search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கள்ளக்காதலியின் 2 மகன்களுக்கு விஷம் கொடுத்து வாலிபர் தற்கொலை
    X

    கள்ளக்காதலியின் 2 மகன்களுக்கு விஷம் கொடுத்து வாலிபர் தற்கொலை

    • கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த கவிதா தவறான சகவாசத்தால் தற்போது வாழ்க்கையையே தொலைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார்.
    • தனது 2 மகன்களும் சிகிச்சை பெற்று வரும் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் கவிதா தவியாய் தவித்து வருகிறார்.

    சென்னை:

    சென்னை கொருக்குப்பேட்டை பாரதி நகர் குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் எச். பிளாக்கில் வசித்து வருபவர் கவிதா. 32 வயதான இவருக்கும் ரசூல் என்ற வாலிபருக்கும் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 9 வயதில் ஸ்டீபன், 7 வயதில் ஆல்பர்ட் என்ற 2 மகன்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் கவிதாவும், ரசூலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து விட்டனர்.

    கவிதாவின் சொந்த ஊர் புழல் அருகே உள்ள வடபெரும்பாக்கம் ஆகும். தாய் வீட்டுக்கு அடிக்கடி சென்ற வந்த போது கவிதாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்ற வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

    இதை தொடர்ந்து ரமேஷ் கொருக்குப்பேட்டையில் உள்ள கவிதாவின் வீட்டுக்கு அடிக்கடி வரத் தொடங்கினார். அப்போது இருவரும் வீட்டில் குழந்தைகள் இல்லாத நேரத்தில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இருவருக்கும் இடையே ஏற்பட்ட இந்த உறவு மிகவும் நெருக்கமானது.

    இதன் பின்னர் நினைத்த போதெல்லாம் ரமேஷ் கள்ளக்காதலி கவிதாவின் வீட்டுக்கு செல்வதை வழக்கமாக்கிக் கொண்டார்.

    இந்த நிலையில் மகன்கள் இருவரும் பெரியவர்களாகி விட்டதால் ரமேஷ் அடிக்கடி வீட்டுக்கு வருவதை கவிதா விரும்பவில்லை. ரமேசுடனான கள்ளக்காதல் தொடர்பை கைவிட அவர் முடிவு செய்தார். இது தொடர்பாக ரமேசிடம் பேசிய கவிதா, எனக்கு மகன்களின் வாழ்க்கைதான் முக்கியம். நீ இனி வீட்டுக்கு வராதே. வந்தால் நன்றாக இருக்காது என எச்சரிக்கும் தொணியில் கவிதா கூறி இருக்கிறார்.

    ஆனால் ரமேஷ் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. நன்றாக பழகி விட்டு என்னை கழற்றிவிட நினைக்கிறாயா? என்று ரமேஷ் கவிதாவுடன் சண்டை போட்டு உள்ளார். இதனால் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு உள்ளது. இதன் பின்னர் ரமேசுடன் உல்லாசமாக இருப்பதை கவிதா தொடர்ந்து தவிர்த்து வந்தார்.

    அது ரமேசுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. இதையடுத்து தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக உள்ள கவிதாவின் 2 மகன்களையும் கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்ய வேண்டும் என்கிற விபரீத எண்ணம் அவருக்கு ஏற்பட்டது.

    கவிதாவின் மகன்களான ஸ்டீபன், ஆல்பர்ட் இருவரும் அருகில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார்கள். இருவரும் நேற்று பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பினர். அப்போது கவிதா எண்ணூரில் தான் பணிபுரியும் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்றிருந்தார். இந்த நிலையில் அவரது 2 மகன்களையும் தீர்த்துக்கட்ட திட்டமிட்ட ரமேஷ், குளிர்பானத்தில் விஷம் கலந்து அதனை எடுத்துக்கொண்டு கவிதாவின் வீட்டுக்கு சென்றார்.

    அங்கு விஷம் கலந்த குளிர்பானத்தை ஸ்டீபன், ஆல்பர்ட் இருவருக்கும் ஊற்றிக் கொடுத்தார். அதில் கலந்திருப்பது விஷம் என்று தெரியாமல் சிறுவர்கள் இருவரும் வாங்கி குடித்தனர். அப்போது விஷம் கலந்த குளிர்பானத்தை ரமேசும் குடித்துள்ளார். இதில் 3 பேரும் மயங்கி விழுந்தனர்.

    இதனை பார்த்து குடியிருப்பில் இருந்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உடனடியாக 3 பேரையும் மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ரமேஷ் சிகிச்சை பலன் அளிக்காமல் நள்ளிரவு 2.30 மணிக்கு உயிரிழந்தார்.

    ஸ்டீபன், ராபர்ட் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதை தொடர்ந்து ஆர்.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இச்சம்பவம் கொருக்குப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த கவிதா தவறான சகவாசத்தால் தற்போது வாழ்க்கையையே தொலைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார். தனது 2 மகன்களும் சிகிச்சை பெற்று வரும் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அவர் தவியாய் தவித்து வருகிறார். மகன்கள் இருவரும் உயிர் பிழைத்து விடுவார்களா? என்கிற ஏக்கத்துடன் கவிதா கண்ணீர் மல்க காத்திருக்கிறார்.

    Next Story
    ×