search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நீர்வரத்து 1000 கனஅடியாக சரிவு: ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்
    X

    ஒகேனக்கல்லில் நீர்வரத்து 1000 கனஅடி அளவில் வந்து கொண்டிருப்பதால், ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதை காணலாம்.

    நீர்வரத்து 1000 கனஅடியாக சரிவு: ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்

    • கோடை விடுமுறை மற்றும் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் ஒகேனக்கல்லுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
    • ஓட்டல்கள், கடைவீதி ஆகிய பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

    ஒகேனக்கல்:

    பருவ மழை பொய்த்து போனதாலும், கர்நாடகா மாநில அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதாலும், தமிழக-கர்நாடக எல்லைப் பகுதியில் உள்ள பிலிகுண்டுலு வழியாக செல்லக்கூடிய காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் நீர்வரத்து சரிந்து வண்ணமாக இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒகேனக்கல்லில் 200 கனஅடியாக குறைந்து இருந்தது.

    இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மற்றும் அஞ்செட்டி, கேரட்டி, நாட்ரபாளையம், ஊட்டமலை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிக்க தொடங்கியது. நேற்று காலை 1200 கன அடியாக நீர்வரத்து அதிகரித்தது. தற்போது கோடை மழை குறைந்ததால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து சற்று சரிந்து இன்று காலை 9 மணி நிலவரப்படி வினாடிக்கு 1000 கனஅடி அளவில் குறைந்து வந்து கொண்டிருக்கிறது.

    இதன் காரணமாக மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் சீராக தண்ணீர் கொட்டுகிறது. மேலும் காவிரி ஆற்றில் தண்ணீர் சீராக பாய்ந்து செல்கிறது.

    கோடை விடுமுறை மற்றும் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் ஒகேனக்கல்லுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு செல்லக்கூடிய சோதனை சவாடிகளில் சுற்றுலா வாகனங்கள் அணிவகுந்து நின்றன.

    இதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின்அருவியில் குளித்து மகிழ்ந்தனர். இதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் பரிசல் நிலையத்தில் இருந்து ஊட்டமலை வரை பரிசலில் சவாரி செய்து மகிழ்ந்தனர். இதனால் பரிசல் நிலையத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

    மேலும், ஓட்டல்கள், கடைவீதி ஆகிய பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

    ஒகேனக்கல்லில் கோடைகாலம் தொடங்கியதாலும் காவிரி ஆற்றில் சீராக தண்ணீர் செல்வதாலும், கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து மேலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்க தொடங்கின.

    Next Story
    ×