search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வீடுகளில் கொடியேற்ற பொதுமக்கள் ஆர்வம்- திருப்பூரில் தேசிய கொடிகள் தயாரிக்க ஆர்டர்கள் குவிந்தன
    X
    திருப்பூரில் உள்ள நிறுவனத்தில் தேசிய கொடிகள் தயாரிப்பு பணி மும்முரமாக நடைபெற்று வருவதை காணலாம்.

    வீடுகளில் கொடியேற்ற பொதுமக்கள் ஆர்வம்- திருப்பூரில் தேசிய கொடிகள் தயாரிக்க ஆர்டர்கள் குவிந்தன

    • சிவகாசியில் உள்ள நிறுவனங்களில் கதர், காகிதம், பிளாஸ்டிக், காகித அட்டை, ஸ்டிக்கர் என 30 வகையான வடிவத்தில் தேசிய கொடிகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
    • 75-ம் ஆண்டு சுதந்திர தினம் என்பதால் இந்த ஆண்டு அதிக அளவிலான ஆர்டர்கள் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து வந்துள்ளன.

    திருப்பூர்:

    சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆவதையொட்டி நாடு முழுவதும் சிறப்பு கொண்டாட்டங்கள் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொதுமக்கள் தங்கள் வீடுகளில் ஆகஸ்டு 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை தேசியக்கொடியேற்றி நாட்டு மக்களின் இணைப்பை மேலும் வலுவாக்க வேண்டும் என பிரதமர் நரேந்திரமோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதையடுத்து பல்வேறு மாநிலங்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

    வீடுகள்தோறும் தேசிய கொடிகள் ஏற்றப்பட உள்ளதால் அதிக அளவு தேசிய கொடிகள் தேவைப்படுகிறது. இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தேசிய கொடிகள் தயாரிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    தமிழகத்தை பொறுத்தவரை திருப்பூரில் உள்ள கொடி உற்பத்தியாளர்களிடம் தேசிய கொடிகள் தயாரிப்பதற்கான ஆர்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இது குறித்து திருப்பூரை சேர்ந்த கொடி உற்பத்தியாளர் கொடிமணி கூறியதாவது:-

    தற்போது 75வது ஆண்டு சுதந்திர தினம் என்பதால் அரசு சார்பில் வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற அனுமதியும், வேண்டுகோளும் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு தேசிய கொடி தயாரிப்புக்கான ஆர்டர்கள் அதிகம் பெறப்பட்டுள்ளது.

    தமிழகத்தை பொறுத்தவரை திருப்பூரில் உள்ள சில நிறுவனங்கள் கொடிகள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. வீடுகளில் ஏற்றக்கூடிய தேசிய கொடி 20x30 என்ற அளவில் தயாரித்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு அனுப்பிவைத்து வருகிறோம். கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களில் ஏற்றுவதற்கு 30x40 அளவிலான கொடிகள் தயாரிக்கப்படுகிறது.

    மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளதால் தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், சமூக ஆர்வலர்கள், வியாபாரிகள் ஆகியோரிடமிருந்து அதிக அளவிலான ஆர்டர்கள் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் போதிய நேரம் இல்லாததால் ஆர்டர்கள் எடுக்கமுடியவில்லை. தற்போது எடுத்துள்ள ஆர்டர்களையே குறிப்பிட்ட நேரத்தில் முடித்து கொடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரவு பகலாக கொடி தயாரிப்பு பணி நடந்து வருகிறது.

    20x30 பாலியஸ்டர் வகையிலான தேசிய கொடிகள் ரூ.30க்கும், காட்டன் துணியால் ஆன தேசிய கொடிகள் ரூ.60க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 30x40 அளவு பாலியஸ்டர் துணியால் ஆன கொடிகள் ரூ.50க்கும், காட்டன் துணியால் ஆன கொடிகள் ரூ.85-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. திருப்பூரில் உள்ள நிறுவனங்கள் மூலம் இதுவரை 20 லட்சம் தேசிய கொடிகள் தயாரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 10-ந்தேதிக்குள் மேலும் பல லட்சம் கொடிகள் தயாரித்து அனுப்ப உள்ளோம்.

