என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
சூடுபிடிக்கும் கொடநாடு வழக்கு- முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியிடம் 3வது முறையாக விசாரணை
- தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதும் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
- இதுவரை விசாரிக்கப்படாத புதிய நபர்களிடம் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
கோவை:
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் கொடநாட்டில் உள்ளது.
இந்த எஸ்டேட்டில் 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொள்ளையர்கள் புகுந்து அங்கிருந்த முக்கிய ஆவணங்கள் மற்றும் பொருட்களை அள்ளிச்சென்றனர். இதனை தடுக்க வந்த எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் கொள்ளையர்களால் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக 10-க்கும் மேற்பட்டோரை நீலகிரி மாவட்ட போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது.
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதும் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான போலீசார் இந்த விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
ஏற்கனவே இந்த வழக்கில் கைதானவர்கள், சாட்சிகள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் சசிகலா, முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி உள்ளிட்டோரிடம் விசாரணை நடந்தது.
இந்தநிலையில் இதுவரை விசாரிக்கப்படாத புதிய நபர்களிடம் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். கோவையைச் சேர்ந்த தொழில் அதிபர் ஆறுமுகசாமி, அவரது மகன் செந்தில்குமார் மற்றும் உதவியாளர் பழனிசாமி ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
ஏற்கனவே சென்னை சி.ஐ.டி. நகரில் உள்ள ஒரு வீட்டில் கொடநாடு தொடர்புடைய ஆவணங்கள் இருப்பதாக வருமான வரித்துறையினருக்கு தகவல் கிடைத்து அங்கு சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கிடைத்த ஆவணங்களை கொண்டு தற்போது விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அதன்பேரிலேயே ஆறுமுகசாமி, மகன் செந்தில்குமார் ஆகியோரி டம் போலீசார் விசாரித்துள்ளனர்.
நேற்று புதுவையைச் சேர்ந்த ரிசார்ட் உரிமையாளர் நவீன் பாலாஜி என்பவரை போலீசார் நேரில் அழைத்து விசாரித்தனர். கோவையில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் இந்த விசாரணை நடந்தது.
நவீன் பாலாஜிக்கு சொந்தமான பிரமாண்ட ரிசார்ட் ஒன்றை சசிகலா வாங்கியதாக கூறப்படுகிறது. மத்திய அரசு பழைய 500 ரூபாய், ரூ.1000 மதிப்பிழப்பு செய்திருந்த நேரத்தில் இந்த சொத்துக்கள் வாங்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. அதன்பே ரிலேயே நவீன் பாலாஜியிடம் நேற்று போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.
இன்று முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியிடம் விசாரிக்க அவருக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். அதன்படி ஆறுக்குட்டி போலீசார் முன்பு ஆஜர் ஆனார். அவரிடம் போலீசார் பல்வேறு கேள்விகளை எழுப்பி அதற்கான பதில்களை பெற்றனர்.
ஆறுக்குட்டியிடம் கொடநாடு வழக்கு தொடர்பாக ஏற்கனவே 2 முறை விசாரித்து இருந்தனர். தற்போது 3-வது முறையாக அவரிடம் விசாரணை நடந்தது.
ஜெயலலிதாவின் கார் டிரைவரான கனகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியிடமும் டிரைவராக வேலை பார்த்தவர். கொடநாடு கொள்ளை நடந்த சில நாட்களில் கனகராஜ் விபத்தில் சிக்கி இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே வழக்கை விசாரித்து வரும் ஐ.ஜி. சுதாகர் சென்னையிலேயே முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார். இந்த வழக்கில் நவீன் பாலாஜி, தொழில் அதிபர் ஆறுமுகசாமி தவிர மேலும் பலரிடம் போலீசார் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.
தற்போது அ.தி.மு.க.வில் நடைபெறும் உட்கட்சி பிரச்சினைக்கு இடையே கொடநாடு விவகாரமும் சூடுபிடிக்கத் தொடங்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்