search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    புதிய ரேஷன் கடைகள் கழிப்பிட வசதிகளுடன் கட்டித்தரப்படும்- கூட்டுறவுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன்
    X

    புதிய ரேஷன் கடைகள் கழிப்பிட வசதிகளுடன் கட்டித்தரப்படும்- கூட்டுறவுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன்

    • ரேஷன் அரிசி கடத்தல் புள்ளிகள் 111 பேர் குண்டர் தடுப்பு சட்டத்திற்கு இணையான கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • கடந்த ஓராண்டு காலத்தில் 11 ஆயிரத்து 8 அரிசி கடத்து வழக்குகளில், 11,121 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். 2008 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    திருச்சி:

    கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் இன்று திருச்சி வருகை தந்தார். திருச்சி அண்ணா நகர் கூட்டுறவு வங்கியில், உறுப்பினர்களுக்கு கடனுதவிகளை வழங்கினார்.

    தொடர்ந்து கல்லுக்குழி நியாய விலைக்கடையினைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து டி.வி.எஸ். டோல்கேட் மின்வாரிய அலுவலகம் அருகில் உள்ள சுப்பிரமணியபுரம் நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கில் ஆய்வு செய்தார்.

    திருச்சி மாவட்டத்தில் 60,000 ஹெக்டேர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் திருச்சி மாவட்டத்திற்கு 40 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் உடனடியாக தேவையாக இருக்கிறது. அதில் தற்போது பத்து உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் மழைக்காலங்களில் வருடா வருடம் நெல் நனைகின்றது. தற்போதைய நிலையில் தமிழகத்தில் 13½ லட்சம் மெட்ரிக் டன் நெல்லை பாதுகாக்க மூடிய குடோன்களும், மூன்றரை லட்சம் மெட்ரிக் டன் நெல்லை பாதுகாக்க வாடகை குடோன்களும் உள்ளன. கடந்த ஆண்டில் மட்டும் 109 தார்பாய்களான தற்காலிக குடன்களும் திறக்கப்பட்டுள்ளன.

    தற்போது டெல்டா மாவட்டங்களில் 2.6 லட்சம் மெட்ரிக் டன் நெல்லை பாதுகாக்கும் வகையில் 20 இடங்களில் புதிய குடோன்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. தமிழக கூட்டுறவு வங்கிகளில் 67 ஆயிரம் கோடி டெபாசிட் தொகை உள்ளது. அதில் 40 ஆயிரம் கோடி நகை கடனாகவும், பத்தாயிரம் கோடிக்கு மேல் வேளாண் கடனாகவும். மேலும் பத்தாயிரம் கோடி இதர கடன்கள் என மொத்தம் 60,000 கோடி கடன் வழங்கப்படுகிறது.

    பொது சுகாதார திட்டத்தின் கீழ் நம்ம பகுதி, நம்ம ரேஷன் கடை என்ற திட்டத்தின் படி ரேஷன் கடைகளை மக்கள் விரும்பும் இடமாக மாற்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி திருச்சி மாவட்டத்தில் 75 ரேஷன் கடைகள் புதுப்பிக்கப்பட உள்ளன. மேலும் புதிதாக கட்டக்கூடிய ரேஷன் கடைகளில் கழிப்பிட வசதி, மாற்றுத்திறனாளிகள் வரும் வசதி, வயதானவர்கள் உட்கார வசதி ஏற்படுத்தப்படும்.

    இங்கு சிவில் சப்ளை சி.ஐ.டி.க்கு என தனி பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக அரிசி கடத்தல் தடுக்கப்பட்டு வருகிறது. நேற்றைய தினம் கூட 120 மெட்ரிக் டன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் 100 மெட்ரிக் டன் அரிசி பிடித்துள்ளோம். இதில் முக்கிய கடத்தல் புள்ளியான சக்கரவர்த்தி என்பவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

    ரேஷன் அரிசி கடத்தல் புள்ளிகள் 111 பேர் குண்டர் தடுப்பு சட்டத்திற்கு இணையான கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். அது மட்டுமல்லாமல் கடந்த ஓராண்டு காலத்தில் 11 ஆயிரத்து 8 அரிசி கடத்து வழக்குகளில், 11,121 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். 2008 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    அரிசி கடத்தலை தடுக்க மாநில எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ரேஷன் கடைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும். 3,997 காலிப்பணியிடங்களை மிக விரைவாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக ரேஷன் பொருட்கள் வாங்கவில்லை என்றால் காடுகள் ரத்து செய்யும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை. பொருள் தேவையில்லாதவர்கள் கௌரவ கார்டு பெற்றுக்கொள்ளலாம். இரண்டு தினங்கள் டெல்டா மாவட்டங்களில் முழுமையாக ஆய்வு மேற்கொண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் விவசாயிகளின் தேவைகளை அறிந்து அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி மற்றும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×