search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பொதுச் செயலாளர் பதவியில் இ.பி.எஸ். - அதிமுக தொண்டர்களே விரும்பவில்லை: ஓ.பி.எஸ்.
    X

    பொதுச் செயலாளர் பதவியில் இ.பி.எஸ். - அதிமுக தொண்டர்களே விரும்பவில்லை: ஓ.பி.எஸ்.

    • அ.தி.மு.க.வை அழிப்பது என்பது எந்த சக்தியாலும் முடியாது.
    • ஓ.பி.எஸ். எப்போதுமே இயக்கத்திற்கு விசுவாசமாக இருந்த வரலாறு கிடையாது.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் அக்கட்சியில் இணைய முயற்சித்து வருகிறார். ஆனால் அவரை ஒரு போதும் அ.தி.மு.க.வில் சேர்த்துக் கொள்ளமாட்டோம் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார்.

    எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுகளுக்கு ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்து கூறியதாவது-

    'துரோகம்', 'பொய்மை', 'செய்நன்றி மறத்தல்', 'வன்முறை' ஆகியவற்றின் மொத்த உருவமாக விளங்கும் எடப்பாடி பழனிசாமி என்னை விசுவாசமற்றவன் என்று பேட்டியளித்திருப்பது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல் உள்ளது.

    அ.தி.மு.க.வுக்கும் புரட்சித் தலைவி அம்மாவுக்கும் எந்த அளவிற்கு விசுவாசமாக இருந்தேன் என்பதை அம்மா பல சந்தர்ப்பங்களில் தெரிவித்து இருக்கிறார். என்னுடைய விசுவாசத்திற்கு ஈடாக ராமாயணத்தில் வரும் பரதனை ஒப்பிட்டு பேசிய அம்மாவின் பேச்சினை தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் நன்கு அறிவார்கள்.

    என்னுடைய விசுவாசத்தை அம்மா இந்த நாட்டிற்கு பறைசாற்றிய நிலையில், அதைப் பற்றி பேச பழனிசாமிக்கு தகுதி இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    முதலமைச்சர் பதவியை கொடுத்தவருக்கு துரோகம், பரிந்துரை செய்தவருக்கு துரோகம், 4 ஆண்டு ஆட்சிக்கு உறுதுணையாக இருந்தவருக்கு துரோகம், அ.தி.மு.க. ஆட்சியை காப்பாற்றிக் கொடுத்த வருக்கு துரோகம், என சுயநலத்திற்காக பல துரோகங்களை செய்து கொண்டு வரும் எடப்பாடி பழனிசாமி என்னுடைய விசுவாசத்தை பற்றிப் பேச அருகதையற்றவர்.

    அம்மா போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து போட்டியிட்ட போது, அம்மாவுக்கு எதிராக போட்டியிட்ட வேட்பாளருக்கு 'தலைமை தேர்தல் முகவராக' நான் செயல்பட்டேன் என்று எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்து இருக்கிறார்.


    இதற்கு நான் ஏற்கனவே மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், 'ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னால் அது உண்மையாகிவிடும்' என்ற வேலையை செய்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. இதனை ஆதாரத்துடன் நிருபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார் என்று நான் ஏற்கெனவே தெரிவித்திருந்தேன். இதுநாள் வரை ஆதாரத்தை வெளியிடாத எடப்பாடி பழனிசாமி, மீண்டும் அதே குற்றச்சாட்டினை என்மீது வைத்திருக்கிறார்.

    அடுத்தபடியாக, 2017-ம் ஆண்டு மூன்று சதவிகிதம் ஆதரவு இருந்த எனக்கு 'ஒருங்கிணைப்பாளர்' பதவி தந்ததாகவும், 'துணை முதலமைச்சர்' பதவி தந்ததாகவும் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்து இருக்கிறார். நான் 2017-ம் ஆண்டு 'தர்ம யுத்தம்' நடத்திய காலத்தில் எனக்கு கிட்டத்தட்ட 42 விழுக்காடு மக்கள் ஆதரவு இருந்தது என்பதை பத்திரிகைகள் படம் பிடித்துக் காட்டின. அந்தத் தருணத்தில், நான் எடப்பாடி பழனிசாமியிடம் சென்று எனக்கு 'ஒருங்கிணைப்பாளர் பதவி அளியுங்கள்', 'துணை முதலமைச்சர் பதவி தாருங்கள்' என்று கேட்கவில்லை.

