search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நகர்ப்புற பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை: 4 நாட்கள் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படும்
    X

    நகர்ப்புற பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை: 4 நாட்கள் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படும்

    • விண்ணப்பங்கள் வருகிற 1-ந்தேதி முதல் 4-ந்தேதி வரை நான்கு தினங்களுக்குள் முழுமையாக விநியோகம் செய்யப்பட வேண்டும்.
    • டோக்கன்களில் முகாம் நடைபெறும் நாள், நேரம் ஆகியவற்றை தெளிவாக குறிப்பிட வேண்டும்.

    சென்னை:

    கலைஞர் மகளிர் ரூ.1000 உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் நகர்ப்புற பகுதிகளுக்கு டோக்கன் மற்றும் விண்ணப்பங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

    தலைமைச் செயலாளர் நடத்திய ஆய்வுக் கூட்டத்தில் கிராமப்புற பகுதிகளில் விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டதில் காணப்பட்ட குறைபாடுகளை களைந்து நகர்ப்புற பகுதிகளுக்கும் விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்கள் விநியோகம் குறித்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    விண்ணப்பங்கள் வருகிற 1-ந்தேதி முதல் 4-ந்தேதி வரை நான்கு தினங்களுக்குள் முழுமையாக விநியோகம் செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு நியாய விலைக்கடைக்கும் தனித்தனியாக விற்பனையாளர்கள் நியமனம் செய்யப்பட்டு குறிப்பிட்ட நாட்களுக்குள் விண்ணப்ப விநியோகத்தை முடிக்க வேண்டும்.

    500 குடும்ப அட்டைகளுக்கு ஒரு நாளைக்கு 60 வீதமும், ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு ஒரு நாளைக்கு 120 வீதமும், 1500 குடும்ப அட்டைகளுக்கு ஒரு நாளைக்கு 180 வீதமும், 2000 குடும்ப அட்டைகளுக்கு ஒரு நாளைக்கு 240 வீதமும் விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட வேண்டும்.

    எந்தெந்த பகுதிகளுக்கு எந்தெந்த நாட்களில் விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்கள் வழங்கப்படவுள்ளது என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு, அதன்படி விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட வேண்டும்.

    இவ்விபரம் சம்பந்தப்பட்ட நியாயவிலைக்கடையில் தெளிவாக குறிப்பிடப்பட்டு கடை முன்பு போஸ்டரில் வெளியிடப்பட வேண்டும்.

    ஒரு நாளைக்கான 60 டோக்கன்களை ஒட்டு மொத்தமாக அனைத்து பகுதிகளுக்கும் விநியோகம் செய்யாமல் ஒவ்வொரு குறிப்பிட்ட பகுதியாக பிரித்து டோக்கன் வழங்க வேண்டும்.

    விண்ணப்பங்களில் குடும்ப அட்டை எண் தவறாமல் எழுதப்பட வேண்டும். எழுதுவதற்கு இடம் தனியே ஒதுக்கப்பட்டுள்ளது.

    டோக்கன்களில் முகாம் நடைபெறும் நாள், நேரம் ஆகியவற்றை தெளிவாக குறிப்பிட வேண்டும். நேரத்தை பொறுத்தவரை காலை அல்லது மதியம் என்று பொதுவாக குறிப்பிடுவதை தவிர்த்து ஒவ்வொரு மணி நேர இடைவெளியில் நேரம் குறிப்பிடப்பட வேண்டும்.

    ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு டோக்கன் விநியோகம் செய்யும்போது அப்பகுதியில் இறப்பு, வீட்டில் ஆள் இல்லாதவர்கள், விண்ணப்ப படிவம் வேண்டாம் என மறுப்பு தெரிவிப்பவர்கள் விவரங்களை அவ்வப்போது குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு குறிப்பிட்ட முகாமிற்கு ஒரு நாளைக்கு எத்தனை டோக்கன்கள் வழங்கப்பட்டது. அதில் எத்தனை நபர்கள் முகாமிற்கு வருகை புரிந்துள்ளனர் என்பது போன்ற விவரங்கள் மாநில அளவில் அன்றாடம், மிகவும் நுணுக்கமாக கண்காணிக்கப்படுவதால், முகாமிற்கு தேவையான அளவை விட கூடுதலாகவோ குறைவாகவோ டோக்கன்கள் மற்றும் விண்ணப்பங்கள் வழங்குவதை தவிர்க்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×