search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சி.பி.ஐ. விசாரித்தால் உண்மை தெரியும்- ஆர்.எஸ்.பாரதிக்கு அண்ணாமலை பதில்
    X

    சி.பி.ஐ. விசாரித்தால் உண்மை தெரியும்- ஆர்.எஸ்.பாரதிக்கு அண்ணாமலை பதில்

    • நான் இரட்டை வேடம் போடுவதாக ஆர்.எஸ்.பாரதி அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
    • நாட்டில் பிரிவினையில்லாத நல்லிணக்கத்தையும், நாட்டுப்பற்றுடன் கூடிய தேச ஒற்றுமையையும், பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தும்.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நான் இரட்டை வேடம் போடுவதாக ஆர்.எஸ்.பாரதி அறிக்கை வெளியிட்டிருக்கிறார். ஆனால் இரட்டை வேடங்கள் போடுவது என்பது தி.மு.க.வினருக்கு இயல்பானது. பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தமிழகம் அமைதிப்பூங்கா என்று, தொட்டிலையும் ஆட்டி வைக்கும் இரட்டைவேடம் தி.மு.க.விற்கு கைவந்த கலை.

    முதல்வரின் குடும்பத்தினரால் தொடங்கி வைக்கப்பட்ட காழ்ப்புணர்ச்சியும், வன்மமும் தற்போது வட மாநிலத்தவர் மீது திரும்பி விடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் தான், "வட மாநிலத்தவர் மீதான வெறுப்பு பிரச்சாரங்களுக்கு முடிவு கட்டுவாரா முதல்வர்?" என்று கேட்டிருந்தேன். அதனால்தான் பிரசனையை திசைதிருப்ப, இப்போது என்மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.

    முதலமைச்சரின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில், ஒரு சில வட இந்திய தலைவர்கள் கலந்து கொண்ட உடன், இந்திய தலைமை தாங்க திமுகவின் தலைமை கண்ட பகல் கனவை நினைத்து, எங்களுக்கெல்லாம் பரிதாபப்படத்தான் தோன்றியதே தவிர, பற்றி எரியவில்லை.

    பா.ஜ.க. மொழித் திணிப்பு செய்வதாக, குற்றப்பத்திரிக்கை வாசிக்கும் ஆர்.எஸ். பாரதி, அறுபதுகளில் இருந்து ஆட்சி கட்டிலில் பதவி சுகம் அனுபவித்த, தி.மு.க. செய்யாத தமிழ் மொழித் திணிப்பை, பள்ளிகளில் "தமிழை கட்டாயப் பாடம்" ஆக்கியதன் மூலம், நாங்கள் தமிழ் மொழித் திணிப்பை செய்திருக்கிறோம். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாரதிய ஜனதா கட்சி, தமிழ் மொழித் திணிப்பை செய்திருக்கிறது என்பது உண்மைதான்.

    வெறுப்பையும் பகையையும் வெளிப்படுத்துவதாக என் மீது ஆர்.எஸ். பாரதி வெளியிட்ட கூற்று ஒரு வகையில் சரிதான். தி.மு.க.வின் இரட்டை நிலைப்பாட்டின் மீது வெறுப்பும், அவர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி மீது பகையும், எனக்கும், நான் சார்ந்த இயக்கத்தினருக்கும் எப்போதும் உண்டு.

    வட மாநிலங்களில் உள்ள சட்டமன்றங்களில் தமிழகத்திற்கு எதிரான கண்டனக் குரல்களை கண்ட பிறகு, எழுந்த அச்சத்தினால், பிள்ளையை கிள்ளிவிட்ட நீங்கள் தொட்டிலாட்ட முன் வந்திருக்கிறீர்கள். இரட்டை வேடம் அல்ல, நாடக தி.மு.க. வினர் இருபது வேடங்கள் கூடப் போடுவீர்கள்.

    இப்படி, தமிழகத்தில் தொடங்கி வைக்கப்பட்ட வெறுப்பு அரசியலால், திருப்பூரில் விரும்பத்தகாத ஒரு சம்பவம் நடைபெற்ற போது, காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்காதது ஏன்?

    காவல்துறையின் நடவடிக்கைகளை தாமதப்படுத்தியது யார்? என்ற விசாரணையை சி.பி.ஐ. தொடங்க வேண்டும்.

    அடிக்கடி திருச்சிக்குச் செல்லும் தமிழகத்தின் டி.ஜி.பி., திருப்பூருக்கு ஏன் நேரிலே சென்று விசாரிக்கவில்லை? திருப்பூரில் உளவுத்துறை என்ன செய்து கொண்டு இருந்தது?. ஆகவே தமிழகக் காவல்துறையினர் என்ன செய்து கொண்டு இருந்தார்கள் என்பதை சி.பி.ஐ. விசாரித்தால்தான் நாட்டிற்கு உண்மை நிலவரம் தெரிய வரும்.

    நாட்டில் பிரிவினையில்லாத நல்லிணக்கத்தையும், நாட்டுப்பற்றுடன் கூடிய தேச ஒற்றுமையையும், பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×