search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கொட்டி தீர்த்த கனமழை: தரைப்பாலத்தை காட்டாற்று வெள்ளம் மூழ்கடித்ததால் போக்குவரத்து துண்டிப்பு
    X

    கொட்டி தீர்த்த கனமழை: தரைப்பாலத்தை காட்டாற்று வெள்ளம் மூழ்கடித்ததால் போக்குவரத்து துண்டிப்பு

    • பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
    • மாவனத்தம் அருகே உள்ள சாலையோரத்தில் உள்ள மரம் ஒன்று விழுந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வாரமாக சத்தியமங்கலம், தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

    இதனால் தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. மேலும் காட்டாற்று வெள்ளமும் ஏற்பட்டது.

    இந்நிலையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை விடிய விடிய தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த இடியுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    தாளவாடி, தலமலை, கொடிபுரம், விஜயலெட்டி, காளிதிம்பம், ராமர் அணை, மாவனத்தம் போன்ற பகுதிகளில் இரவு முழுவதும் விடிய விடிய இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த கனமழையால் மாவனத்தம் அருகே உள்ள தரைப்பாலம் காட்டாற்று வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

    இதனால் இந்த பகுதியை சேர்ந்த மக்கள் சத்தியமங்கலம், தாளவாடிக்கு செல்ல முடியாமல் அவதி அடைந்தனர். இதேபோல் மாவனத்தம் அருகே உள்ள சாலையோரத்தில் உள்ள மரம் ஒன்று விழுந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பின்னர் அப்பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து சாலையில் விழுந்த மரத்தை அப்புறப்படுத்தினர். இதனையடுத்து இன்று காலை மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.

    இதேபோல் தரைப்பாலத்தை மூழ்கடித்த காட்டாற்று வெள்ளம் நீர் வடிய தொடங்கியதால் இன்று காலை மீண்டும் அந்த பகுதியில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி ரம்மியமாக காட்சியளிக்கிறது.

    Next Story
    ×