search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பொள்ளாச்சியில் பெண்ணிடம் நகை பறித்து தப்பிய 2 வாலிபர்கள் விபத்தில் பலி
    X

    பொள்ளாச்சியில் பெண்ணிடம் நகை பறித்து தப்பிய 2 வாலிபர்கள் விபத்தில் பலி

    • மோட்டார் சைக்கிளில் இருந்த 2 பேரும் நகை பறிப்பில் ஈடுபட்டனர்.
    • பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி கடை வீதியில் பல்வேறு வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. எனவே இங்கு எப்போதும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும்.

    இந்த நிலையில் பெண் ஒருவர் நேற்று காலை பொருட்கள் வாங்குவதற்காக பொள்ளாச்சிக்கு வந்திருந்தார். அங்கு உள்ள வெங்கட்ரமணன் வீதியில் நடந்து சென்றார். அப்போது அவரை ஒரு மோட்டார் சைக்கிள் பின்தொடர்ந்து வந்தது. அதில் 2 பேர் வந்தனர்.

    திடீரென நடந்து சென்ற பெண்ணை அவர்கள் கீழே தள்ளினர். இதில் அந்த பெண் நிலைகுலைந்து கீழே விழுந்தார். உடனே மோட்டார் சைக்கிளில் இருந்த 2 பேரும் நகை பறிப்பில் ஈடுபட்டனர். அதிர்ச்சி அடைந்த பெண் சுதாரித்து கொண்டு தங்கச்சங்கிலியை காப்பாற்றுவதற்காக கொள்ளையர்களுடன் பேராடினார்.

    இதற்கிடையே கடைவீதியில் நின்றிருந்த பொதுமக்கள் திரண்டு வந்தனர். இதனை பார்த்த 2 கொள்ளையர்களும் நகைப்பறிப்பு முயற்சியை கைவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். பொள்ளாச்சியில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள கடைவீதி பஜாரில் நடந்து சென்ற பெண்ணிடம் மோட்டார் சைக்கிள் கும்பல் துணிகர வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அங்கு பொருத்தப்பட்டு உள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்களை கைப்பற்றிய போலீசார் அவற்றில் இடம்பெற்று உள்ள காட்சிப்பதிவுகளை ஆய்வு செய்து பார்த்தனர்.

    இதில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பெண்ணை கீழே தள்ளி நகைப்பறிப்பில் ஈடுபடும் காட்சிகள் பதிவாகி இருந்தன. அப்போது மோட்டார் சைக்கிளை ஓட்டிய வாலிபர் முகக்கவசமும், பின்னால் அமர்ந்திருந்த வாலிபர் ஹெல்மெட்டும் அணிந்து இருந்தனர். இதுதொடர்பாக பொள்ளாச்சி கிழக்கு போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடிவந்தனர்.

    இந்தநிலையில் பொள்ளாச்சி மேம்பாலத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் நேற்று இரவு அதிவேகமாக வந்தது. அதில் 2 பேர் இருந்தனர். வேகமாக வந்த மோட்டார்சைக்கிள் நிலைதடுமாறி சாலை தடுப்பில் மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து இறந்தனர்.

    இதுகுறித்து பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் அந்த 2 பேரும் பொள்ளாச்சி கடைவீதியில் பெண் ஒருவரிடம் நகைப்பறிப்பில் ஈடுபட்டவர்கள் என்பது தெரிய வந்தது.

    போலீசார் 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் விபத்தில் பலியானது தாராபுரத்தை சேர்ந்த சஞ்சய்குமார் (வயது 26) என்பது தெரியவந்தது. இன்னொருவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது பற்றிய விவரம் தெரியவில்லை. இதுதொடர்பாக பொள்ளாச்சி போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொள்ளாச்சி கடை வீதியில் நடந்து சென்ற பெண்ணிடம் நகைப்பறிப்பில் ஈடுபட்ட 2 பேர், மேம்பால சாலை விபத்தில் சிக்கி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×