search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பாவூர்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் தக்காளி கிலோ ரூ.8 ஆக குறைந்தது
    X

    பாவூர்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் தக்காளி கிலோ ரூ.8 ஆக குறைந்தது

    • தக்காளியை பறிக்க பயன்படுத்தும் கூலி ஆட்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கு கூட தக்காளி விற்ற தொகை இல்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
    • இன்னும் சில நாட்களில் கேரளாவில் ஓணம் பண்டிகை வரும் என்பதால் தக்காளி விலையானது சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே காய்கறிகள் விலை சீரற்ற நிலையில் ஏற்றம் இறக்கமாக இருந்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் டவுன் நயினார்குளம் மொத்த காய்கறி மார்க்கெட்டுக்கு கடந்த சில நாட்களாக தக்காளி வரத்து அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக பாவூர்சத்திரம், ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும், மானூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் உள்ளூர் வரத்து தக்காளிகள் அதிகமாக வருகிறது.

    இதனால் தக்காளி விலை நாள்தோறும் இறங்குமுகமாக காட்சியளிக்கிறது. இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.14 முதல் ரூ.17 வரை விற்பனையானது. உழவர் சந்தையில் ஒரு கிலோ ரூ.18-க்கு விற்கப்பட்டது. மொத்த மார்க்கெட்டில் 6 கிலோ தக்காளி ரூ.100 என்று கூவி கூவி வியாபாரிகள் விற்றனர். தக்காளி விலை வீழ்ச்சியினால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

    இதேபோல் 3 கிலோ சின்ன வெங்காயம் ரூ.100-க்கு விற்கப்பட்டது. சின்ன வெங்காயமும் நெல்லை, தென்காசியில் இருந்து மார்க்கெட்டுகளுக்கு அதிக அளவில் வருவதால் விலை வெகுவாக குறைந்து விட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர். அதே நேரத்தில் சில்லறை விற்பனைக்காக வாங்கி செல்பவர்கள் ஒரு கிலோ தக்காளி ரூ.20 வரை விற்பனை செய்து வருகின்றனர்.

    தென்காசி மாவட்டத்தின் பிரதான காய்கறி சந்தையாக விளங்கி வரும் பாவூர்சத்திரம் பெருந்தலைவர் காமராஜர் தினசரி சந்தையில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் விளைவித்த காய்கறிகளை விற்பனைக்காக கொண்டு வந்து அவை ஏலம் விடப்பட்டு வருகிறது. காய்கறிகளை ஏலம் எடுப்பதற்கு உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் அதிகளவில் வியாபாரிகள் பாவூர்சத்திரம் காய்கறி சந்தைக்கு வருவார்கள்.

    பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளான பெத்த நாடார்பட்டி, மகிழ்வண்ண நாதபுரம், அடைக்கலப்பட்டணம், மேலபட்டமுடையார்புரம், ஆலங்குளம், சுரண்டை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் தக்காளி பயிரிட்டிருந்தனர். தற்பொழுது விளைச்சல் அதிகரித்துள்ளதால் பாவூர்சத்திரம் மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரித்து காணப்படுகிறது. கடந்த வாரம் வரை தக்காளி கிலோ ரூ.20 வரையில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று ரூ.8 ஆக வீழ்ச்சி அடைந்தது.

    இதனால் தக்காளியை பறிக்க பயன்படுத்தும் கூலி ஆட்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கு கூட தக்காளி விற்ற தொகை இல்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். அதேநேரம் விலை குறைவால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இன்னும் சில நாட்களில் கேரளாவில் ஓணம் பண்டிகை வரும் என்பதால் தக்காளி விலையானது சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×