search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திண்டுக்கல்லில் இன்று வீட்டிற்குள் லாரி புகுந்து கட்டிட தொழிலாளி பலி
    X

    திண்டுக்கல்லில் இன்று வீட்டிற்குள் லாரி புகுந்து கட்டிட தொழிலாளி பலி

    • உயிரிழந்த ஜஸ்டின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்-மதுரை சாலை தோமையார்புரம் ஏ.டி.காலனியை சேர்ந்தவர் ஜஸ்டின்(38). இவரது மனைவி பிரேமா(32). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். நேற்று இரவு இவர்கள் அனைவரும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர்.

    இன்று அதிகாலை மைசூரில் இருந்து தேனிக்கு அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. அதிகாலை நேரத்தில் டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு சிறுநீர் கழிக்கச்சென்றார். அப்போது திடீரென லாரி தானாக நகர்ந்து அங்கிருந்த ஜஸ்டின் வீட்டிற்குள் புகுந்தது.

    இதில் ஜஸ்டின் மீது சுவர் இடிந்து விழுந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பிரேமாவிற்கு தலையில் பலத்த காயமும், மகன்களுக்கு லேசான காயமும் ஏற்பட்டது. லாரி வீட்டிற்குள் புகுந்ததால் அப்பகுதி மக்கள் திரண்டு வந்து இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    பின்னர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிரேமா மற்றும் அவரது குழந்தைகளை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த ஜஸ்டின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    பிரேமா நிலைமை கவலைக்கிடமாக இருக்கவே மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். லாரி டிரைவரான திருவண்ணாமலையை சேர்ந்த பழனி என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×