search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    ஒரு நாள் கலெக்டராக பணியாற்றிய மாணவி
    X

    ஒரு நாள் கலெக்டராக பணியாற்றிய மாணவி

    • உங்கள் கல்வி ஒன்று தான் முக்கியம் என்ற கலெக்டர் மாணவியிடம் எதிர்கால திட்டங்கள் குறித்தும் கேட்டார்.
    • மாவட்ட கலெக்டராக பணியாற்ற வாய்ப்பு தரப்படும் என மாவட்ட கலெக்டர் மணிகண்டன் அறிவிப்பு வெளியிட்டார்.

    காரைக்கால்:

    காரைக்கால் மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் மாவட்ட நிர்வாக செயல்பாடுகள் மற்றும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணுதல் மற்றும் வளர்ச்சி திட்ட செயல்பாடுகளை நேரடியாக அறிந்து கொள்ளும் வகையிலும், எதிர்காலத்தில் மாணவர்கள் சிறந்த குடிமக்களாக விளங்கவும், பள்ளி மாணவர்களுக்கு ஒருநாள் மாவட்ட கலெக்டராக பணியாற்ற வாய்ப்பு தரப்படும் என மாவட்ட கலெக்டர் மணிகண்டன் அறிவிப்பு வெளியிட்டார்.

    இதனை தொடர்ந்து, காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 3 மாணவ, மாணவிகள் இதுவரை ஒருநாள் கலெக்டராகி, கலெக்டர் மணிகண்டனுடன் பணியாற்றியுள்ளனர். அந்த வரிசையில், காரைக்காலை அடுத்த நிரவி ஹுசைனியா அரசு உயர் நிலை பள்ளியில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவி தஸ்னீம் அர்ஷியா என்ற மாணவி, காரைக்கால் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளால், பேச்சாற்றல், அறிவு திறன் போன்ற செயல்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    அம்மாணவி மாவட்ட கலெக்டர் மணிகண்டனுடன் இணைந்து, பல்வேறு பணிகளில் ஈடுபட்டார். மேலும், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் மற்றும் பல்வேறு பணிகளில் மாணவி மாவட்ட கலெக்டர் மணிகண்டனுடன் இணைந்து செயல்பட்டார். மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் மணிகண்டன், அனைத்து அதிகாரிகளிடமும் இம்மாணவியை அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து, கலெக்டர் மணிகண்டன் கூறுகையில், ஒவ்வொரு மாணவர்களும் தங்கள் தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு உங்கள் கல்வி ஒன்று தான் முக்கியம் என்ற கலெக்டர் மாணவியிடம் எதிர்கால திட்டங்கள் குறித்தும் கேட்டார்.

    அதற்கு மாணவி தஸ்னீம் அர்ஷியா பேசுகையில், ஒரு கலெக்டருக்கான அதிகாரம், செயல்பாடு இவை அனைத்தையும், இன்றைய நாள் கண்கூடாக கண்டேன். எதிர்கலத்தில் நானும் ஐ.ஏ.எஸ். மாவட்ட கலெக்டராகி மக்களுக்கு சிறப்பான பணியை செய்வேன். என உறுதி அளித்தார். இந்நிகழ்வில் மேல்நிலைக் கல்வி துணை இயக்குனர் ராஜேஸ்வரி, முதன்மை கல்வி அதிகாரி விஜயமோகனா, மாணவியின் பெற்றோர் முகமது கியாசுதீன், நூருல் ஹையாத், பள்ளியின் முதல்வர் மற்றும் பெற்றோர்கள் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×