search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நெல்லை தொழிலாளியின் புது முயற்சி- களிமண்ணால் ஆன விதை விநாயகர் சிலைகள்
    X

    நெல்லை தொழிலாளியின் புது முயற்சி- களிமண்ணால் ஆன விதை விநாயகர் சிலைகள்

    • விநாயகர் சிலைகளை வட மாநில தொழிலாளர்கள் தயாரித்து விற்பனை செய்வார்கள்.
    • இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் இந்த சிலைகளுக்கு வரவேற்பு இருப்பதாக வேல்முருகன் கூறினார்.

    நெல்லை:

    விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 7-ந்தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது.

    இந்த விழாவையொட்டி ஆண்டுதோறும் நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை கிருபா நகரில் 3 அடி முதல் 12 அடி வரையிலும் விநாயகர் சிலைகளை வட மாநில தொழிலாளர்கள் தயாரித்து விற்பனை செய்வார்கள்.

    அவ்வாறு தயார் செய்யப்படும் சிலைகள் இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் மூலம் வாங்கி பிரதிஷ்டை செய்து அவற்றை தாமிரபரணி ஆற்றில் கரைப்பார்கள்.

    இவ்வாறு தயாரிக்கப்படும் சிலைகள் ரசாயன கலவை மிகுந்ததாக இருப்பதால் அவற்றை ஆற்றில் கரைக்கும்போது நீர் மாசுபடுகிறது என்று கூறி சமீப காலமாகவே மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் கலவையால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை தயாரிக்கக்கூடாது மற்றும் அதனை பிரதிஷ்டை செய்யக்கூடாது. அதனை ஆற்றில் கரைக்க அனுமதி இல்லை என்று இந்த ஆண்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் சுற்றுச்சூழல் மாசுபடாத வகையில் தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகளுக்கு மவுசு அதிகரித்துள்ளது.

    அந்த வகையில் களிமண்ணால் ஆன விதை விநாயகர் சிலைகளை தயார் செய்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முயற்சியிலும், மரங்களை உருவாக்கும் முயற்சியிலும் இறங்கி இருக்கிறார் நெல்லை வண்ணார்பேட்டையை சேர்ந்த 63 வயதான மண்பாண்ட தொழிலாளி வேல்முருகன்.

    இவர் ஒவ்வொரு பண்டிகை காலங்களுக்கும் ஏற்றார் போல் களிமண்ணில் பல்வேறு வேலைப்பாடுகளை செய்து வருகிறார். சுமார் 40 வருடங்களுக்கும் மேலாக மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வரும் இவர் தற்போது களிமண்ணில் நாவல் மரம் மற்றும் நெல்லிக்காய் மரத்தின் விதைகளை வைத்து களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகளை உருவாக்கி வருகிறார்.

    இதன் மூலம் சுற்றுப்புற சூழலில் எந்தவித எதிர்மறையான தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இந்த சிலைகளில் நாவல் மற்றும் நெல்லிக்காய் விதைகளை உள்ளே வைத்து தயாரிப்பதால் இந்த வகை சிலைகளை கரைக்கும்போது அந்த விதைகள் ஆற்றங்கரை ஓரங்களில் விழுந்து முளைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

    இந்த சிலைகள் ரூ.100-ல் இருந்து ரூ.1,000 வரை விலை போவதாகவும், இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் இந்த சிலைகளுக்கு வரவேற்பு இருப்பதாகவும் வேல்முருகன் கூறினார்.

    பண்டிகை நெருங்கி வரும் நிலையில் இவரது களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகளின் விற்பனை அமோகமாக இருக்கிறது.

    Next Story
    ×