    நான், 'தர்ம யுத்தம்' சார்பாக எம்.ஜி.ஆருடைய நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு 16-வது முறையாக மாபெரும் கூட்டத்தினை கோயம்புத்தூரில் கூட்டியபோது, அங்கு திரண்டிருந்த கூட்டத்தைக் கண்டு அதிர்ந்து, அதற்கு மறுநாள், அ.தி.மு.க.வின் மூத்த விசுவாசிகளான எஸ்.பி. வேலுமணியும், பி. தங்கமணியும், சென்னையில் உள்ள என்னுடைய மகள் வீட்டில் என்னைச் சந்தித்து, நாம் ஒன்று சேர்ந்தால்தான் அ.தி.மு.க. வலுப் பெறும்; அப்போதுதான் தேர்தல்களில் வெற்றி பெற முடியும் என்ற கட்சித் தொண்டர்களின் கருத்தினையும், விருப்பத்தினையும் என்னிடம் வெளிப்படுத்தினர். கட்சியின் நலன் கருதி, கழகம் ஒன்றுபட வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களின் கோரிக்கையை நான் ஏற்றுக் கொண்டேன். நான் போய் பழனிசாமியிடம் எந்தப் பதவியையும் கேட்க வில்லை. இனியும் கேட்க மாட்டேன். பழனிசாமிதான் தவழ்ந்து, ஊர்ந்து, காலில் விழுந்து பெற்ற முதலமைச்சர் பதவியை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக தூது விட்டார்.

    எடப்பாடி பழனிசாமி பதவி வெறி பிடித்தவர், சுய நலவாதி என்பதை தமிழ் நாட்டு மக்கள் நன்கு அறிவர். தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவையில் தனக்கு பெரும்பான்மை இல்லை என்பதால் எனக்கு தூதுவிட்டார். 2016-ம் ஆண்டு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில் 136 இடங்களில் அ.தி.மு.க. வெற்றி பெற்று, தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. அம்மா தன்னுடைய உடல் நலத்தைக்கூட பொருட்படுத்தாமல், சூறாவளி தேர்தல் பிரசாரம் செய்த தன் காரணமாக மாபெரும் வெற்றி அ.தி.மு.க.விற்கு கிடைத்தது. இந்த வெற்றி ஜெயலலிதாவுக்கு கிடைத்த வெற்றி.


    அம்மாவின் மறைவிற்குப் பின், சசிகலா தயவால் முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்ட எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தைக் கொண்டு வந்த போது, அவருக்கு ஆதரவாக 122 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர்.

    இந்த 122 சட்டமன்ற உறுப்பினர்களில், 19 சட்ட மன்ற உறுப்பினர்கள் ஒரு சில மாதங்கள் கழித்து கவர்னரை சந்தித்து, எடப்பாடி பழனிசாமிக்கு கொடுத்த ஆதரவை திரும்பப் பெறுவதாக கடிதம் கொடுத்தனர். இதனால், எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்கும் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 103 ஆக குறைந்தது. இது தவிர, மேலும் சில சட்டமன்ற உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவே செயல்பட்டுக் கொண்டிருந்தனர். இதையும் சேர்த்தால், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவான சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை நூறுக்கும் கீழே சென்று விட்டது. அதே சமயத்தில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 98 ஆக இருந்தது. அதாவது, ஆளும் கட்சியை விட எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அப்போது, பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று கவர்னரிடம் கடிதம் கொடுத்தது தி.மு.க. அந்தச் சமயத்தில் கவர்னர் பெரும் பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டிருந்ததால், எடப்பாடி பழனிசாமியின் முதலமைச்சர் பதவி அன்றைக்கே போயிருக்கும். இந்தச் சிக்கலில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள எனக்கு தூதுவிட்டு கெஞ்சியவர் எடப்பாடி பழனிசாமி.

    எனக்கு எடப்பாடி பழனிசாமியுடன் சேர விருப்ப மில்லை என்றாலும், "எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அ.தி.மு.க. மக்களுக்காகவே இயங்கும்" என்று அம்மா சொன்ன அந்த வார்த்தைகளை மனதில் நிலைநிறுத்தி மீண்டும் இணைவதற்கு முடி வெடுத்தேன்.

    என்னிடம் தூது வந்தவர்கள் சொன்னது, கட்சிக்கு நானும், ஆட்சிக்கு எடப்பாடி பழனிசாமியும் என்று கூறினார்கள். நானும் ஒத்துக் கொண்டேன். ஆனால், ஒத்துக் கொண்டதற்கு மாறாக, கையெழுத்திடும் அதிகாரம் உடைய இணை ஒருங்கிணைப்பாளர் பதவி தனக்குத் தரப்பட வேண்டும் என்ற நிபந்தனையை விதித்தார். கட்சி நலன் கருதி நான் அதனை ஏற்றுக் கொண்டேன்.

