search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்கவில்லை: எடப்பாடி பழனிசாமி
    X

    போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்கவில்லை: எடப்பாடி பழனிசாமி

    • தென்மாவட்ட பெருமழை குறித்து வானிலை ஆய்வு மையம் கடந்த 14-ந்தேதியை எச்சரிக்கை விடுத்தது.
    • சென்னை பெருவெள்ளத்தில் கற்றுக்கொண்ட பாடம் மூலம் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.

    தூத்துக்குடி:

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த மிக கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி உள்ளது.

    இதையடுத்து தமிழக அமைச்சர்கள் தென்மாவட்டங்களில் முகாமிட்டு மீட்பு மற்றும் நிவாரண பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.

    இந்நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தென்மாவட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறுவதற்கும், நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கும் இன்று தூத்துக்குடி வந்தார்.

    முன்னதாக அவர், சென்னையில் இருந்து காலை 7.55 மணிக்கு புறப்பட்ட விமானத்தில் மதுரை வந்தடைந்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. இன்ப துரை ஆகியோர் வந்தனர்.

    மதுரை விமான நிலையத்தில் இருந்து காரில் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி வந்தார். அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி விவரங்களை கேட்டறிந்தார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொது மக்களை மீட்பு குழுவினர் மீட்டு முகாம்களில் தங்க வைத்துள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது என தமிழக அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.

    ஆனால் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் ஆகியவை வழங்கப்படவில்லை என அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களை அரசு அதிகாரிகள் நேரில் சந்திக்கவில்லை எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்ட பெருமழை குறித்து வானிலை ஆய்வு மையம் கடந்த 14-ந்தேதியை எச்சரிக்கை விடுத்தது. ஆனால் அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

    சென்னை பெருவெள்ளத்தில் கற்றுக்கொண்ட பாடம் மூலம் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தூத்துக்குடியில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட பின் விளாத்திகுளம், கயத்தாறு பகுதிகளில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு எடப்பாடி பழனிசாமி நிவாரண உதவிகளை வழங்கினார்.

    பின்னர் அங்கிருந்து எடப்பாடி பழனிசாமி நெல்லை வந்தார். தச்சநல்லூர் மற்றும் பாளையங்கோட்டையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி ஆறுதல் கூறுகிறார்.

    பின்னர் ராதாபுரம் சட்டமன்ற தொகுதி வழியாக குமரி மாவட்டத்துக்கு செல்லும் எடப்பாடி பழனிசாமி அங்கு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறி நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

    Next Story
    ×