search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 55 ஆயிரம் கனஅடியாக சரிவு
    X

    ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 55 ஆயிரம் கனஅடியாக சரிவு

    • போலீசார், ஊர்க்காவல் படையினர் காவிரி கரையோர பகுதிகளில் சுற்றுலா பயணிகள் யாரும் குளிக்க விடாமல் தடுத்து தீவிர ரோந்து பணியில் கண்காணித்து வருகின்றனர்.
    • மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதை மூழ்கடித்தவாறு தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

    தருமபுரி:

    கர்நாடகா, கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான குடகு, வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதையடுத்து கபினி, கிருஷ்ணராஜ சாகர் ஆகிய 2 அணைகளில் இருந்து இன்று நீர் திறப்பு சற்று சரிந்து மொத்தம் 63 ஆயிரம் கனஅடி அளவில் உபரி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து காவிரி ஆற்றில் 40 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், கர்நாடகா-தமிழக எல்லையான பிலிக்குண்டுலு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து தொடர்ந்து 50 ஆயிரம் கனஅடிக்கு மேல் அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது.

    இந்த நிலையில் கர்நாடகா மாநிலத்தில் 2 அணைகளில் நேற்று முன்தினம் நீர்திறப்பு 45 ஆயிரம் கனஅடியாக சற்று குறைந்த அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இதன் காரணமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று 65 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை சற்று சரிந்து 55 ஆயிரம் கனஅடியாக குறைந்து வந்து கொண்டிருக்கிறது.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடர்ந்து 50 ஆயிரம் கனஅடிக்கு மேல் வருவதால் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் என காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. மேலும் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதை மூழ்கடித்தவாறு தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

    நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருப்பதால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும் பரிசல் பயணம் செய்யவும் விதிக்கப்பட்ட தடையானது தொடர்ந்து இன்று 6-வது நாளாக நீடிக்கிறது. மேலும் இன்று 2-வது நாளாக காவிரி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    இன்று விடுமுறை நாள் என்பதால் ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலா பயணிகள் அருவிகள் மற்றும் காவிரி ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாலும், பரிசல் இயக்க தடைவிதிக்கப்பட்டு உள்ளதாலும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    மேலும் போலீசார், ஊர்க்காவல் படையினர் காவிரி கரையோர பகுதிகளில் சுற்றுலா பயணிகள் யாரும் குளிக்க விடாமல் தடுத்து தீவிர ரோந்து பணியில் கண்காணித்து வருகின்றனர்.

    காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை காவிரி நுழைவிடமான கர்நாடகா தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    Next Story
    ×