    துணை முதலமைச்சர் பதவியை பொறுத்தவரையில், முதலில் நான் வேண்டாம் என்றுதான் சொன்னேன். இருப்பினும், பிரதமர் என்னை டெல்லிக்கு நேரில் அழைத்து வற்புறுத்தியதன் காரணமாக அந்தப் பதவியை ஏற்றுக் கொண்டேன்.

    2019-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலின்போது, தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட ரவீந்திரநாத்தை மட்டும் நான் வெற்றி பெற வைத்தேன் என்றும், அதே பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட கழக வேட்பாளரை வெற்றி பெறச் செய்யவில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்திருக்கிறார். இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. 39 பாராளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டு, தேனி தொகுதியில் மட்டும் ரவீந்திரநாத் வெற்றி பெற்றதை எடப்பாடி பழனிசாமியால் ஜீரணிக்க முடியவில்லை. அதனால்தான் இதுபோன்ற குற்றச்சாட்டினை என்மீது சுமத்தி இருக்கிறார் . இது அரசியல் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு.

    ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருக்கிறது என்று நான் சொன்னதற்குக் காரணம் மக்களுக்கு அதில் சந்தேகம் இருந்ததால்தான். மக்களின் கருத்தைத்தான் நான் பிரதிபலித்தேன். அதே போல, நீதியரசர் ஆறு முகசாமி விசாரணை ஆணையம் முன்பு நான் ஆஜராகவில்லை என்று கூறியிருக்கிறார். இது முற்றிலும் தவறு.

    2022-ம் ஆண்டு இரு முறை நீதியரசர் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன்பு ஆஜராகி என்னுடைய விளக்கத்தை நான் அளித்தேன். இதுதான் உண்மை நிலை. எனவே, பொத்தாம் பொதுவாக நான் ஆணையம் முன்பு ஆஜராகவில்லை என்று கூறுவது அரசியல் காழ்ப்புணர்ச்சி.

    நீதியரசர் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் பற்றி கருத்து தெரிவிக்கும் எடப்பாடி பழனிசாமி, கோடநாடு கொலை-கொள்ளை வழக்கு குறித்து வாய் திறக்க ஏன் மறுக்கிறார்? இந்த வழக்கினை விரைந்து முடிக்க வேண்டும் என என்னுடைய தலைமையில் நான் ஆர்ப்பாட்டம் நடத்தினேன். கொடநாடு கொலை-கொள்ளை வழக்கு குறித்து போராட்டம் நடத்த எடப்பாடி பழனிசாமி ஏன் தயங்குகிறார்?

    23-6-2022 அன்று நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக் குழுக் கூட்டத்தில், பொதுக் குழு அல்லாத சமூக விரோதிகளையும், ரவுடிகளையும் உட்கார வைத்து, வரவு-செலவு திட்ட அறிக்கையைகூட என்னால் வாசிக்க முடியாத நிலையை உருவாக்கி, ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் மேடையில் இருந்த என்மீதும், எனக்கு ஆதரவாக இருந்த சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர். வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜே.சி.டி. பிரபாகர் உள்ளிட்ட நிர்வாகிகள் மீதும் தண்ணீர் பாட்டில்களை வீசி கொலைவெறித் தாக்குதல் நடத்த மூல காரணமாக இருந்தவர் எடப்பாடி பழனிசாமி.

    11-7-2022 அன்று, வானகரத்தில் பொதுக் குழுக் கூட்டம் நடைபெற்றக் கொண்டிருந்த சமயத்தில், மாவட்டக் கழகச் செயலாளர்கள் எட்டு பேரையும், சமூக விரோதிகள் 300 பேரையும் தலைமைக் கழகத்திற்கு அனுப்பி, தலைமைக் கழகத்தின் கதவைப் பூட்டச் சொல்லி, வன்முறையை உருவாக்கியவர் எடப்பாடி பழனிசாமி. தலைமைக் கழகம் அமைந்திருக்கும் தெருவிற்குள் செல்ல முடியாத அளவுக்கு நாங்கள் சென்ற வாகனங்களின்மீது கற்கள் வீசப்பட்டன. நாங்கள் அந்தத் தெருவில் உள்ள இந்தியன் வங்கி அருகில் நின்று கொண்டிருந்த நேரத்தில், காவல் துறையினர் வந்ததன் காரணமாக அங்கு குழுமியிருந்த சமூக விரோதிகள் அங்கிருந்து சென்றதையடுத்து, திறந்திருந்த தலைமைக் கழகத்திற்குள் நாங்கள் சென்றோம். இதுதான் உண்மை நிலை.

