search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    தீபாவளி பண்டிகை- தலைவர்கள் வாழ்த்து
    X

    எடப்பாடி பழனிசாமி - ராமதாஸ் - கேஎஸ் அழகிரி

    தீபாவளி பண்டிகை- தலைவர்கள் வாழ்த்து

    • நட்பையும், நல்லிணக்கத்தையும் வளர்க்கும் தீப ஒளித் திருநாள் இனிவரும் ஆண்டுகள் அனைத்தும் மகிழ்ச்சியையும், வளர்ச்சியையும் மட்டுமே வழங்க வேண்டும்.
    • தீபாவளி பண்டிகையானது உள்ளங்களை உறவு கொள்ளும் வகையில் எல்லா நாடும் எங்கள் நாடு, எல்லா மக்களும் எங்கள் சொந்தம் என்று மனங்களை பகிர்ந்துகொள்ளும் அன்பு திருவிழாவாக விளங்குகிறது.

    சென்னை:

    தீபாவளி பண்டிகையையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி:-

    மக்களை பெருந்துன்பத்திற்கு ஆளாக்கிய நரகாசுன் என்னும் அரக்கனை மகாலட்சுமி துணையுடன் திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்த நாள் இருள் விலகி ஒளி பிறக்கும் தினமாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் சுடர்விட்டு பிரகாசிக்கும் தினமாக மக்களால் கருதப்படுகிறது.

    மக்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று இன்பமுடன் வாழ்ந்திட தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்:-

    இருள் விலகி ஒளி பிறக்கும் தினமாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் சுடர் விட்டு பிரகாசிக்கும் தினமாகவும் கருதப்படும். இந்நன்னாளில் தனிமனிதனின் வாழ்வில் மட்டுமல்லாமல், சமுதாயத்தின் அங்கமாகிய மக்கள் அனைவரின் உள்ளங்களிலும் தீப ஒளிகள் ஏற்றப்பட வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தினை தெரிவித்துக் கொள்கிறேன்.

    அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:-

    தீபாவளித் திருநாள் ஒளி காட்டும் வகையில் அமைந்து, இந்திய மக்கள் அனைவருடைய வாழ்விலும் ஏற்றம் உண்டாக வேண்டும். நாட்டில் அதர்மம் அழிந்து, தர்மம் நிலைக்க இந்த தீபாவளித் திருநாள் பாதை அமைத்துக் கொடுக்கட்டும். ஆனந்தமும் அமைதியும் பெருக இந்த தீபாவளிக் கொண்டாட்டம் அடித்தளமாக அமைய வேண்டும்.

    வி.கே.சசிகலா:-

    இந்த தீப திருநாளில், அனைவரது இல்லங்களிலும், உள்ளங்களிலும் துன்பம் விலகி, இன்ப ஒளி வீசட்டும். வாழ்வில் வளமும், நலமும் பெருகட்டும் என்று எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டி அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

    பா.ம.க. கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-

    மக்களுக்கு மகிழ்ச்சி நிலைக்க வேண்டும் என்றால் இல்லாமை கூடாது. இல்லாமையை விரட்டுவதற்கு கல்வியும், வேலைவாய்ப்பும் கட்டாயமாகும். கல்வி, வேலைவாய்ப்பு மட்டுமின்றி சமூக நீதி, அமைதி, வளம், வளர்ச்சி, ஒற்றுமை, நல்லிணக்கம், சகோதரத்துவம், பன்முகத்தன்மை உள்ளிட்டவை பெருகவும், மக்களின் வாழ்வில் இல்லாமை இருள் விலகி இன்ப ஒளி நிறையவும் நெஞ்சம் நிறைந்து வாழ்த்துகிறேன்.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்:-

    நட்பையும், நல்லிணக்கத்தையும் வளர்க்கும் தீப ஒளித் திருநாள் இனிவரும் ஆண்டுகள் அனைத்தும் மகிழ்ச்சியையும், வளர்ச்சியையும் மட்டுமே வழங்க வேண்டும். அதற்கு தமிழகத்தில் உழவும், தொழிலும் சிறக்க வேண்டும். மக்களிடையே அன்பு, நட்பு, நல்லிணக்கம், சகோதரத்துவம் ஆகியவை மலர வேண்டும்.

