search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    தீபாவளி பண்டிகைக்கு 40 சிறப்பு ரெயில்கள்- தெற்கு ரெயில்வே திட்டம்
    X

    தீபாவளி பண்டிகைக்கு 40 சிறப்பு ரெயில்கள்- தெற்கு ரெயில்வே திட்டம்

    • முதல்கட்டமாக தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாள்களில் 7 சிறப்பு ரெயில்களை இயக்க தெற்கு ரெயில்வே ஒப்புதல் அளித்துள்ளது.
    • சென்னை எழும்பூரில் இருந்து வருகிற 30, நவம்பர் 2 ஆகிய தேதிகளில் செங்கோட்டைக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும்.

    சென்னை:

    தீபாவளி பண்டிகை வருகிற 31-ந்தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், தென் மாவட்டங்கள், கேரளா, வெளிமாநிலங்களுக்குச் செல்லும் அனைத்து விரைவு ரெயில்களிலும் முன்பதிவு நிறைவடைந்துள்ளது. குறிப்பாக முக்கிய வழித்தடத்தில் இயக்கப்படும் ரெயில்களில் அதிக அளவில் காத்திருப்போர் பட்டியல் காணப்படும் நிலையில் அங்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.

    இந்நிலையில், சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூரில் இருந்து வருகிற 29, 30 ஆகிய தேதிகளில் புறப்படும் அனைத்து ரெயில்களிலும் முன்பதிவு நிறைவடைந்துள்ளது. இந்த ரெயில்களில் மொத்தமாக 7000 வரை காத்திருப்போர் பட்டியல் உள்ளது. பயணிகள் வசதிக்காக வருகிற 25-ந்தேதி முதல் நவம்பர் 5-ந்தேதி வரையிலான காலகட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட சிறப்பு ரெயில்களை இயக்க தெற்கு ரெயில்வே திட்டமிட்டுள்ளது. இதற்கான பரிந்துரையும் அனுப்பப்பட்டுள்ளது.

    இதேபோன்று, சாத் பண்டிகையை முன்னிட்டு வருகிற 23-ந்தேதி முதல் தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து புதுடெல்லி, அகமதாபாத்துக்கு வாரம் இருமுறை சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தெற்கு ரெயில்வேக்கு உட்பட வழித்தடங்களில் சிறப்பு ரெயில்களை இயக்க ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

    அதன்படி, சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து திருநெல்வேலி, நாகா்கோவில், கோவை, திருவனந்தபுரம், மங்களூர், பெங்களூரு, மைசூா் உள்ளிட்ட நகரங்களுக்கு வருகிற 25-ந்தேதி முதல் சிறப்பு ரெயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    முதல்கட்டமாக தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாள்களில் 7 சிறப்பு ரெயில்களை இயக்க தெற்கு ரெயில்வே ஒப்புதல் அளித்துள்ளது. இதில், சென்னை சென்ட்ரலில் இருந்து வருகிற 29, நவம்பர் 5-ந் தேதிகளில் நாகர்கோவிலுக்கும், வருகிற 29, நவம்பர் 2 ஆகிய தேதிகளில் கோவைக்கும், வருகிற 30, நவம்பர் 6 ஆகிய தேதிகளில் திருநெல்வேலிக்கும் சிறப்பு ரெயில் இயக்கப்படும்.

    சென்னை எழும்பூரில் இருந்து வருகிற 30, நவம்பர் 2 ஆகிய தேதிகளில் செங்கோட்டைக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும். சென்னை சென்ட்ரலில் இருந்து மங்களூருக்கு நவம்பர் 2-ந் தேதி சிறப்பு ரெயில் இயக்கப்படும். கொச்சுவேலி-பெங்களூரு இடையே நவம்பர் 4-ந் தேதியும், நாகா்கோவில்-மைசூா் இடையே நவம்பர் 2-ந் தேதியும் சிறப்பு ரெயில் இயக்கப்படும்.

    இதேபோன்று, சென்னை, எா்ணாகுளத்தில் இருந்து புதுடெல்லி மற்றும் அகமதாபாத்துக்கு நவம்பர் 15-ந்தேதி வரை சிறப்பு ரெயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரபூா்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என ரெயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

    Next Story
    ×