    'இரட்டைத் தலைமை' இருந்தக் காலகட்டத்தில், 2019-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில், அ.தி.மு.க. 22 இடங்களில் போட்டியிட்டு ஓர் இடத்தில் மட்டும் வெற்றி பெற்றது. அ.தி.மு.க. மட்டும் பெற்ற வாக்கு விகிதம் 19.39 விழுக்காடு. கூட்டணி பெற்ற வாக்கு சதவீதம் 31.05.

    'ஒற்றைத் தலைமை' வந்த பிறகு, 2024-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில், அ.தி.மு.க. 34 இடங்களில் போட்டியிட்டு ஓர் இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. 7 தொகுதிகளில் டெபாசிட் பறிபோய் இருக்கிறது.

    12 இடங்களில் 3-வது இடத்திற்கும், ஒரு இடத்தில் நான்காவது இடத்திற்கும் சென்றது. விளவங்கோடு சட்டமன்ற இடைத் தேர்தலில் வெறும் 5,267 வாக்குகளை மட்டுமே பெற்றது. 2019-ம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடும்போது, கிட்டத்தட்ட 30 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை அ.தி.மு.க. இழந்துவிட்டது.

    'இரட்டை இலை' சின்னம் இல்லாதிருந்தால், நிலைமை மிகவும் மோசமாக இருந்திருக்கும். இதுதான் அ.தி.மு.க.வின் இன்றைய நிலைமை. நான் இந்த அறிக்கையை விரிவாக வெளியிடுவதற்குக் காரணம், நேற்றைய தினம் மதுரை விமான நிலையத்தில் உண்மைக்குப் புறம்பான, முரண்பட்ட கருத்துகளை எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததுதான்.

    என்னைப் பொறுத்த வரையில், அ.தி.மு.க. ஒன்று பட வேண்டும், புரட்சித் தலைவியின் ஆட்சியை 2026-ம் ஆண்டு அமைக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம். இந்த விருப்பம் நிறைவேற்றப்பட வேண்டுமென்றால், தலைமை மாற்றப்பட வேண்டும். எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை அழிவுப்பாதைக்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கிறார்.

    தொடர் தோல்வியை சந்தித்து வரும் எடப்பாடி பழனிசாமி தலைமையை தொண்டர்கள் நிராகரித்து விட்டார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை. இந்தத் தலைமை தொடர்ந்தால், அ.தி.மு.க. மாபெரும் வீழ்ச்சியைத்தான் சந்திக்கும். பிளவுபட்டு இருக்கின்ற கழகம் இணைந்தால்தான் வலுப்பெறும். இதனை மனதில் வைத்துத்தான் கழகம் இணைய வேண்டு மென்ற கருத்தினை நான் சொல்லி வருகிறேன்.

    நான் எந்த நேரத்திலும் என்னை கட்சியில் சேர்க்கு மாறு கோரிக்கை வைக்காத நிலையில், 'என்னை கட்சியில் சேர்த்துக் கொள்ள மாட்டேன்' என்று எடப்பாடி பழனிசாமி கூறுவது கேலிக்கூத்தாக உள்ளது.

    என்னைப் பொறுத்த வரையில், எந்தக் காலத்திலும் நான் எடப்பாடி பழனிசாமியிடம் யாசகம் கேட்க மாட்டேன். எனக்கு அதற்கான அவசியமும் இல்லை. கட்சி இணைவதற்கு நான் எந்தத் தியாகத்தையும் செய்யத் தயார். கட்சி இணைய எடப்பாடி பழனிசாமி எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாரா என்பதுதான் என் கேள்வி.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி நீடிப்பதை தொண்டர்களும், பொது மக்களும் விரும்பவில்லை. இதனை புரிந்து கொண்டு, அவர் பதவியில் இருந்து விலகினால் நன்றாக இருக்கும். தாமாக பதவி விலக எடப்பாடி பழனிசாமி மறுக்கும்பட்சத்தில், தொண்டர்களும், பொதுமக்களும் இணைந்து அதற்கான சூழ்நிலையை உருவாக்குவார்கள்.

    இவ்வாறு ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

    Next Story
    ×