    அனைத்து தரப்பு மக்களாலும் ஒளித் திருநாளாய் நாடு முழுவதும் சிறப்புடன் கொண்டாடப்படும் தீபாவளித் திருநாளையொட்டி அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அறியாமை, வறுமை, தீமை மற்றும் வன்முறை இருள் அகன்று அனைவரின் வாழ்விலும் வளமும், நலமும் பெருகிட வாழ்த்துகிறேன்.

    சாதி, மத வேறுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாய் கொண்டாடும் தீபாவளியில் தீப ஒளி ஏற்றுவதால் புதுப்பொலிவுடன், நல்வாழ்க்கை வாழ இறைவன் துணை நிற்க வேண்டி அனைவருக்கும் தீபாவளி பண்டிகை திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீட ஆன்மீக குரு பங்காரு அடிகளார்:-

    தீபாவளி என்பது உற்சாகமான பண்டிகை. தான் மட்டும் கொண்டாடினால் போதாது. நல்ல உள்ளம் கொண்டு இருப்பவன் இல்லாதவனுக்கும், உற்றார், உறவினருக்கும், பொதுமக்களுக்கும் கொடுத்து நீ பெரியவன் நான் பெரியவன் என்று வித்தியாசம் பாராமல் சகோதரத்துவத்துடன் கொண்டாடும்போது சந்தோசம் ஏற்படுகிறது. அங்கு தர்மம் நடக்கிறது. ஆடு, மாடு, கோழி, நாய் போன்ற பிராணிகளுக்கும் உணவு வழங்கி அவற்றையும் சந்தோசப்படுத்திக் கொண்டாட வேண்டும்.

    சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார்:-

    உறவுகளோடும், நட்புகளோடும் தீபாவளித் திருநாளை அனைவரும் கொண்டாடி மகிழ்வோம். இந்த மகிழ்ச்சி, மனிதநேயம் காப்பதாகவும், நமக்குள்ளே பிரிவினைகளும், பேதங்களுமற்ற சமத்துவ சமுதாயம் மலரச் செய்வதாகவும் அமையட்டும் அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    என்.ஆர்.தனபாலன்

    பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர். தனபாலன்:-

    சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு அரசு குறிப்பிட்ட நேரங்களில் பட்டாசுகளை வெடித்து புகை மாசு படாமல் பாதுகாத்து, ஒருவருக்கொருவர் அன்பையும், வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டு அமைதியாகவும், ஒற்றுமையாகவும், பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் கொண்டாடி மகிழ்ந்திட அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன்:-

    அறியாமை எனும் இருளை அகறி அறிவொளி எனும் தீபத்தை இத்திருநாள் ஒளிரச்செய்யட்டும். இந்த தீபாவளி, நம் அனைவரின் வாழ்வில் அமைதியையும், ஒற்றுமையையும், வளமையையும், மகிழ்ச்சியையும் அளிக்கட்டும். அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

    தொழில் அதிபர் வி.ஜி. சந்தோசம்:-

    தீபாவளி பண்டிகையானது உள்ளங்களை உறவு கொள்ளும் வகையில் எல்லா நாடும் எங்கள் நாடு, எல்லா மக்களும் எங்கள் சொந்தம் என்று மனங்களை பகிர்ந்துகொள்ளும் அன்பு திருவிழாவாக விளங்குகிறது. இந்த இன்ப திருநாளில் எல்லோருடைய உள்ளங்களிலும் இல்லங்களிலும் தீபங்கள் ஒளி வீசட்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

    மேலும் தேசியவாத காங்கிரஸ் கட்சி மாநில துணைத்தலைவர் கோல்டன் அபு பக்கர், கோகுல மக்கள் எம்.வி.சேகர் ஆகியோரும் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×