    வட மாநிலங்களில் இருந்து காகிதம் மூலம் தயாரிக்கப்பட்ட தேசிய கொடிகள் அனுப்பி வைக்கப்படுகிறது. இருப்பினும் காட்டன் துணி கொடிகள் உற்பத்தி திருப்பூரில் மட்டுமே தயாராகிறது. தற்போதைய விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் 15 சதவீதம் வரை தேசிய கொடியின் விலை உயர்ந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பால் தேசிய கொடிகள் விற்பனை பாதிக்கப்பட்டது. ஆர்டர்களும் குறைவாகவே வந்தது. இந்த ஆண்டு அதிக ஆர்டர்கள் வந்துள்ளதால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தேசிய கொடிகளை பொறுத்தவரை கிழிந்திருக்க கூடாது, நிறம் மங்கியிருக்க கூடாது என்பது போன்ற விதிமுறைகள் உள்ளன. மேலும் மத்திய அரசின் வேண்டுகோளால் இந்த ஆண்டு பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் புதிய கொடிகளை பயன்படுத்த உள்ளனர். இதனால் முன் எப்போதும் இல்லாத வகையில் ஆர்டர்கள் வந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருப்பூரை சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகி ஒருவர் கூறுகையில், வீடுகளில் ஏற்றப்பட உள்ளதால் திருப்பூரில் தேசிய கொடிகள் தயாரிப்பு பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. வெள்ளையனே வெளியேறு போராட்டம் நடைபெற்ற ஆகஸ்டு 9-ந்தேதி முதல் கொண்டாட்டங்கள் தொடங்கும். 13, 14, 15 ஆகிய 3 நாட்களும் 'வந்தே மாதரம்' ரகுபதி ராகவ ராஜாராம்' ஆகிய தேச பக்தி பாடல்களுடன் தேசிய கொடிகளுடன் எல்லா பகுதியிலும் சிறு சிறு பேரணிகள் நடத்தப்படும். எல்லோரும் தேசிய கொடிகளை கவுரவிக்கும் வகையில் பயன்படுத்த வேண்டும் என்றார்.

    சிவகாசியில் உள்ள நிறுவனங்களில் கதர், காகிதம், பிளாஸ்டிக், காகித அட்டை, ஸ்டிக்கர் என 30 வகையான வடிவத்தில் தேசிய கொடிகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    75-ம் ஆண்டு சுதந்திர தினம் என்பதால் இந்த ஆண்டு அதிக அளவிலான ஆர்டர்கள் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து வந்துள்ளன.

    அவற்றை தயாரித்து அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருவதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

    3 நாட்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டதையடுத்து நாடு முழுவதும் தேசிய கொடிகள் விற்பனை சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கொடிகள் தயாரிப்புக்கு பெயர் பெற்ற திருப்பூரில் உள்ள நிறுவனங்கள் கொடிகளை தயாரித்து விற்பனைக்கு அனுப்பி வருகின்றன.

    கொடிக்கம்பங்களில் ஏற்றப்படும் காதி கொடிகள் விற்பனை ஒரு புறம் உள்ள நிலையிலும், தனிநபர்கள் தங்கள் கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களிலும், சட்டையிலும் அணிந்து பயன்படுத்தும் வகையிலான சிறிய அளவிலான தேசிய கொடிகள் விற்பனையும் தற்போது துவங்கியுள்ளது. திருப்பூர் நகரப்பகுதியில் உள்ள கடைகளில் தற்போது இவற்றின் விற்பனை மும்முரமாக நடைபெறுகிறது.

    மோட்டார் சைக்கிளில் முன்புறம் முகப்பு விளக்குக்கு மேற்பகுதியில் ஒட்டும் வகையிலான ஸ்டிக்கர் கொடி, கார்களின் முன்புறம் பேனட் மீது கட்டும் சிறிய அளவிலான துணி மற்றும் காகித கொடிகள் விற்பனைக்கு வந்துள்ளன. வட்ட, செவ்வக வடிவிலான சட்டையில் குத்தும் வகையிலான தேசிய கொடிகளும் விற்பனையாகின்றன. பலர் மொத்தமாக வாங்கி செல்கின்றனர். கோவை டவுன்ஹால்பகுதியில் உள்ள கடைகளில் தேசிய கொடிகள் விற்பனை சூடுபிடித்துள்ளது. இதேப்போல் தமிழகம் முழுவதும் தேசிய கொடிகளை வாங்குவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×