அளவீடு செய்யப்பட்டு 64,522 கற்கள் நடப்பட்டுள்ளன. நில அளவைப் பணியில் 172 உரிமம் பெற்ற நில அளவையர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 4,189.88 ஏக்கர் நிலம் மீண்டும் கோவில் பெயரில் பட்டா பெறப்பட்டுள்ளது.

    ரூ.257.28 கோடியில் மொத்தம் 73 திருமண மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன. பக்தர்களின் நலனுக்காக 17 தங்கும் விடுதிகள் கட்டும் பணிகள் ரூ.70.50 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன.

    கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கான 48 குடியிருப்புகள் ரூ. 83.67 கோடி மதிப்பீட்டில் கட்டப்படுகின்றன. 6 கோவில்களுக்குச் சொந்தமான பல மாற்று பொன் இனங்கள் உருக்கப்பட்டு, 344.334 கி.கி தங்கக் கட்டிகளாக மாற்றி, ரூ.191.65 கோடி மதிப்பீட்டில் வங்கியில் முதலீடு செய்யப்பட்டு ஆண்டு ஒன்றுக்கு வட்டி வருவாய் ரூ.4.31 கோடி வரப்பெறுகிறது. மேலும், 11 கோவில்களுக்குச் சொந்தமான பல மாற்று பொன் இனங்கள் பிரித்தெடுக்கப்பட்டுத் தங்க கட்டிகளாக மாற்றப்பட்டு வருகின்றன.

    ஒரு கால பூஜை திட்டத்தில் கோவில் ஒன்றுக்கு தலா ரூ.2 லட்சம் வீதம் 2,000 கோவில்களுக்கு அரசு மானியம் ரூ.40 கோடி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் தற்போது 17,000 கோவில்கள் பயனடைந்து வருகின்றன.

    ஒரு கோவிலுக்கு ஓர் அர்ச்சகர் வீதம் பதிவு செய்து, மாத ஊக்கத் தொகை ரூ.1.000 வீதம் வழங்கப்பட்டு ஜனவரி 2024 வரை 15,753 அர்ச்சகர்கள் பயனடைந்துள்ளனர். அர்ச்சகர்களின் வாரிசுதாரர்களுக்கு உயர்கல்வி உதவித் தொகையாக தலா ரூ.10,000 வீதம் நடப்பாண்டில் 400 மாணவர்களுக்குக் கல்வித் தொகை வழங்கப்பட்டுள்ளது. பழனி கோவிலில் கம்பிவட ஊர்தி இயக்கப்பட்டு வருகிறது.

    80 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் பழனி மற்றும் இடும்பன் மலை இடையே கம்பிவட ஊர்தி, அனுவாவி, திருநீர்மலை, திருக்கழுக்குன்றம் ஆகிய கோவில்களில் கம்பிவட ஊர்திகள் அமைத்திட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு வருகிறது. சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் ரூ.3.55 கோடி மதிப்பீட்டில் மின்தூக்கி அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

    5 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து தினக்கூலி, தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலிகமாகப் பணிபுரிந்த 1,278 பணியாளர்கள் பணிவரன் முறை செய்யப்பட்டுள்ளனர். பொருளாதாரத்தில் பின்தங்கிய இணைகளுக்கு சீர்வரிசைகளுடன் திருமணங்கள் நடத்தி வைக்கும் திட்டத்தின்கீழ், ரூ.50,000 மதிப்புள்ள சீர்வரிசைகளுடன் 1,100 இணைகளுக்கும், 128 மாற்றுத் திறனாளிகளுக்கும் திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டுள்ளன.

    500 பக்தர்கள் ராமேசுவரம், ராமநாத சுவாமி கோவிலில் இருந்து காசி, விசுவநாத சுவாமி கோவிலுக்கு ஆன்மிகப் பயணமாக அரசு நிதி ரூ.125 லட்சம் செலவிலும், 1,000 பக்தர்கள் அறுபடை வீடுகளுக்கு ஆன்மிகப் பயணமாக அரசு நிதி ரூ.1.50 கோடி செலவிலும் அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர். 2022-2023-ம் ஆண்டில் முக்திநாத் ஆன்மிக பயணம் சென்று வந்தவர்களுக்கு தலா ரூ.20,000 வீதம் பயண செலவாக வழங்கப்படுகிறது.

    கோவில்கள் மூலம் நடத்தப்படும் பயிற்சிப்பள்ளிகளில் தற்போது 212 மாணவர்கள் முழுநேரமாகவும், 80 மாணவர்கள் பகுதிநேரமாகவும் பயின்று வருகின்றனர்.

    11 பெண் ஓதுவார்கள் உட்பட 42 ஓதுவார்களுக்குப் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

    இத்தகைய பல்வேறு பணிகளில் தமிழ்நாட்டின் அறநிலையத்துறை பணிகள் மிகச் சிறப்பாக நடைபெறுவதால் திராவிட மாடல் அரசையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் பொது மக்கள் பாராட்டுகின்றனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×