search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அ.தி.மு.க.வை முடக்க நினைக்கும் தி.மு.க. அரசின் நாட்கள் எண்ணப்படுகின்றன- எடப்பாடி பழனிசாமி
    X

    அ.தி.மு.க.வை முடக்க நினைக்கும் தி.மு.க. அரசின் நாட்கள் எண்ணப்படுகின்றன- எடப்பாடி பழனிசாமி

    • தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் 2021-ம் ஆண்டு பெய்த பருவ மழைக்கே சென்னை வெள்ளத்தில் மிதந்தது.
    • சர்வாதிகார ஆட்சி நடத்தியதற்காக மக்களிடம் பதில் சொல்லும் நாட்கள் வெகு தூரத்தில் இல்லை என்று எச்சரிக்கிறேன்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி, சென்னை மாநகராட்சி பொறியாளர்கள் உள்ளிட்ட பலர் மீது, தனியார் அமைப்பு பல ஆண்டுகளுக்கு முன்பு அனுப்பிய ஆதாரமற்ற புகாரின் அடிப்படையில் தி.மு.க. அரசு, தனது லஞ்ச ஒழிப்புத் துறை மூலம் வழக்குப்பதிவு செய்து உள்ளது.

    தி.மு.க. அரசின் அமைச்சர்கள் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு ஊழல் வழக்குகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த நிலையில், 2021 ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை அடித்த அந்தர் பல்டியைப் பார்த்த சென்னை உயர்நீதிமன்றமே, தன்னிச்சையாக இவ்வழக்குகளை மீண்டும் விசாரித்து வருவதில் இருந்தே, முதலமைச்சரின் ஏவல் துறை எப்படி செயல்பட்டு வருகிறது என்பதைத் தமிழக மக்கள் அனைவரும் நன்கு அறிவார்கள்.

    எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது, சென்னை மாநகராட்சியின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

    மழைநீர் சேகரிப்பின் காரணமாக சென்னையின் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததை சென்னை மாநகர மக்கள் நன்கு அறிவார்கள். அனைத்து மழைநீர் வடிகால் கால்வாய்களும் பருவ மழைக்கு முன்பே தூர் வாரப்பட்டதன் காரணமாகவும், சென்னை சாலைகளில் மழைநீர் வடிகால் கட்டமைப்பு அமைக்கப்பட்டதன் காரணமாகவும், கன மழையின்போது சென்னை சாலைகளில் மழைநீர் தேங்குவது பெரிய அளவு குறைந்தது.

    தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் 2021-ம் ஆண்டு பெய்த பருவ மழைக்கே சென்னை வெள்ளத்தில் மிதந்தது. விரைவில் பருவ மழையை சென்னை மாநகரம் எதிர் கொள்ள உள்ளது. கடந்த 40 மாத கால தி.மு.க. ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் மழைநீர் வடிகால் பணிகள், தூர் வாருதல் பணிகள் மற்றும் சாலைகளை சீரமைத்தல் பணிகளுக்காக பல ஆயிரம் கோடி ரூபாய் செலவிட்டதாகக் கூறும் தங்களது வேஷம் கலைந்துவிடுமோ என்றும், தி.மு.க. ஆட்சியின் மீது கூறப்படும் 4 ஆயிரம் கோடி ரூபாய் பற்றிய புகார்கள் மீண்டும் தமிழக மக்கள் மத்தியில் பேசப்படுமோ! தங்களின் ஊழல்கள் அம்பலப்பட்டு விடுமோ! என்ற பயம் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஏற்பட்டுள்ளது.

    "மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, பத்திரப் பதிவு கட்டண உயர்வு உள்ளிட்ட அரசின் அனைத்துக் கட்டணங்களும் பலமடங்கு உயர்வு, உணவுப் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள் கடுமையான விலை உயர்வு, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, கொலை, கொள்ளை, கள்ளச்சாராயம், தமிழகத்தை கஞ்சா மற்றும் போதைப் பொருள் கேந்திரமாக மாற்றிய பெருமை" என்று தி.மு.க. அரசின் மீது கோபத்தின் உச்சியில் இருக்கும் தமிழக மக்களின் கவனத்தை திசை திருப்ப, தனது கண் அசைவுக்கு தாளம் போடும் லஞ்ச ஒழிப்புத் துறையை ஏவி விட்டிருக்கிறார் தி.மு.க. அரசின் முதலமைச்சர் ஸ்டாலின். இது போன்ற தகிடுதத்தங்களால் அனைத்திந்திய அண்ணா தி.மு.க.வை முடக்கிவிடலாம் என்று ஸ்டாலின் மனப்பால் குடிக்கிறார்.

    தி.மு.க. ஆட்சியின் ஆயுட் காலம் 19 அமாவாசைகள் தான். நாட்கள் எண்ணப்படுகின்றன. சர்வாதிகார ஆட்சி நடத்தியதற்காக மக்களிடம் பதில் சொல்லும் நாட்கள் வெகு தூரத்தில் இல்லை என்று எச்சரிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×