search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கல்குவாரி ஏலத்தில் பயங்கர மோதல்: பா.ஜ.க.வினரை தாக்கிய தி.மு.க.வினர் 10 பேர் மீது 8 பிரிவுகளில் வழக்கு
    X

    கல்குவாரி ஏலத்தில் பயங்கர மோதல்: பா.ஜ.க.வினரை தாக்கிய தி.மு.க.வினர் 10 பேர் மீது 8 பிரிவுகளில் வழக்கு

    • தி.மு.க.வினர் வேறு எவரையும் டெண்டர் சமர்ப்பிக்க அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
    • கலெக்டர் அலுவலகம் முதல் தளம் போர்க்களம் போல காட்சி அளித்தது.

    பெரம்பலுார்:

    பெரம்பலுார் மாவட்டத்தில், பெரம்பலுார் மற்றும் ஆலத்துார் யூனியனில் உள்ள, 31 கல் குவாரிகளை, இன்று (செவ்வாய் கிழமை) ஏலம் விடுவதாக, பெரம்பலுார் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அறிவிப்பு வெளியிட்டது.

    அதன்படி, ஏற்கனவே செயல்படும், 19 பழைய பிட் கல் குவாரிகளுக்கு, ஒரு குவாரிக்கு தலா, 1.36 கோடி ரூபாயும், 12 புது பிட் கல் குவாரிகளுக்கு, ஒரு குவாரிக்கு தலா 2 கோடி ரூபாயும் என டெண்டர் தொகை நிர்ணயிக்கப்பட்டது.

    இதற்கான விண்ணப்பங்களை பெறுவதற்காக கலெக்டர் அலுவலக வளாகத்தில் முதல் தளத்தில் உள்ள புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலகத்தில் பெட்டி வைக்கப்பட்டது.

    டெண்டர் பெறும் பணியில் கரூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குனர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட உதவி இயக்குனர் ஜெயபால் மற்றும் துறை ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.

    இதனால் அந்த அலுவலகத்தில் ஏராளமானவர்கள் கூடியிருந்தனர். அதில் தி.மு.க.வினர் பெரும்பான்மையாக திரண்டிருந்தனர்.

    இதில் தி.மு.க.வினர் வேறு எவரையும் டெண்டர் சமர்ப்பிக்க அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. போலீசாரும் அங்கு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.

    இந்நிலையில், பா.ஜ.க.வைச் சேர்ந்த, பெரம்பலுார் மாவட்டம், கவுல்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வன் (வயது 48) என்பவர், தன் தம்பி முருகேசன் என்பவருக்கு, கல் குவாரி டெண்டருக்கு விண்ணப்பிப்பதற்காக, பா.ஜ.க தொழில் துறை பிரிவு மாவட்ட தலைவர் முருகேசனுடன் பெரம்பலுார் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.

    அங்குள்ள புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் விண்ணப்பத்தை போடுவதற்காக, விண்ணப்பம் மற்றும் 50 ஆயிரத்திற்கான 2 வங்கி வரைவோலையுடன் சென்றார்.

    அப்போது அங்கு நின்று கொண்டிருந்த தி.மு.க.வினர் அவர்களை தடுத்தனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தின் முதல் தளத்திலேயே பா.ஜ.க. மற்றும் தி.மு.க.வினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

    இதில் கலைச்செல்வன் கட்டையால் தாக்கப்பட்டார். விண்ணப்பங்கள் கிழித்தெறியப்பட்டது. டெண்டர் செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த மரத்தடுப்புகள் உடைத்து சேதப்படுத்தப்பட்டன. இதனை தடுக்க வந்த அரசு அலுவலர்கள், பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் தாக்கப்பட்டனர்.

    அலுவலகம் சூறையாடப்பட்டதில் ஆவணங்கள், விண்ணப்பங்கள் கீழே சிதறி கிடந்தன. இதனால் கலெக்டர் அலுவலகம் முதல் தளம் போர்க்களம் போல காட்சி அளித்தது.

    இந்த தகராறில் காயமடைந்த ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வன், பெரம்பலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு பழனிசாமி, நெடுஞ்சாலை போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் சுப்பையன், அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா, பெரம்பலூர் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம், பெண் போலீஸ் ஏட்டு லட்சுமி மற்றும் மாவட்ட உதவி புவியியலாளர் இளங்கோவன், புவியியல் துறை வருவாய் ஆய்வாளர் குமரி அனந்தன் ஆகியோர் பெரம்பலூர் மருத்துவமனையில் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

    இச்சம்பவம் தொடர்பாக புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இக்குனர் ஜெயபால் பெரம்பலூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் தி.மு.க.வை சேர்ந்த மகேந்திரன், சிவசங்கர், ரமேஷ், செல்வம், அன்பழகன், விஜயகாந்த், தர்மா உள்பட 10 பேர் மீது 8 பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே இதையறிந்து, கனிம வளத்துறை அலுவலகத்திற்கு விரைந்து வந்த கலெக்டர் கற்பகம், சட்டம் ஒழுங்கு பிரச்னையை கருதி கல் குவாரி டெண்டரை தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிட்டார்.

    Next Story
    ×