search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    பாபநாசம் அணை நீர்மட்டம் 95 அடியாக உயர்வு
    X

    பாபநாசம் அணை நீர்மட்டம் 95 அடியாக உயர்வு

    • சேரன்மகாதேவியில் 5 மில்லிமீட்டரும், ராதாபுரத்தில் 4 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.
    • தென்காசி, செங்கோட்டை பகுதிகளில் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது.

    நெல்லை மாவட்டத்தில் நேற்று மாநகர் மட்டுமல்லாது புறநகர் பகுதிகளிலும் பகலில் வெயில் அடித்து வந்த நிலையில் மாலை நேரத்தில் பரவலாக மழை பெய்தது. களக்காடு, சேரன்மகாதேவி, ராதாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான சாரல் மழை பெய்தது.

    அதிகபட்சமாக சேரன்மகாதேவியில் 5 மில்லிமீட்டரும், ராதாபுரத்தில் 4 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. நாங்குநேரி, களக்காட்டில் தலா 2 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. மாநகரில் மழை இல்லை. இன்றும் காலை முதலே வெயில் அடித்தது.

    அணைகளை பொறுத்த வரை கடந்த 2 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு நீர்பிடிப்பு பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது.

    143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை பகுதியில் நேற்று 13 மில்லிமீட்டர் மழை பெய்தது. அணைக்கு வினாடிக்கு 1,444 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று 1 அடி உயர்ந்த நிலையில் இன்று மேலும் 1½ அடி உயர்ந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணை நீர்மட்டம் 95 அடியை எட்டி உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் இன்று மேலும் 1 அடி உயர்ந்து 107.70 அடியை எட்டி உள்ளது. அந்த அணை பகுதியில் 11 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 63.84 அடியாக உள்ளது.

    களக்காடு தலையணையில் நீர்வரத்து குறைந்துள்ளதால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இன்று விடுமுறை என்பதால் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள தென்காசி, செங்கோட்டை பகுதிகளில் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது.

    கருப்பாநதி அணை நீர்பிடிப்பு பகுதியில் 21 மில்லிமீட்டர் கனமழை பெய்தது. குண்டாறு அணையில் 8 மில்லிமீட்டரும், கடனா அணையில் 6 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம், கடம்பூர் மற்றம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டியது. இதனால் அங்கு சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதிகபட்சமாக ஓட்டப்பிடாரத்தில் 38 மில்லிமீட்ரும், கடம்பூரில் 26 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது. கீழ அரசடி, விளாத்திகுளம், வைப்பார் பகுதிகளில் சாரல் மழை பெய்தது. கீழஅரசடியில் பெய்த 18 மில்லிமீட்டர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.

    Next Story
    ×