search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பெண்களின் பொருளாதார சுதந்திரம் அதிகரித்துள்ளது- மு.க.ஸ்டாலின்
    X

    பெண்களின் பொருளாதார சுதந்திரம் அதிகரித்துள்ளது- மு.க.ஸ்டாலின்

    • அரசு பஸ்களில் கட்டணமில்லா விடியல் பயணத் திட்டம் மூலம் பெண்களின் சமூக பங்களிப்பு அதிகரித்து உள்ளது.
    • வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சிக்காக மட்டுமல்லாமல் சமூக வளர்ச்சியாக இருக்க வேண்டும்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநில திட்டக் குழுவின் 5-வது கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று காலை நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, திட்டக்குழு துணைத் தலைவர் பேரா சிரியர் ஜெயரஞ்சன் மற்றும் திட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

    இதில் மாநில திட்டக்குழுவால் தயாரிக்கப்பட்ட வரைவு கொள்கைகள் மற்றும் அரசின் முன்னோடி திட்டங்களான விடியல் பயணம், இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம், மகளிர் உரிமைத்தொகை, மாணவர்களுக்கான திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு முன்னோடி திட்டங்கள் மக்களை சென்றடைந்தது தொடர்பான ஆய்வு முடிவுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட வரைவு கொள்கைகள் தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

    இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    ஆட்சி சக்கரத்தை இயக்குபவர்களாக நாங்கள் இருந்தாலும், அதற்கு வழிகாட்டுபவர்களாக நீங்கள் இருக்கிறீர்கள். நாங்கள் செல்லும் பாதையை தீர்மானிப்பவர்களாக மட்டுமல்லாமல், அதில் உள்ள நிறை குறைகளை எடுத்துச் சொல்பவர்களாகவும் நீங்கள் இருக்கிறீர்கள்.

    நீங்கள் ஒவ்வொரு துறையிலும் பல்லாண்டு கால அனுபவம் கொண்டவர்கள். தங்களது அனுபவங்களையும், சிந்தனைகளையும் எங்களுக்கு தொடர்ந்து எடுத்துரைத்து வருகிறீர்கள்.

    கலைஞர் மகளிர் உரிமைத் தொகையால் பெண்களின் பொருளாதார சுதந்திரம் அதிகரித்துள்ளது. அரசு பஸ்களில் கட்டணமில்லா விடியல் பயணத் திட்டம் மூலம் பெண்களின் சமூக பங்களிப்பு அதிகரித்து உள்ளது.

    புதுமைப் பெண் திட்டம் மூலம் கல்லூரிக்கு செல்லும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. காலை உணவுத் திட்டத்தால் மாணவர்கள் வருகையும் பள்ளியில் அதிகரித்துள்ளது.

    வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சிக்காக மட்டுமல்லாமல் சமூக வளர்ச்சியாக இருக்க வேண்டும். திராவிட மாடல் அரசின் ஒவ்வொரு திட்ட மும் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரையும் மேம்படுத்தும் திட்டமாக உள்ளது.

    மாநில திட்டக் குழுவின் அறிக்கைதான் தி.மு.க. அரசின் மதிப்பெண் சான்றிதழ் ஆகும். தொழில் வளர்ச்சி, சமூக மாற்றம், கல்வி மேம்பாடு ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும். அதற்கு உங்கள் ஆலோசனைகளையும் வழங்குங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்தக் கூட்டத்தில் வளர்ச்சி ஆணையர் முருகானந்தம், திட்டம் வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ்சந்த் மீனா, நிதித்துறை முதன்மைச் செயலாளர் உதயசந்திரன், குழு உறுப்பினர்கள் பேராசிரியர் இராம.சீனுவாசன், பேராசிரியர் விஜயபாஸ்கர், தீபைந்து, எழிலன் எம்.எல்.ஏ., மருத்துவர் அம லோற்பவநாதன், சித்த மருத்துவர் சிவராமன், முனைவர் நர்த்தகி நடராஜ், மாநில திட்டக்குழு உறுப்பினர் செயலர் சுதா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×