search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    தலையில் கல்லை போட்டு வாலிபர் கொடூர கொலை- 5 பேர் கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
    X

    கொலையுண்ட சதக் அப்துல்லா.

    தலையில் கல்லை போட்டு வாலிபர் கொடூர கொலை- 5 பேர் கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு

    • சதக் அப்துல்லாவுக்கும், அவருடன் மது குடித்து கொண்டிருந்த மற்றவர்களுக்கும் இடையே குடி போதையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
    • உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மதுரை:

    மதுரை பாஸ்கரதாஸ் நகரை சேர்ந்தவர் முகமது அலி. இவரது மகன் சதக் அப்துல்லா (வயது29). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த பகுதியில் ரவுடியாக வலம் வந்துள்ளார். திருட்டு, அடிதடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்ட அவர், பலமுறை ஜெயிலுக்கும் சென்று வந்துள்ளார்.

    தற்போது குற்ற சம்பவங் களில் ஈடுபடாமல் இருந்து வந்த சதக் அப்துல்லா, வெளியூருக்கு செல்பவர்களுக்கு தனியார் பஸ்களில் டிக்கெட் எடுத்து கொடுக்கும் ஏஜென்டாக வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் நேற்று நள்ளிரவு சிலருடன் மது குடிக்க சென்றுள்ளார்.

    சதக் அப்துல்லா உள்ளிட்ட 6 பேரும் பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள கழிவறைக்கு பின் பகுதியில் இருக்கும் காலியிடத்தில் அமர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது சதக்அப்துல்லாவுக்கும், அவருடன் மது குடித்து கொண்டிருந்த மற்றவர்களுக்கும் இடையே குடி போதையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர்கள் சதக் அப்துல்லாவை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது அங்கு கிடந்த பெரிய கல்லை தூக்கி சதக் அப்துல்லாவின் தலையில் போட்டனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார்.

    இதையடுத்து அவரை கொன்ற நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். நள்ளிரவு நேரத்தில் கொலை நடந்ததால், சதக் அப்துல்லா கொல்லப் பட்டதை யாரும் பார்க்க வில்லை. இந்த நிலையில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் அங்கிருந்த கழிவறைக்கு ஒருவர் வந்திருக்கிறார்.

    அப்போது அங்கு ரத்த வாடை வீசியதால் சந்தேகமடைந்த அவர், கழிவறைக்கு பின் பகுதியில் சென்று பார்த்த போது சதக் அப்துல்லா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து திடீர் நகர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் காசிராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் மூளை சிதறிய நிலையில் பிணமாக கிடந்த சதக் அப்துல்லாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சதக் அப்துல்லாவை தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொன்றார்கள்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொலையாளிகளை கண்டறிவதற்காக போலீஸ் இன்ஸ்பெக்டர் காசிராஜன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் உடனடியாக விசாரணையை தொடங்கினர். சதக் அப்துல்லாவுக்கு யாருடனாவது முன்விரோதம் இருந்ததா? என்று அவரது குடும்பத்தினருடன் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது சதக் அப்துல்லா நேற்று இரவு 8 மணியளவில் வீட்டை விட்டு வெளியே சென்றதாகவும், அவரை பழக்கமான நபர்களே அழைத்து சென்றனர் எனவும் அவர்கள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து சதக் அப்துல்லாவின் நெருங்கி பழகியவர்கள், நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    மேலும் அவர்களில் 5 பேரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் பெரியார் பஸ் நிலைய பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர்.

    அப்போது ஒரு காமிராவில் நள்ளிரவு நேரத்தில் 5 பேர் ஓடும் காட்சி பதிவாகி இருந்தது. அவர்கள் தான் சதக் அப்துல்லாவை கொன்ற கொலையாளிகளாக இருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகின்றனர். ஆகவே அவர்களை அடையாளம் காணும் முயற்சியில் தனிப்படை போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    கொலையாளிகள் 5 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நகரின் பிரதான பஸ் நிலையமான பெரியார் பஸ் நிலையத்தின் அருகில் நள்ளிரவில் வாலிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×